Published : 11 Nov 2018 10:04 AM
Last Updated : 11 Nov 2018 10:04 AM

காணாமல்போனவர்களின் கதை

மீண்டு(ம்) மேடையேறும் பிரபஞ்சன்!

பிரபஞ்சனின் எழுத்துகளைப் போலவே, அவரது பேச்சுக்கும் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. ‘நண்பர்களே...’ என்று புன்சிரிப்புடன் உரையைத் தொடங்கிய இரண்டொரு நிமிடங்களில் பார்வையாளர்களின் மொத்தக் கவனத்தையும் ஈர்த்துவிடுவார். மேடைப் பேச்சு என்பதைத் தாண்டி, ஒரு தனிப்பட்ட உரையாடலைப் போல அத்தனை நெருக்கமானது அவரது பேச்சு. கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபஞ்சன், தற்போது உடல்நலம் தேறி, இலக்கிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறார். சமீபத்தில் புதுவை தமிழ்ச் சங்கம் நடத்திய ம.இலெ.தங்கப்பா ஆவணப்பட விழாவில் நீண்ட நேரம் சிறப்புரை ஆற்றினார். புதுவை எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் உற்சாகத் தருணமாக அமைந்திருந்தது அந்த விழா.

எஸ்.ராவின் தீராத புத்தகத் தேடல்

ரயில் பயணங்களில் எஸ்.ராமகிருஷ்ணனைப் பார்ப்பவர்கள் கண்டிப்பாக ஒரு விஷயத்தைக் கவனித்திருப்பார்கள். அவரது கையில் ஒரு புத்தகம் இருக்கும். பையிலும் நிறைய புத்தகங்கள் இருக்கும். தமிழ், ஆங்கிலத்தில் வெளிவரும் புதிய புத்தகங்களை உடனுக்குடன் படித்துவிட்டு அதைப் பற்றிய கருத்துகளை தனது இணையதளத்தில் வாசகர்களோடு பகிர்ந்துகொள்வார் எஸ்.ராமகிருஷ்ணன். அதைப் போலவே எந்த ஊருக்குப் போனாலும் பழைய புத்தகக் கடைகளில் தேடித் தேடி அரிய புத்தகங்களைச் சேகரிப்பவர் அவர். தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் எங்கெங்கு பழைய புத்தகக் கடைகள் உண்டு என்பது தொடங்கி கடைக்காரரின் தனிப்பட்ட இயல்புகள் வரைக்கும் தெரிந்துவைத்திருப்பவர் எஸ்.ராமகிருஷ்ணன்!

காணாமல்போனவர்களின் கதை

‘நோபடி இஸ் எவெர் மிஸ்ஸிங்’ என்ற முதல் நாவலுடன் களமிறங்கிய அமெரிக்க நாவலாசிரியர் கேத்தரின் லேஸிக்கு சர்வதேச அளவில் பெரும் கவனம் கிடைத்தது. ‘கனவு மிகுந்த, அதே நேரத்தில் கொடூரமான எழுத்து’ என நியூயார்க் டைம்ஸ் வர்ணித்தது. எளிய மக்கள் தங்கள் வாழ்வின் அதி அற்புத தருணங்களைக் கண்டுகொள்ளத் தவறியது குறித்து எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு (‘செர்டெய்ன் அமெரிக்கன் ஸ்டேட்ஸ்: ஸ்டோரிஸ்’) சமீபத்தில் வெளியாகியிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x