Published : 14 Aug 2015 07:53 PM
Last Updated : 14 Aug 2015 07:53 PM

ஜனநாயக அமைப்புகளில் தவறுகளைத் திருத்தும் தருணம் வந்துவிட்டது: குடியரசுத் தலைவர் உரை

நமது ஜனநாயக அமைப்புகளுக்கு தற்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று குறுப்பிட்டுள்ள குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி,அதுபற்றி மக்களும் அரசியல் கட்சிகளும் தீவிரமாக பரிசீலிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது என்றும், தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டிய கடமையும் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில், எதிர்க்கட்சிகளின் அணுகுமுறையால் ஏற்பட்ட கடுமையான முடக்கத்தின் எதிரொலியாக, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இவ்வாறு தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.

நாட்டின் 69-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் முழு வடிவம்:

கைலாஷ் சத்யார்த்திக்கு வாழ்த்து:

நமது நாட்டின் 69-ஆவது சுதந்திர தினத்தன்று உங்களுக்கும் உலகம் முழுவதும் வாழும் இந்திய மக்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது இராணுவ வீரர்கள், துணை இராணுவப் படையினர் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு படை வீரர்கள் அனைவருக்கும் எனது சிறப்பு வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

நம் நாட்டிலும், வெளிநாடுகளிலும், பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை குவித்த நம் நாட்டின் விளையாட்டு வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் எனது வாழ்த்துக்கள்.

2014ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்று நாட்டிற்கே பெருமை சேர்த்த திரு. கைலாஷ் சத்தியார்த்திக்கும் எனது வாழ்த்துக்கள்.

இந்திய அரசியல் சாசனம் ஜனநாயகத்தின் வலுவான அடித்தளம்:

1947 ஆகஸ்ட் 15 அன்று நாம் அரசியல் சுதந்திரம் பெற்றோம். நவீன இந்தியா பிறந்தது வரலாற்று மகிழ்ச்சி நிலை கொண்ட தருணத்தில் தான். எனினும், நாடு முழுவதும் சந்தித்த சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்தும், ரத்தம் சிந்தியும் இந்த பெருமையை பெற முடிந்தது. பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக நாடு முழுவதும் பீறிட்டெழுந்த வரலாற்று சிறப்பு மிக்க போராட்டத்தின் உந்து சக்தியாக இருந்த நமது கொள்கைக்கும் அர்ப்பணிப்புக்கும் இப்போது ஆபத்து உருவாகி உள்ளது.

இந்த சவாலை நமது நாட்டின் சுதந்திர போராட்ட வீரர்கள் தலைமுறை எதிர்கொண்டது. உணர்வுக்கும், கோபத்துக்கும் இரையாகாமல் நமது கொள்கைகளை பாதுகாத்த பெருமை பரிபக்குவம் மிக்க அந்த தலைமுறையையே சாரும். நமது இந்தியாவின் பண்பட்ட நாகரீகம் மற்றும் ஞானம் காரணமாக முகிழ்த்த மறுமலர்ச்சியால் உந்தப்பட்டு நமது சுதந்திரத்தை பெற்ற சுதந்திரம் நமது பெருமையையும், சுய கவுரவத்தையும் அரசியல் சாசனத்தின் வடிகட்டி கொடுக்கப்பட்டதற்கு இந்த மகத்தான தலைவர்களே காரணம். மகோன்னதத்தை நோக்கி நம் நாட்டை அழைத்து செல்லும் அரசியல் சாசனத்தை நாம் பெற்றுள்ளோம்.

இந்த அரசியல் சாசனம் நமக்கு தந்துள்ள விலைமதிப்பற்ற வெகுமதிதான் ஜனநாயகம். நமது தொன்மையான விழுமியங்களை மிளிரச்செய்து நவீன காலத்திற்கு ஏற்ப பல்வேறு சுதந்திரங்களை பெற்று தந்ததும் அந்த அரசியல் சாசனம்தான். நாம் பெற்ற சுதந்திரத்தை ஒடுக்கப்பட்டவர்களுக்கும் ஏதுமில்லாதோருக்கும் வாழ்வதற்கான வாய்ப்பாக மாற்றிதும், சமத்துவத்தை தந்ததும் அந்த அரசியல் சாசனம் தான். சமூக அநீதியில் சிக்கி தவித்த கோடிக்கணக்கான மக்களுக்கு பாரபட்சத்தை நீக்கி சமத்துவத்தை நிலைநாட்டியதும், பாலின வேறுபாட்டை நீக்கி, புரட்சியை உருவாக்கி முன்னேற்றத்தின் எடுத்துக்காட்டாக நாட்டை மாற்றியதும் அந்த அரசியல் சாசனம்தான்.

பண்டைக்கால பழக்கங்களையும், விதிகளையும் நீக்கி கல்வி மற்றும் வேலை வாய்ப்பு மூலம் பெண்களின் மாற்றத்தை உறுதிபடுத்தினோம்.இந்த கொள்கையின் அடிப்படையில்தான் நமது அமைப்புகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

நாம் பெற்றுள்ள இந்த பெருமையை பேணிப் பாதுகாக்க மிகுந்த கவனம் செலுத்துவது அவசியம். நமது ஜனநாயக அமைப்புகளுக்கு தற்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளது. விவாதங்களுக்கு உரிய நாடாளுமன்றம் மோதல் களமாக மாற்றப்பட்டுள்ளது. அரசியல் நிர்ணய சபையில், 1949ஆம் ஆண்டு நமது அரசியல் சாசனத்தை உருவாக்கிய குழுவின் தலைவர் டாக்டர் அம்பேத்கர் கூறியதை இங்கு நினைவுகூற விரும்புகிறேன்.

“நமது அரசியல் சாசனத்தின் செயல்பாடு என்பது அரசியல் சாசன ஷரத்துக்களை மட்டுமே சார்ந்தது அல்ல, அரசின் அங்கமான நாடாளுமன்றம், நிர்வாகம், நீதித்துறை ஆகியவற்றைத்தான் அரசியல் சாசனம் வழங்க முடியும். மக்களும் அவர்கள் உருவாக்கும் அரசியல் கட்சிகள் பின்பற்றும் அரசியலை பொறுத்தே அரசின் இந்த உறுப்பு அமைப்புகள் இயங்கும். இந்திய மக்களும் அவர்களின் கட்சிகளும் எதிர்காலத்தில் எந்த அணுகுமுறையை மேற்கொள்வார்கள் என்பதை எப்படி கணிக்க முடியும்” என்று டாக்டர் அம்பேத்கர் கூறியிருந்தார்.

நமது ஜனநாயக அமைப்புகளுக்கு அபாயம் ஏற்படுமானால், அது பற்றி மக்களும் அரசியல் கட்சிகளும் தீவிரமாக பரிசீலிக்க வேண்டிய தருணம் வந்து விட்டது. தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டிய கடமையும் ஏற்பட்டுள்ளது.

இயற்கை விதிகளை மீறினால் அது அழிவு சக்தியாக மாறும்:

நமது நாட்டின் உயர்வு என்பது நமது பண்பாட்;டின் பலத்தை பொறுத்து மட்டுமின்றி, பொருளாதார வளர்ச்சி நாட்டின் இயற்கை வளம் மக்களுக்கு பங்கிடப்பட்ட விதம் ஆகியவற்றை பொறுத்தே மதிப்பிடப்படும்.

நமது பொருளாதாரம் எதிர்காலத்தில் நமக்கு பல நம்பிக்கைகளை அளிக்கிறது. இந்திய வரலாற்றில் புதிய அத்தியாயங்கள் இனிதான் எழுதப்படவேண்டும். பொருளாதார சீர்திருத்தம் தொடர்ந்து நடைபெறுகிறது. கடந்த பத்தாண்டுகளில் நமது செயல்பாடு போற்றத்தக்கதாக இருந்தது. இடையில் தொய்வு

ஏற்பட்டபோதிலும், 2014-15ஆம் ஆண்டில் 7.3 சதவீத வளர்ச்சியைப் பெற்றோம். இந்த வளர்ச்சியின் பலன் வங்கிகளில் செல்வந்தர்களின் கணக்கில் சேருவதற்கு முன்னதாகவே, வறியவர்களின் கணக்கில் சேர வேண்டும். நமது ஜனநாயகம், உள்ளடக்கிய ஜனநாயகம், நமது பொருளாதாரமும் உள்ளடக்கிய பொருளாதாரமும் என்ற வகையில் செல்வத்தின் பலனை துய்க்கும் உரிமை அனைவருக்கும் உண்டு. ஏதுமற்றவர்களாக வாழ்வோருக்குத்தான் நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும். வெகுவிரைவிலேயே பசி பிணிக்கு முடிவு கட்டக்கூடியதாக நமது கொள்கைகள் வகுக்கப்படவேண்டும்.

