Published : 13 Apr 2019 09:36 AM
Last Updated : 13 Apr 2019 09:36 AM

360: மெகா தள்ளுபடி புத்தகத் திருவிழா

திருமண விழாவில் நூல் வெளியீடு

எழுத்தாளரும் தொழிற்சங்கவாதியுமான எஸ்.வி.வேணுகோபாலன் - ராஜேஸ்வரி தம்பதிகளின் மகள் இந்து - அஸ்வின் திருமண வரவேற்பு விழா சென்னையில் கடந்த ஏப்ரல் 6 அன்று நடைபெற்றது. விழாவில் பங்கேற்றவர்களுக்கு விதைப் பந்தும் துளசிச்செடியும் வழங்கப்பட்டன. எஸ்.வி.வேணுகோபாலன் எழுதிய ‘இசைத்தட்டாய்ச் சுழலட்டும் வாழ்க்கை’ எனும் கட்டுரைத் தொகுப்பு நூலும் வரவேற்பு நிகழ்விலேயே வெளியிடப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட, மணமகள் இந்து பெற்றுக்கொண்டார். இந்நூலின் அட்டைப்படத்தை மணமகளே வரைந்துள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.

‘விஜயா வாசகர் வட்டம்’ விருதுகள் - 2019

கோவை விஜயா பதிப்பகத்தின் வாசகர் வட்டம் சார்பில் ஆண்டுதோறும் படைப்பாளிகளுக்கும் நூலகர்களுக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கின்றனர். மூன்றாவது ஆண்டாக வழங்கப்படும் இந்த விருதுகள் இந்த ஆண்டு பா.செயப்பிரகாசம் (ஜெயகாந்தன் விருது), க.அம்சப்ரியா (மீரா விருது), கே.என்.செந்தில் (புதுமைப்பித்தன் விருது), நூலகர் வெ.செல்வமணி (சக்தி வை.கோவிந்தன் விருது), ஆர்.ராஜ் ஆனந்த் (வானதி விருது) ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளன. ஏப்ரல் 21 காலை 10 மணிக்கு கோவை பூ.சா.கோ. பொறியியல் கல்லூரியில் நடைபெறவிருக்கும் விழாவில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கு.ராஜாமணி விருதுகள் வழங்குகிறார்.

மெகா தள்ளுபடி புத்தகத் திருவிழா

உலகப் புத்தக நாளை முன்னிட்டு ஏப்ரல் 20-24 வரை 50% தள்ளுபடி விலையில் புத்தகக்காட்சி நடத்த ஏற்பாடு செய்திருக்கிறது சென்னை புத்தகச் சங்கமம். அறிஞர்களின் கருத்துரைகள், கலை நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான சிறப்புப் போட்டிகள், உணவு அரங்குகள், திரைப்பட விழாக்கள் என இந்தக் கோடையைக் கலை-இலக்கியங்களோடு கொண்டாடுவோம் வாருங்கள். இடம்: பெரியார் திடல், வேப்பேரி, சென்னை-7.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x