Published : 07 Feb 2019 05:43 PM
Last Updated : 07 Feb 2019 05:43 PM
வாட்ஸ் அப்பைத் தவறாகப் பயன்படுத்தும் அரசியல் கட்சிகளின் கணக்குகள் முடக்கப்படும் என வாட்ஸ் அப் நிறுவனம் அறிவித்துள்ளது.
குறுஞ்செய்தி அனுப்பும் சேவை நிறுவனமான வாட்ஸ்அப் ஃபேஸ்புக் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். சில மாதங்களுக்கு முன்னால் வாட்ஸ் அப்பில் பரவிய வதந்திகளால் கூட்டு வன்முறைகள் இந்தியா முழுவதும் பரவலாக நடந்தன. இதுபோன்ற சம்பவங்களில் நூற்றுக்கும் மேலானோர் பலியாகினர்.
இதையடுத்து வாட்ஸ் அப்பில் வதந்திகள் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு நடவடிக்கைகளை எடுக்க இந்தியப் பிரிவுக்கான தலைவரை நியமிக்க வேண்டும் என்றும் இந்திய அரசு வலியுறுத்தியது. இந்திய அரசின் கோரிக்கையை ஏற்ற வாட்ஸ் அப் நிறுவனம், இந்தியப் பிரிவின் தலைவராக அபிஜித்போஸ் என்பவரை நியமித்தது.
அதேபோல போலி செய்திகள் பரவுவதைத் தடுக்கும் வகையில் ஒரே நேரத்தில் 5 பேருக்கு மட்டுமே ஃபார்வர்ட் செய்ய முடிகிற வகையில் வாட்ஸ் அப் நிறுவனம் கட்டுப்பாடு விதித்தது.
இந்நிலையில் வாட்ஸ் அப்பைத் தவறாகப் பயன்படுத்தும் அரசியல் கட்சிகளின் கணக்குகள் முடக்கப்படும் என வாட்ஸ் அப் நிறுவனம் நேற்று (புதன்கிழமை) அறிவித்துள்ளது.
இதுகுறித்துப் பேசிய அந்நிறுவனத்தின் தொலைத்தொடர்பு தலைவர் கார்ல் வூக், ''சில அரசியல் கட்சிகள் வாட்ஸ் அப்பைத் தவறான முறையில் பயன்படுத்தி வருவதைப் பார்க்கிறோம். இது தொடர்ந்தால் அவர்களின் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டு, சேவை நிறுத்தப்படும்'' என்றார்.
இந்திய அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், ''இந்தியாவில் நடக்கவுள்ள தேர்தல் குறித்து தெளிவாக உள்ளோம். வாட்ஸ் அப்பில் பகிரப்படும் செய்திகளில் முறைகேடு நடந்தால், அந்த செய்தியை அடையாளம் கண்டு உடனடியாக நீக்குவோம். இதற்காக எங்களின் குழு தொடர்ந்து உழைத்து வருகிறது'' என்றார்.
இந்தியாவில் 20 கோடி பேருக்கு மேல் வாட்ஸ்அப் பயன்படுத்தி வருகின்றனர். உலக அளவில் 150 கோடி பயனாளிகள் வாட்ஸ் அப் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT