Published : 16 Feb 2019 09:26 AM
Last Updated : 16 Feb 2019 09:26 AM

நூல் நோக்கு: எளிய மனிதர்களின் கனவுகள்

கே.எஸ்.மணியம் சிறுகதைகள்

தமிழில் : விஜயலட்சுமி

வல்லினம் பதிப்பகம்

விலை : ரூ.160

  9042461472

மலேசியா வாழ் இந்தியர்களின் புலம்பெயர் வாழ்க்கையைப்  பதிவுசெய்த முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவர் கே.எஸ்.மணியம்.  அவருடைய ஆறு சிறுகதைகளும்,  நேர்காணலும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.  இழந்த அடையாளங்களை, பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்டுக் கொணரப் போராடும் எளிய மனிதர்களைப் பற்றிய இக்கதைகள்,  நிலத்தால் மலேசியாவை மையங்கொண்டிருந்தாலும் உலகளாவிய சுரண்டல்களையும் அடையாளங்களை இழந்தவர்களின் கனவுகளையும் படம்பிடித்துக் காட்டுகின்றன. ஒற்றைக் கலாச்சாரம் உருவெடுக்கும் இடத்தில் எல்லாம் உழைப்புச் சுரண்டலும் இருக்கும் என்ற அபாய ஒலி இக்கதைகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

- கிருஷ்ணமூர்த்தி

வாழ்க்கை எனும் மாய வித்தை

செப்படு வித்தை:  சீர்மேவும் நுண்மொழி,

மானெக்‌ஷா,

நோஷன் பிரஸ் வெளியீடு.

விலை: ரூ.999

எதிர்பாராத சிக்கல்கள், தோல்விகள், ஏமாற்றங்கள் என்று பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மனிதர்கள், அவற்றிலிருந்து மீண்டுவர பெரிதும் எதிர்பார்ப்பது ஆறுதலும் நம்பிக்கையும் தரும் வார்த்தைகளைத்தான். துவண்டு நிற்பவர்களை நிமிரச் செய்யும் வார்த்தைகள், வலிகளை இயல்பாகக் கடக்கும் உத்வேகம் தரும் உதாரணக் கதைகள் நிரம்பிய இந்தப் புத்தகம் பேச்சு நடையிலேயே எழுதப்பட்டிருக்கிறது. தொல்காப்பியம், திருக்குறள், தேவாரம், பன்னிரு திருமுறைகள் என பல்வேறு நூல்களிலிருந்து பொருத்தமான பாடல்களைக் கையாண்டிருக்கும் ஆசிரியர், சாமானிய மனிதர் முதல் ஹிட்லர் வரை பல்வேறு நபர்களின் வாழ்க்கைப் பக்கங்களையும் சுட்டிக்காட்டுகிறார். கோபம், விரக்தி, இயலாமை ஆகியவற்றிலிருந்து வெளிவருவதற்கு எளிய உதாரணங்களை முன்வைக்கும் இந்தப் புத்தகம் துரித வாசிப்புக்கு உகந்ததாக இருப்பது தனிச் சிறப்பு!

- ஐசக் 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x