Published : 23 Jan 2015 11:59 AM
Last Updated : 23 Jan 2015 11:59 AM

ஒபாமா வருகை எதிரொலி: மும்பை சித்திவிநாயகர் கோயிலுக்கு தீவிரவாத அச்சுறுத்தல்

அமெரிக்க அதிபர் ஒபாமா வருகையையொட்டி, மும்பை சித்திவிநாயகர் கோயிலை தாக்க தீவிரவாதிகள் திட்டம் தீட்டியுள்ளதாக வந்த உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து, அந்தக் கோயிலுக்கு பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 28-ம் தேதிக்கு முன்னர் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ஆதரவு ஜிகாதி அமைப்புகள் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. ஜமாத்-உத்-தாவா, லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது, ஹிஸ்புல் முஜாகிதீன் ஆகிய அமைப்புகள் சதித் திட்டத்தில் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகிறது.

தீவிரவாத குழுவினர் ஒரு பிரிவினர் மகாராஷ்டிராவிலும், மற்றொரு பிரிவு உத்தரப்பிரதேசத்திலும், ராஜஸ்தான் மற்றும் ஒடிசாவில் சிலரும் பதுங்கியிருப்பதாக தகவல் வந்துள்ளது.

மகாராஷ்டிராவில் ஊடுருவியுள்ள தீவிரவாதிகள் மும்பை சித்தி விநாயகர் கோயிலில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக வந்த தகவலையடுத்து, அங்கு பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், ஒடிசா மாநில அரசுகளுக்கும் பாதுகாப்பு, கண்காணிப்பை அதிகரிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட எச்சரிக்கைக் குறிப்பில், லஷ்கர் இ தொய்பா தலைவர் ஹபீஸ் சையத் உத்தரவின் பேரில் இந்தியாவுக்குள் ஊடுருவ 10 பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாகவும், அவர்கள் தற்போது பாகிஸ்தானின் சியால்கோட் மாகாணத்தில் முகாமிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒபாமா தங்கும் ஹோட்டலில் கூடுதல் பாதுகாப்பு

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தங்கும் ஐ.டி.சி. மவுரியா ஓட்டலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. அங்கு மொபைல் ஜேமர்கள் பொருத்தப்பட்டுள்ளதோடு. ஹோட்டல் ஊழியர்கள் மொபைல் கொண்டு செல்லவும் தடை செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x