மனிதர்களுக்கும், இயற்கைக்கும் இடையே உள்ள நெருக்கமான பிணைப்பு பேணப்படவேண்டும். நமக்கு தாராளமாக அள்ளிதரும் இயற்கை அதற்கான விதிகளை நாம் மீறினால் அழிவு சக்தியாக மாறி உயிருக்கும் உடமைக்கும் பெரும் கேட்டை விளைவிக்கக்கூடும். நான் இங்கே உரையாற்றிக் கொண்டிருக்கும் இதே நேரத்தில், நமது நாட்டின் பல பகுதிகள் வெள்ள பாதிப்பிலிருந்து சிறுக சிறுக மீண்டு வருகின்றன. அதில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு உடனடி நிவாரணத்தையும் நீண்டகால தீர்வையும் காண்பது அவசியம். வெள்ளம் ஏற்படாமல் தடுப்பதற்கும், மழையின்றி ஏற்படும் வறட்சியை சமாளிக்கவும் நாம் நீண்டகால திட்டங்களை நிறைவேற்றி ஆக வேண்டும்.

இன்றைய கல்வி முறையில் பாரம்பரியம் பின்பற்றப்படுகிறதா?

கடந்த கால கொள்கைகளை ஒரு நாடு மறக்குமானால், எதிர்காலத்தை இழந்துவிடும். கல்வி கற்கும் தலைமுறையின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு ஏற்ப நமது கல்விக்கூடங்களின் எண்ணிக்கையும் பல்கி பெருகி வருகிறது. ஆனால், இங்கு கற்பிக்கப்படும் கல்வியின் தரம் எப்படிப்பட்டது என்பதை அடி முதல் நுனி வரை பார்த்தாக வேண்டும். நமது நாடு பின்பற்றி வந்த குரு -சீடர்; பாரம்பரியத்தை பெருமைக்குரியதாக நாம் கூறுகிறோம். அந்த பாரம்பரியத்தில் நிலவிய அர்ப்பணிப்பு, உறுதிப்பாடு, உறவு முதலியவற்றை ஏன் கைவிட்டோம். மண்ணை பக்குவமாக பிசைந்து மண்பாண்டத்தை உருவாக்கும் திறமை மிக்க

குயவர் போன்று சீடர்களை உருவாக்குவதே சிறந்த குரு ஆவார். அர்ப்பணிப்புடனும், எளிமையுடனும் குருவுக்கு கடன்பட்டவராக விளங்கினார்கள் மாணவர்கள். ஆசிரியரின் அறிவாற்றலை சமுதாயமும் அங்கீகரித்து மதித்தது.

இன்றைய கல்வி முறையில் அந்த பாரம்பரியம் பின்பற்றப்படுகிறதா? மாணவர்களும், ஆசிரியர்களும் நிறுவனங்களின் நிர்வாகிகளும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய விஷயம் இது.

சமூக இணக்கத்தை தகர்க்க சுயநல சக்திகள் முயல்கின்றன:

நமது ஜனநாயகம், ஆக்கப்பூர்வமானது, பன்முகத் தன்மை கொண்டது, அதே சமயம், அதன் பன்முகத்தன்மையை காக்க சகிப்புத் தன்மையும், பொறுமையும் அவசியம். பல நூறு ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வந்த மதச்சார்பின்மைக்கு வேட்டு வைத்து நமது சமூக இணக்கத்தை தகர்க்க சுய நல சக்திகள் முயல்கின்றன. உடனுக்குடன் தகவல் பரிமாற்றம் செய்யக்கூடிய இந்த நவீன தொலைத்தொடர்பு தொழில்நுட்ப காலத்தில் நமது மக்களின் ஒற்றுமைக்கு கேடு விளைவிக்கும் இத்தகைய சுய நல சக்திகளின் தீய எண்ணங்கள் பரவாமல் விழிப்புடன் இருப்பது அவசியம். மக்களுக்கும் அரசுக்கும் சட்டத்தின் ஆட்சி புனிதமானது. ஆனால், சட்டத்தைவிட மேன்மையான ஒன்று சமூதாயத்தைக் காத்து வருகிறது. அது தான் மனித நேயம்.

மகாத்மா காந்தி, வாய்மொழியில் சொல்வதென்றால், “மனித நேயம் மீது நம்பிக்கை இழக்கக்கூடாது, மனித நேயம் பெருங்கடல் போன்றது, அதில் ஒரு சில துளிகள் அழுக்காக இருக்கலாம், அதற்காக பெருங்கடலையே அழுக்காக்கிவிடாது” என்றார்.

பாதுகாப்புக்கு ஊறுவிளைவிக்கும் சக்திகளை பார்த்துக் கொண்டிருக்க முடியாது:

நாடுகளையும், மக்களையும் ஒருங்கிணைப்பது அமைதியும், நட்பும் ஒத்துழைப்பும்தான். இந்திய துணை கண்டத்தின் இந்த கொள்கையை அங்கீகரித்து மக்களிடையே இணைப்பை வலுப்படுத்தி பரஸ்பரம் நம்பிக்கையையும் பிராந்தியஒத்துழைப்பையும் விரிவுபடுத்தியாக வேண்டும். ஒரு புறம் உலகளாவிய நமது நலன்களை முன்னெடுத்துச் செல்லும் அதே வேளையில் உள்நாட்டிலும், அண்டை நாடுகளிலும் நல்லுறவும், வளத்தையும் வளர்த்துக் கொள்வதில் இந்தியா ஈடுபட்டுள்ளது. வங்காள தேசத்திற்கும் நமது நாட்டுக்கும் இடையே நீண்டகாலம் தீர்க்கப்படாமல் இருந்த எல்லைப் பிரச்சினைக்கு இப்போது தீர்வு காணப்பட்டு இருப்பது இதமளிக்கிறது.

நாம் நேசக்கரத்தை நீட்டும் அதே வேளையில் நமது பாதுகாப்புச் சூழலுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் வேண்டுமென்றே நடத்தப்படும் ஆத்திரமூட்டும் செயல்களை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நமது எல்லைக்கு அப்பாலிருந்து செயல்படும் பயங்கரவாத குழுக்கள் இந்தியாவை குறிவைக்கின்றன. இந்த பயங்கரவாதிகளுக்கு மதமோ, கொள்கையோ கிடையாது, பயங்கரவாத பாதையும், வன்முறையும்தான் அவர்களுக்கு தெரியும்.

இந்தியாவுக்கு எதிராக விஷமத்தனத்தில் ஈடுபட பயங்கரவாதிகளுக்கு தங்கள் நிலப்பரப்பில் நமது அண்டை நாடுகள் அனுமதி அளிக்கக்கூடாது. பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக் கொள்வதில்லை என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். அரசு ரீதியாக பயங்கரவாதம், ஏவிவிடப்படும் முயற்சியையும் நாம் அனுமதிக்க மாட்டோம். நமது எல்லைக்குள் ஊடுருவுவதையும் நாசகார வேலைகளில் ஈடுபடுவதையும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவோம்.

இந்திய பாதுகாப்புக்காக தங்கள் இன்னுயிரை ஈந்த மகத்தான தியாகிகளுக்கு எனது அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது நாட்டின் எல்லையை பாதுகாக்க இரவு பகலாக விழிப்புடன் பணியாற்றும் நமது படை வீரர்களுக்கு எனது வணக்கத்தை உரித்தாக்கி உள்ளேன். தங்கள் உயிரை துச்சமென மதித்தும் பயங்கரவாதிகளை பிடித்து ஒப்படைத்த மக்களுக்கும் எனது பாராட்டுக்கள்.

பதில்கள் கசப்பானவை..

130 கோடி மக்களையும், 122 மொழிகளையும், ஆயிரத்து 600 வட்டார மொழிகளையும், ஏழு மதங்களையும் கொண்டு கலப்பு கலாச்சாரத்தை கொண்டது நமது நாடு. முரண்பாடுகளுக்கு இடையேயும், உடன்பாட்டை காணும் பலம்தான் நமது நாட்டின் அடிப்படை சக்தி.

பண்டித ஜவகர்லால் நேரு கூறியதை நினைவுகூர்ந்தால், வலுவான, கண்ணுக்கு தெரியாத நூல் இழையால் பிணைக்கப்பட்டது நமது நாடு. நீண்டகால பாரம்பரியமும், ஒருமித்த சிந்தனையும் கொண்டது, ஒரு மாயையாகவும் அதே சமயம் கருத்துருவாகவும், கனவாகவும் அதே சமயம் தொலைநோக்கு பார்வை கொண்டதாகவும் விளங்குவது நமது நாடு. எனினும், நிச்சயமானதாகவும், அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைப்பதாகவும் உள்ளது நமது நாடு, என்று குறிப்பிட்டார்.

நமது அரசியல் சாசனம் வகுத்தளித்துள்ள அடித்தளத்தில் துடிப்புள்ள ஜனநாயகம் பூத்துக் குலுங்குகிறது. இதன் வேர்கள் ஆழமானவை. அதன் இலைகள் உதிரத்தொடங்கியுள்ளன. எனவே, அதனை புதுப்பிக்க வேண்டிய தருணம் வந்து விட்டது.

நாம் இப்போதே செயல்பட தவறிவிட்டால், 70 ஆண்டுகளுக்கு முன் 1947ல் இந்தியாவின் கனவை வடிவமைத்த நமது முன்னோர்கள் பெற்ற அதே மதிப்பை நமது சந்ததியினர் நம் மீது காட்டுவார்களா?

இதற்கான பதில் கொஞ்சம் கசப்பாக இருக்கலாம். ஆனால், கேள்வி கேட்கப்பட்டே ஆக வேண்டும். ஜெய்ஹிந்த்!"

இவ்வாறு சுதந்திர தின உரையில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x