Published : 18 Jan 2017 03:07 PM
Last Updated : 18 Jan 2017 03:07 PM
அனுமதியற்ற, சட்டவிரோத ஆயுதங்களைப் பயன்படுத்தி நடிகர் சல்மான் கான் மான் வேட்டை நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் அவரை விடுவித்து உத்தரவிட்டது ஜோத்பூர் நீதிமன்றம்.
அதாவது அரசுதரப்பு தங்கள் வழக்கிற்கான தகுந்த ஆதாரங்களையும், சாட்சியங்களையும் ஐயத்திற்கிடமின்றி நிரூபிக்கவில்லை எனவே சந்தேகத்தின் பலனை கானுக்குச் சாதகமாக்கி நீதிபதி தல்பத் சிங் ராஜ்புரோஹித் சல்மான் கானை குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிப்பதாகத் தீர்ப்பளித்தார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கடந்த 1998-ம் ஆண்டு ’ஹம் சாத் சாத் ஹெய்ன்’ என்ற படத்தின் சூட்டிங் நடந்தது. இதில் நடிகர்கள் சல்மான் கான், சயீப் அலிகான் நடிகை கள் தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.படப்பிடிப்பு ஓய்வு நேரத்தில் நடிகர் சல்மான்கான் ஜோத்பூர் அருகில் உள்ள கன்கனி வனப்பகுதிக்கு சென்று மான் வேட்டையில் ஈடுபட்டார். அவர் துப்பாக்கி யால் சுட்டதில் அரிய வகை மான் இனமான சின்காராஸ் மற்றும் பிளாக்பக்ஸ் என்ற வகைளைச் சேர்ந்த 3 அரிய மான்கள் கொல்லப்பட்டன.
இதையடுத்து நடிகர் சல்மான்கான் மீது வன விலங்கு வேட்டையாடுதல் தடை சட்டத்தின் கீழ் ஜோத்பூர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதில் நடிகர் சல்மான்கான் சட்ட விரோத ஆயுதங்களை பயன்படுத்தி மான்வேட்டை நடத்தியதாக கூறப்பட்டது.
கடந்த ஜூலையில் சின்காரா மான்களை வேட்டையாடிய 2 வழக்குகளிலிருந்து சல்மான் கான் விடுவிக்கப்பட்டார். ஆனால் கன்கனி கிராம விவகார வழக்கு இன்னமும் முடியடையவில்லை.
சட்டவிரோத ஆயுத வழக்கு சல்மான் கான் மீது தொடுக்கப்பட்ட 4 வழக்குகளில் ஒன்றாகும். இதில் ராஜஸ்தான் நீதிமன்றம் 2 மான் வேட்டை வழக்குகளிலிருந்து அவரை விடுவித்தது. ஆனால் பிளாக்பக்ஸ் வேட்டை வழக்கு இன்னும் நடந்து கொண்டு இருக்கிறது.
நீதிமன்றம் சல்மான் கானை விடுவித்ததையடுத்து நீதிமன்ற வாசலில் கூடியிருந்த சல்மான் ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பும் இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT