Published : 18 Jan 2017 05:17 PM
Last Updated : 18 Jan 2017 05:17 PM
ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன் சகோதரர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்வது தொடர்பாக வரும் 24-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என டெல்லி சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவும், மாறன் சகோதரர்கள் உள்ளிட்டோர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான உத்தரவும் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், உத்தரவு இன்னும் முழுமையாக தயாராகவில்லை எனக் கூறி நீதிபதி ஓ.பி.சைனி தீர்ப்பை வரும் 24-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
தயாநிதி மாறன் மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு முறைகேடாக குறைந்த விலைக்கு விற்க வைத்ததாகவும், அதற்கு பதிலாக அவர்கள் குடும்ப நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்ததாகவும் குற்றசாட்டு எழுந்தது.
இதனை விசாரித்த அமலாக்கத்துறை அதிகாரிகள் தயாநிதி மாறன் மட்டும் இல்லாது அவருடைய மனைவி, சகோதரர் கலாநிதி மாறன் மற்றும் நிறுவன உயர் அதிகாரிகள் பலர் மீதும் குற்றம் சாட்டியது. இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக போதுமான ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவித்தது.
இவ்வழக்கில் ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சி.பி.ஐ நீதிமன்றத்தில் இவர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் கிரிமினல் சதித் திட்டம் தீட்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றசாட்டு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், அமலாக்கப்பரிவினர் தொடர்ந்த வழக்கில் மாறன் சகோதரர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு பதிவு செய்வது தொடர்பான தீர்ப்பை வரும் 24-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.
அமலாக்கப் பிரிவின் குற்றச்சாட்டுகளை மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட குற்றஞ்சாட்டப்பட்ட 6 பேரும் மறுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT