Published : 14 Jul 2018 08:56 AM
Last Updated : 14 Jul 2018 08:56 AM
சாகித்ய அகாடமி விருதுபெற்ற தேபேந்திரநாத்தின் முக்கியமான அஸ்ஸாம் நாவலான ‘ஜங்கம்’, அவர் இறந்து 37 ஆண்டுகள் கழித்து ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பாகி வெளிவந்திருக்கிறது.
2-ம் உலகப் போர் காலத்தில், ஜப்பானியப் படையெடுப்பாலும் இன வன்முறையாலும் சுமார் 5 லட்சம் பேர் பர்மாவைவிட்டு வெளியேறி அஸ்ஸாம் வந்துசேர்ந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல் இது. நாவலின் ஒரு பகுதியாக, இந்தியர்களுக்கும் பர்மியருக்கும் இடையேயான பாகுபாட்டைப் பேசுகிறது. குறிப்பாக, இந்தியாவிலிருந்து வந்த செட்டியார்கள் செல்வச்செழிப்போடும் நிலபுலன்களோடும் வாழும் வேளையில் குடி, ஆட்டம்பாட்டம், சூதாட்டம் என பர்மாக்காரர்கள் தங்கள் வாழ்க்கையை எப்படி இழந்தார்கள் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஏழைகளும், அதிகாரமற்றவர்களும் பாதிப்புக்குள்ளாகும்போது, பணக்காரர் கள் மட்டும் சொகுசாகத் தப்பித்துவிடுகிறார்கள். இந்தியாவில் கொடுரமான வறுமையையும், இடர்பாடு களையும் சந்தித்த ராம்கோவிந்தா ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்காக பர்மாவுக்குச் செல்கிறான். துரதிர்ஷ்டவசமாக இன்னும் மோசமான சூழலைப் பர்மாவில் எதிர்கொள்ள நேர்கிறது. அகதி கள் தங்கள் உடைமைகளைக் கொஞ்சம்கொஞ்ச மாக இழந்துகொண்டிருக்கும்போது தங்கள் நம்பிக்கைகளையும் இழந்து விரக்திக்குள்ளாவதை நாவலின் ஒவ்வொரு பக்கமும் பிரதிபலிக்கிறது. இறுதியாக, மரணமே மீண்டும் தங்கள் மகிழ்ச்சியை மீட்டுத்தரும் உபாயம் என்று நம்பிக்கைகொள்கிறார்கள்.
- விதார்த்
ஜங்கம்: அ ஃபர்காட்டன் எக்ஸோடஸ் இன் விச் தவுசண்ட்ஸ் டைட்
தேபேந்திரநாத் ஆச்சார்யா
ஆங்கிலத்தில்: அமித் ஆர் பாஷ்யா
விடாஸ்டா வெளியீடு
2/15, அன்சாரி ரோட், தர்யாகஞ்ச்
புது டெல்லி - 110 002
விலை: ரூ. 399
தொடர்புக்கு: http://www.vitastapublishing.com/
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT