Published : 29 Mar 2019 10:02 AM
Last Updated : 29 Mar 2019 10:02 AM
ஆர்.கே.நகரில் டோக்கன் கொடுத்த டிடிவி.தினகரனுக்கு பரிசுப் பெட்டி சின்னம் பொருத்தமானதுதான் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
டிடிவி.தினகரனின் அமமுக கட்சிக்கு, பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பரிசுப் பெட்டி சின்னம் குறித்து, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்ததாவது:
ஆர்.கே.நகரில் ஏற்கெனவே டோக்கன் கொடுத்து ஏமாற்றினார் டிடிவி.தினகரன். இப்போது பரிசுப் பெட்டி சின்னம் கொடுத்திருக்கிறது தேர்தல் ஆணையம். தினகரனுக்கு ஏற்ற சரியான சின்னம்தான் இது.
ஆர்.கே.நகரில் டோக்கன் கொடுத்து ஏமாற்றியது போல், இந்த முறை ஏமாற்றிவிடமுடியாது. இந்தச் சின்னத்தை தமிழகம் முழுவதும், கிராமங்கள் முழுவதும் கொண்டு சேர்ப்பதெல்லாம் நடக்காத காரியம். இதெல்லாம் எடுபடாது.
அதிமுக, திமுக என பெரிய கட்சிகள் இருக்கும்போது, தினகரனாவது இந்தச் சின்னத்தை வைத்துக்கொண்டு ஜெயிப்பதாவது? நாடாளுமன்றத் தொகுதிகளிலும் 18 சட்டப்பேரவை தொகுதிகளிலும் தினகரன் கட்சி டெபாசிட் கூட வாங்கப்போவதில்லை.
டிடிவி.தினகரன், முன்பு இரட்டை இலை நமக்குத்தான் கிடைக்கும் என்று சொல்லிக்கொண்டே இருந்தார். பிறகு இப்போது குக்கர் சின்னம் கிடைத்தே தீரும் என்று அவருடன் இருப்பவர்களையெல்லாம் நம்பவைத்துக்கொண்டிருந்தார்.
ஆனால் இப்போது பரிசுப் பெட்டி சின்னம் கிடைத்திருக்கிறது. இந்தச் சின்னத்தை வைத்தே ஜெயித்துவிடுவோம் என்று அவர்களை நம்பவைத்துக்கொண்டிருக்கிறார். அவருடன் இருப்பவர்களும் வேறு வழியில்லாமல் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் ஏமாந்துபோகப்போகிறார்கள்.இந்தத் தேர்தலுடன் டிடிவி.தினகரன் கட்சிக்கு மூடுவிழா எடுப்பார்கள் மக்கள்.
இவ்வாறு ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT