Last Updated : 06 Jan, 2015 12:16 PM

 

Published : 06 Jan 2015 12:16 PM
Last Updated : 06 Jan 2015 12:16 PM

ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு: உச்ச நீதிமன்ற உத்தரவு நகலுக்கு சு.சுவாமி போராட்டம்

ஜெயலலிதா வழக்கில் வாதிட தனக்கு அனுமதி வழங்கக் கோரி சுப்பிரமணியன் சுவாமி போராடி வருகிறார்.

ஊழல் தடுப்புச் சட்டத்தை மேற்கோள் காட்டி, ஜெ.வழக்கில் வாதிட தனக்கு அனுமதி வழங்குமாறு அவர் உச்ச நீதிமன்ற அமர்வு முன் கோரிக்கை வைத்துள்ளார்.

ஜெ. வழக்கு விசாரணையில் தன்னையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி நேற்று (திங்கள்கிழமை) மனு தாக்கல் செய்தார்.

அப்போது, ஜெ. வழக்கில் வாதிட அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்ற ஆணையின் நகலை சமர்ப்பித்த பிறகு மனு குறித்து பரிசீலக்கப்படும் என நீதிபதி தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, ஜெ. வழக்கில் வாதிட உச்ச நீதிமன்றம் தனக்கு ஏற்கெனவே வழங்கிய அனுமதி தொடர்பான நகலைக் கோரி சு.சுவாமி உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு முன்னர் இந்த வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜெ. வழக்கில் அரசுக்கு ஆதரவாக வாதிட தனக்கு சிறப்பு அனுமதி வழங்கிட வேண்டும் என்றார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள், "ஜெ. மேல் முறையீட்டு வழக்கில் வாதிட கர்நாடக உயர் நீதிமன்றத்தில்தான் நீங்கள் முதலில் அனுமதி பெற வேண்டும்.

மேலும், கர்நாடக உயர் நீதிமன்றம் உங்கள் (சு.சுவாமி) மனு மீது ஏதாவது உத்தரவு பிறப்பிக்கும் முன்னர் மீண்டும் அந்த நீதிமன்றத்தை அணுகுங்கள்" என்றனர்.

மூத்த வழக்கறிஞர் ஆஜராகவில்லை:

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான‌ சொத்துக்குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது.

இந்நிலையில், ஜெயலலிதா தரப்பில் ஆஜராக டெல்லியில் இருந்து வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் இன்றும் ஆஜராகவில்லை. இதனால் பி.குமார் ஜெ. தரப்பில் ஆஜரானார்.

முன்னதாக நேற்று, "மேல் முறையீட்டில் டெல்லியைச் சேர்ந்த‌ மூத்த வழ‌க்கறிஞர் வாதிட இருக்கிறார். எனவே வழக்கை வருகிற 12-ம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும்" என பி.குமார் விடுத்த கோரிக்கையை நீதிபதி கண்டிப்புடன் மறுத்துவிட்டார் என்பது கவனிக்கத்தக்கது.

இந்நிலையில், இன்று ஆஜரான ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி.குமார், ஜெயலலிதா 1991- 96 வரை முதலமைச்சராக இருந்தபோது வாங்கிய அசையும், அசையா சொத்துகள் குறித்து எடுத்துரைத்தார்.

வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

திமுக மனு:

ஜெயலலிதா மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையில் அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்க வேண்டும் என திமுக தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x