Last Updated : 09 Jul, 2017 01:27 PM

 

Published : 09 Jul 2017 01:27 PM
Last Updated : 09 Jul 2017 01:27 PM

தன்னுடன் உறவு வைத்துக் கொண்டால் ‘மோட்சம்’: மும்பையில் பாலியல் தொந்தரவு கொடுத்த யோகா ஆசிரியர் கைது

மும்பையில் சேவ்ரி பகுதியில் யோகா வகுப்பு நடத்தி வரும் 57 வயது ஷிவ்ராம் ராவத் என்ற யோகா குரு தன்னிடம் யோகா கற்றுக் கொள்ள வந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் செய்ததாக போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

ஷிவ்ராம் ராவத் மீது புகார் எழுந்ததையடுத்து நேற்று இரவு வதாலாவில் அவரது வீட்டில் வைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டார்,

கைது செய்த அதிகாரி கூறும்போது, “குற்றம்சாட்டப்பட்டவர் ஞாயிறுதோறும் யோகா பயிற்சி வகுப்புகள் நடத்தி வந்தார். அப்போது ஒரு பெண்ணிடம் தன்னுடன் உறவு வைத்துக் கொண்டால் மோட்சம் கிட்டும் என்று கூறி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும் அவரிடம் அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளார், இது குறித்து புகார் எழுந்ததால் அவரைக் கைது செய்துள்ளோம்” என்றார்.

தொந்தரவுக்கு ஆளான பெண்ணும் அவரது கணவரும் ஆர்.ஏ.கே.மார்க் போலீஸ் நிலையத்தில் கடந்த வாரம் இந்தப் புகாரை அளித்தனர்.

பெண்ணின் கணவர் கூறும்போது, “கடந்த 6 ஆண்டுகளாக இவர் யோகா வகுப்புகள் எடுத்து வருகிறார். பெண்களை இவர் இவ்வாறு துன்புறுத்தி வருகிறார். நாங்கள் புகார் கொடுத்து அடி எடுத்து வைத்த பிறகு பாதிக்கப்பட்ட மற்ற 3-4 பெண்களும் இதே போல் புகார் கொடுக்க முன் வந்தனர்” என்றார்.

யோகா குரு ஷிவ்ராம் ராவத் கைது செய்யப்பட்டு பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் விசாரணையும் முடுக்கி விடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x