Published : 05 Jan 2017 01:00 PM
Last Updated : 05 Jan 2017 01:00 PM

ஜெ. மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரிய சசிகலா புஷ்பா மனு தள்ளுபடி

ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரி எம்.பி. சசிகலா புஷ்பா மற்றும் யுவ சக்தி இயக்கம் தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் இந்த வழக்கில் மேலும் அழுத்தம் கொடுத்தால் அபராதம் விதிக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

நீதிபதிகள் பி.சி.கோஷ், நாரிமன் அடங்கிய அமர்வு, "சட்டப்பிரிவு 32-ன் கீழ் மனு தாக்கல் செய்துள்ளீர்கள். இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம். இதில் மேலும் அழுத்தம் கொடுத்தால் அபராதம் விதிக்கப்படும்" என்றனர்.

சசிகலா புஷ்பா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், "முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியில் 280 பேர் உயிரிழந்திருக்கின்றனர். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் ரகசியம் காக்கப்பட்டதே பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. தமிழக பொறுப்பு ஆளுநர்கூட ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்கப்படவில்லை.

பதவியில் இருந்தபோது ஜெயலலிதா மறைந்தும்கூட அவரது மரணம் குறித்து தமிழக அரசு எவ்வித விசாரணைக்கும் உத்தரவிடவில்லை. ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார்.

முன்னதாக இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தி அமைப்பும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்குகள் இன்று (வியாழக்கிழமை) நீதிபதிகள் பி.சி.கோஷ், நாரிமன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

வாதமும்.. நீதிபதிகள் கருத்தும்:

தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தி அமைப்பின் வழக்கறிஞர், "ஜெயலலிதா மர்மமான முறையில் மறைந்திருக்கிறார். அவரது மரணத்தில் சதி இருப்பதாக பல்வேறு தரப்பிலும் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. எனவே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு உச்ச நீதிமன்றம் விசாரணையின் போக்கை மேற்பார்வை செய்ய வேண்டும்" என வாதாடினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "நாங்கள் எத்தகைய மேற்பார்வை செய்ய வேண்டும்" என்று கூறுகிறீர்கள். இதே போன்றதொரு மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அப்படியிருக்கும்போது சட்டப்பிரிவு 32-ஐ மேற்கோள் காட்டி எப்படி நீங்கள் உச்ச நீதிமன்றத்தை நாட முடியும். இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இந்த வழக்கில் மேலும் அழுத்தம் கொடுத்தால் அபராதம் விதிக்கப்படும்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x