Last Updated : 27 May, 2018 10:03 AM

 

Published : 27 May 2018 10:03 AM
Last Updated : 27 May 2018 10:03 AM

டிரெடிலில் தொடங்கி ஆப்செட் வரை!

ன் வீட்டுக்கு ‘அம்மா’ வீடு என்று பெயரிட்ட சுகனின் உரையாடலே ஒரு தாயோடு பேசுவதுபோல்தான் இருக்கும். லாபநஷ்டக் கணக்குபார்க்காமல் 28 ஆண்டுகள், ‘சுகன்’ எனும் சிற்றிதழை (334 இதழ்கள்) சலிப்படையாமல் தஞ்சாவூரிலிருந்து திசை எட்டும் வெளியிட்டவர் சுகன். பின்னணியில் தஞ்சை பிரகாஷும், வெற்றிப்பேரொளியும் இருக்கிறார்கள் என்பதே அவருக்கு பெரும் பலமாக இருந்தது.

பூஞ்சாலி, சாமக்கூத்து, சுகந்த சுரங்கள், காதல் லிபிகள் ஆகிய கவிதைத் தொகுப்புகளையும், ஆழத்தில் இருந்து அனல் ஒன்று எனும் சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ள சுகன், தனது ‘சுகன்’ சிற்றிதழில் தஞ்சை பிரகாஷ், விக்கிரமாதித்தன், வண்ணநிலவன், ராஜமார்த்தண்டன், கீரனூர் ஜாகீர் ராஜா, தஞ்சாவூர் கவிராயர், ஆருர் தமிழ்நாடன், வாமுகோமு போன்றோரை எழுத வைத்திருக்கிறார். பெரும் வாசகப்பரப்பைக் கொண்டு இயங்கும் இதழ்கள்கூட தொட அஞ்சும் உலக நடப்பை தன்னுடை இதழில் தலையங்கம் தீட்டியிருப்பார். அவர் மறைவுக்குப் பிறகு அந்தத் தலையங்கங்களைத் தொகுத்து ‘எழுதுகோலால் எண்ணக்கண் திறப்போம்’ என்கிற நூலினை அவர் மனைவி கொண்டுவந்திருக்கிறார்.

90-களில் பெரும் பேனா பட்டாளமாக தஞ்சை மண்ணில் இருந்த நட்சத்திரன், புத்தகன், கவிஜீவன், இலக்குமி குமாரன் ஞானதிரவியம், எஸ்.ராஜகுமாரன், கா.விஜயராகவன், இளம்பிறை, நீதிதாசன், சாலியமங்கலம் சபாபதி, ஷாராஜ், ஹரணி, தங்க செந்தில்குமார், சுந்தர்ஜி, செல்லதுரை, தஞ்சை செழியன், ஆருர் புதியவன் போன்றவர்களுக்கும் ஒரு இலக்கிய ஏற்றுமதி ஸ்தாபனமாக ‘சுகன்’ இதழ் மேடையமைத்துத் தந்தது. தனது அத்தை மகள் செளந்தர வதனாவை மணந்துகொண்ட சுகனுக்கு சுகலீலா, ஞானேஸ்வரி என்ற இரண்டு குழந்தைகள். 2015-ல் சுகன் காலமான பிறகு 28 ஆண்டுகளாக டிரெடிலில் ஆரம்பித்து ஆப்செட் வரை நீண்ட ஒரு சிற்றிதழின் சிறகும் முறிந்தது. மூச்சைப் பிடித்துக்கொண்டு சுகன் நடத்திய ‘சுகன்’ இதழும் இன்று தமிழ் சிற்றிதழ் உலகின் ஆவணமாகிவிட்டது.

(ஜூன் 5 – சுகன் நினைவுநாள்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x