Published : 30 Jun 2018 09:55 AM
Last Updated : 30 Jun 2018 09:55 AM

ஆணாக வாழும் ஒரு பெண்ணின் கதை

ன்பாலின உறவாளர்கள், இருபாலின உறவாளர்கள் மற்றும் மூன்றாம் பாலினரின் (எல்.ஜி.பி.டி.) கொண்டாட்ட மாதம் ஜூன். 1969, ஜூன் 28-ல் நியூயார்க் நகரத்தில் உள்ள ‘ஸ்டோன்வால் இன்’ விடுதி யில் காவல்துறையின் சோதனை நடவடிக்கைகளைக் கண்டித்து, தன் பாலின உறவாளர்கள் போராட்டம் நடத்தினர். அந்நிகழ்வைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம், உலகம் முழுவதும் பெருமித மாதமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக, தன்பாலின உறவாளர்கள் பற்றியும் மூன்றாம் பாலினத்தவர் பற்றியும் எழுதப்படுகிற இலக்கியங்கள் ஜூன் மாத இலக்கிய விவாதங்களின் மையப் பொருளாக மாறிவருகின்றன.

தமிழில் கரிச்சான்குஞ்சுவின் ‘பசித்த மானுடம்’ நாவல், தன்பாலின உறவைப் பற்றி போகிறபோக்கில் சொல்லி நகர்ந்தது. அது தொடங்கி புனைவிலக்கியங்களில் அவ்வப்போது இச்சமூகத்தினரைப் பற்றி எழுதப்பட்டுவந்தாலும் மிகச் சமீபமாகத்தான் அவர்கள் முதன்மைப் பாத்திரங்களாகியிருக்கிறார்கள். அந்த வகையில், ப்ரியாபாபுவின் ‘மூன்றாம் பாலின் முகம்’, சு.வேணுகோபாலின் ‘பால் கனிகள்’, பாலபாரதியின் ‘அவன் – அது = அவள்!’ ஆகிய நாவல்கள் கவனத்துக்கு உரியவை. பத்மபாரதியின் ‘திருநங்கையர் சமூக வரைவியல்’, கிரீஷ் எழுதிய ‘விடுபட்டவை’ தொகுப்புகள் எல்.ஜி.பி.டி சமூகத்தினர் குறித்து சமீபத்தில் வெளிவந்திருக்கும் முக்கியமான நூல்கள். அந்த வரிசையில் இடம்பிடித்திருக்கும் இன்னொரு நல்ல வரவு பிரதிபா எழுதியிருக்கும் ‘சுவேதா’.

ஆணாகப் பிறந்து, வளர்ந்து, தன்னுள் இருந்த பெண்மையைக் கண்டுகொண்ட சுவேதாவின் வாழ்க்கைக் கதை இது. அதை அவரே நம்மிடம் சொல்வதுபோல எழுதப்பட்டிருக்கிறது இந்தப் புத்தகம். குடிநோய்க்கு ஆளான கணவரிடமிருந்து பிரிந்துவந்து, இரண்டு குழந்தைகளை வளர்த்தெடுக்கத் தனது அம்மா எதிர்கொண்ட துயரங்கள், சுதாகர் என்று பெயரிடப்பட்டு ஆண் குழந்தையாக வளர்ந்த குழந்தைப் பருவம், பள்ளியில் படித்தபோது தன்னுள் முகிழ்த்த பெண்மையைக் கண்டுகொண்ட தருணம், கல்லூரிப் படிக்க வாய்ப்பில்லாத வறுமை நிலை, வேலைபார்த்துக்கொண்டே அஞ்சல் வழியில் முதுகலைப் படிப்பு வரையிலும் தொடர்ந்த தன்னம்பிக்கை, தன் இயல்பைத் தாயிடம் வெளிப்படுத்திக்கொள்ள முடியாத மனப் போராட்டங்கள், பெண்ணாக மாற எடுத்துக்கொண்ட முயற்சிகள், மும்பையில் நடக்கும் உயிருக்கு உத்தரவாதமில்லாத தாயம்மா அறுவைச் சடங்கு பற்றிய விவரணைகள், தன்பாலின உறவாளர்களுடனான அறிமுகங்கள், காதலின் நம்பிக்கை துரோகங்கள், மனம்தளராமல் சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக மாறியிருப்பது, எல்லாவற்றைக் காட்டிலும் முக்கியமாக இன்னும் அம்மாவின் நம்பிக்கையைக் குலைக்காமல் ஆணாகவே தொடரும் வாழ்க்கை என்று விரிகிறது சுவேதாவின் வாழ்க்கைச் சரிதம். புனைவின் அத்தனை சாத்தியங்களும் அனுபவப் பகிர்வுக்கு நிகராவதில்லை என்பதை மீண்டும் நிரூபிக்கிறது இந்தச் சிறு புத்தகம்.

திராவிட இயக்கம், பெண்ணுரிமை, மூன்றாம் பாலினரின் உரிமைகள் என்று தொடர்ந்து எழுதியும் செயல்பட்டும் வந்தவர் பிரதிபா. ‘நிழலாய்த் தொடரும் நிஜங்கள்’ என்ற தலைப்பில் அவரது கட்டுரைகள் நூல் வடிவம் பெற்றிருக்கின்றன. பிரதிபா கடைசியாக எழுதிய இந்த நூல் வெளிவருவதற்கு முன்பே அவர் அகாலமான மரணமடைந்தது தமிழ் எழுத்துலகுக்கு நிச்சயம் ஓர் இழப்பு.

- செல்வ புவியரசன்,

தொடர்புக்கு: puviyarasan.s@thehindutamil.co.in

சுவேதா:

என்னுள் ஆணின் அகிம்சை,

பெண்ணின் இம்சை

பிரதிபா

நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், சென்னை-14 விலை: ரூ. 45

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x