Published : 29 Nov 2014 11:10 AM
Last Updated : 29 Nov 2014 11:10 AM
இந்தியாவை சீர்குலைக்க பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. தொடர்ந்து சதித் திட்டங்களை தீட்டி வருகிறது, அவற்றை முறியடிப்போம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
49-வது காவல்துறை தலைவர்களின் இரண்டு நாள் மாநாடு அசாம் மாநிலம் குவாஹாட்டியில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
சிரியா, இராக்கில் செயல்படும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் இணைந்து வருகின்றனர். அந்த அமைப்பை இந்திய முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்துள்ளனர். ஆனால் சில இந்திய இளைஞர்கள் தவறான வழிநடத்துதலால் அந்த அமைப்பில் இணைந்து வருகின்றனர். இந்தப் பிரச்சினையை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.
இந்தியாவில் அல்-காய்தா கிளையைத் தொடங்குவோம் என்று அதன் தலைவர் அறிவித் துள்ளார். இதுபோன்ற தீவிரவாத அமைப்புகள் இந்தியாவில் கால் ஊன்ற அனுமதிக்கமாட்டோம். இந்திய முஸ்லிம்கள் தேசப் பற்றுமிக்கவர்கள். தேசத்துக்காக உயிர்நீத்தவர்கள். அவர்கள் ஒருபோதும் தடம் மாறமாட்டார்கள்.
பாகிஸ்தான் போர்க்கப்பலை கடத்தி இந்தியா மீது தாக்குதல் நடத்த அல்-காய்தா சதித்திட்டம் தீட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு பாகிஸ்தான் கடற்படையைச் சேர்ந்த சிலரும் ஐ.எஸ்.ஐ. அமைப்பைச் சேர்ந்த சிலரும் உதவி வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால் எத்தகைய தீவிரவாத சதிகளையும் முறியடிக்கும் திறன் நமது பாதுகாப்புப் படையினருக்கு உள்ளது.
கடல் எல்லையில் பாதுகாப்பு
1993 மற்றும் 2008 மும்பை தாக்குதலின்போது கடல் மார்க்கமாகவே தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவினர். எனவே கடல் எல்லை பாது காப்புக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம். நாட்டின் 7500 கி.மீ. நீள கடல் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத் தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT