Published : 09 Jul 2017 05:41 PM
Last Updated : 09 Jul 2017 05:41 PM
சீன அரசின் அழுத்தத்துக்கு பணிந்து அந்நாட்டு எல்லையிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
சிக்கிம் மாநில எல்லையில் இந்தியா, சீனா, பூடான் ஆகிய 3 நாடுகளின் எல்லைகளும் டோகா லா என்ற பகுதியில் சந்திக்கின்றன. இந்தப் பகுதிக்கு சீனாவும் பூடானும் உரிமை கொண்டாடுகின்றன. இந்நிலையில் டோகா லா பகுதியில் சீன ராணுவம் சாலை அமைக்க முயற்சி செய்தது. இதனால் இந்தியாவை கண்காணிக்க சீன ராணுவம் திட்டமிட்டுள்ளதாக கருதப்படுகிறது.
இதையடுத்து, சாலை போடும் பணியை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியதால், இரு தரப்புக்கும் இடையே கடந்த ஒரு மாதமாக மோதல் நீடிக்கிறது. இதனால் இரு நாட்டு ராணுவமும் அப்பகுதியில் ராணுவத்தை குவித்துள்ளதால் போர் பதற்றம் நிலவுகிறது.
இதனிடையே, எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள ராணுவ வீரர்களை திரும்பப் பெற வேண்டும் என சீன அரசு வலியுறுத்தியது. இந்த விவகாரத்தில் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்றும், இந்தியாதான் முடிவு எடுக்க வேண்டும் என்றும் சீனா தெரிவித்திருந்தது. ஆனால், சீன அரசின் அழுத்தத்துக்கு அடிபணியப் போவதில்லை என இந்திய ராணுவம் சூசகமாக தெரிவித்துள்ளது.
அதாவது, டோகா லா பகுதியை ஒட்டிய எல்லையில் நீண்ட தூரத்துக்கு ராணுவ வீரர்களை இந்தியா தயார் நிலையில் நிறுத்தி வைத்துள்ளது. இதன்மூலம், சீன ராணுவத்துடனான மோதல் முடிவுக்கு வரும் வரை இப்போதுள்ள நிலையைத் தொடர இந்தியா முடிவு செய்துள்ளதாக ராணுவ அதிகார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதேநேரம், இரு நாடுகளுக்கிடையிலான இந்தப் பிரச்சினைக்கு விரைவில் சுமுக தீர்வு கிடைக்கும் என கடந்த கால நிகழ்வை சுட்டிக்காட்டி இந்திய ராணுவம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்தியா-சீனா இடையிலான எல்லை பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பது தொடர்பாக 2012-ல் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT