Published : 26 Jan 2015 05:51 PM
Last Updated : 26 Jan 2015 05:51 PM

ஒபாமாவுடன் மன்மோகன், சோனியா, ராகுல் சந்திப்பு

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினர்.

நாட்டின் 66-வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக 3 நாள் பயணமாக நேற்று முன்தினம் டெல்லி வந்தடைந்தார் ஒபாமா. நேற்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஒபாமா பங்கேற்றார்.

பின்னர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மன்மோகன் சிங், சோனியா, ராகுல் காந்தி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா உள்ளிட்டோர் ஒபாமா தங்கியுள்ள ஐடிசி மவுரியா ஓட்டலுக்கு சென்று அவரை சந்தித்துப் பேசினர். ஆனால் என்ன பேசினார்கள் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

ஒபாமாவை கவுரவிக்கும் வகையில் நேற்று முன்தினம் குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற விருந்தில் சோனியா காந்தி பங்கேற்றார். ஆனால் ராகுல் பங்கேற்கவில்லை.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியா வந்திருந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்கை காங்கிரஸ் கட்சியினர் அவரை சந்தித்துப் பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒபாமா அதிபரான பிறகு இந்தியாவுக்கு வந்திருப்பது இது 2-வது முறையாகும். கடந்த 2010-ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவுக்கு வந்தபோது மன்மோகன் சிங் பிரதமராக இருந்தார். அப்போது, மரபுக்கு மாறாக விமான நிலையத்துக்கே சென்று ஒபாமாவையும் அவரது மனைவி மிஷெலையும் மன்மோகன் சிங் வரவேற்றார்.

இதுபோல இந்த முறையும் பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்துக்கே சென்று ஒபாமாவை வரவேற்றார். இந்த நிகழ்வு இருதரப்பு உறவு வலிமையாக உள்ளதை வெளிப் படுத்தும் விதமாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x