Published : 04 Jun 2019 02:11 PM
Last Updated : 04 Jun 2019 02:11 PM
கோவையில் இருசக்கர வாகனத்தில் சென்றவரிடம் 900 கிராம் நகையைத் திருடிய இருவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை சலீவன் வீதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (52). அதே பகுதியில் சுபேஷ்குமார் என்பவருக்குச் சொந்தமான பட்டறையில் ஊழியராக வேலை செய்கிறார். இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11.25 மணிக்கு ராமமூர்த்தி 900 கிராம் நகையை எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் காந்திபுரம் பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு பேருந்து மூலம் தாராபுரம் சென்று வாடிக்கையாளரிடம் நகையை ஒப்படைக்கத் திட்டமிட்டு இருந்தார். பேருந்து நிலையம் செல்லும் வழியிலுள்ள ராமர் கோயில் அருகே ராமமூர்த்தி வந்த போது பின்னால் வந்த இருசக்கரவாகனம் இவரது வாகனத்தின் மீது மோதியது.
இதில் ராமமூர்த்தி கீழே விழுந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரில் ஒருவர் ராமமூர்த்தியைத் தூக்கி விட்டார். மற்றொரு நபர் அவரிடம் இருந்த 900 கிராம் நகைப் பையை வாங்கினார். அதன் பின்னர் அந்த நபர்கள் ராமமூர்த்தியிடம் இருந்து 900 கிராம் நகை இருந்த பையை திருடிக் கொண்டு தப்பிச் சென்றனர். இந்த நகையின் மதிப்பு ரூ.28 லட்சம் ஆகும். இந்தச் சம்பவம் தொடர்பாக காட்டூர் போலீஸார், சிசிடிவி காட்சி பதிவுகளை ஆராய்ந்து விசாரித்து வருகின்றனர்.
ராமமூர்த்தி மீது வாகனத்தை மோதிய தேனியைச் சேர்ந்த ராஜா என்பவரிடம் விசாரித்து வரும் போலீஸார், நகையை திருடிச் சென்ற மற்ற 2 பேர் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT