Published : 05 Jan 2019 11:55 AM
Last Updated : 05 Jan 2019 11:55 AM

குருதிவழி நுழையும் நோய்கள்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மனைவி 2-வது முறையாகக் கர்ப்பமானார். இவர் சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் 2018 டிசம்பர் 3 அன்று சிகிச்சைக்குச் சென்றபோது அவருக்கு ரத்த சோகை இருப்பதாகவும், ரத்த சிவப்பணுக்கள் குறைவாக உள்ளதாகவும் மருத்துவர் கூறினார்.

இதையடுத்து, சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி சேர்க்கப்பட்டார். அவருக்கு சிவகாசி அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியிலிருந்து கொண்டுவரப்பட்ட ரத்தம் செலுத்தப்பட்டது. அந்தக் கர்ப்பிணிக்குச் செலுத்தப்பட்ட ரத்தத்தில் ஹெச்.ஐ.வி இருப்பது பின்னர் உறுதிசெய்யப்பட்டது.

மேலும், அவருக்கு மஞ்சள் காமாலை பி வைரஸின் தொற்றும் பரவியிருப்பது உறுதிசெய்யப்பட்டது. கர்ப்பிணி என்பதால் இரண்டு உயிர்களும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தக் கவனக்குறைவு நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பரவும் நோய்க்கிருமிகள்

வைரஸ் கிருமிகள், ஒட்டுண்ணிகள், பாக்டீரியா கிருமிகள், பூஞ்சைக் கிருமிகள் ஆகியன ரத்தம் மூலம் பரவுவதற்குச் சாத்தியம் உண்டு.

வைரஸ் கிருமிகள் என்று எடுத்துக்கொண்டால். எய்ட்ஸ் நோய்க் கிருமிகள் (HIV-1 and HIV-2), மஞ்சள் காமாலை ஏ வைரஸ், மஞ்சள் காமாலை பி வைரஸ், மஞ்சள் காமாலை சி வைரஸ், மஞ்சள் காமாலை ஈ வைரஸ், டெங்கு வைரஸ், வெஸ்ட் நைல் வைரஸ், சைட்டோமெகல்லோ வைரஸ், மனித லிம்ஃபோட்ரோபிக் வைரஸ், பார்வோ வைரஸ் B 19, எப்ஸ்டீன்-பார் வைரஸ் ஆகியவை முக்கியமானவை.

ஒட்டுண்ணிகள் என்று எடுத்துக்கொண்டால், மலேரியா ஒட்டுண்ணி-பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணி, லேயிஷ்மேனியாசிஸ்-லேயிஷ்மேனியா ஒட்டுண்ணி, சாகஸ் நோய்-டிரிபனோசோமா குரோசி ஒட்டுண்ணி, உண்ணிக் காய்ச்சல்-பாப்சியா ஒட்டுண்ணி, டாக்ஸோபிளாஸ்மோசிஸ்-டாக்ஸோபிளாஸ்மா கோன்டி ஒட்டுண்ணி, யானைக்கால்நோய்-வூரியா ப்ராங்க்ரோஃப்டி ஒட்டுண்ணி ஆகியவை முக்கியமானவை.

பாக்டீரியா கிருமிகள் என்று எடுத்துக்கொண்டால், சால்மோ னெல்லா டைஃபி, டிரிஃப்போனிமா- சுருள் பாக்டீரியா, எர்சினியா, புரோடீஸ், சூடோமோனாஸ், எஷ்சரிச்சியா, கிளப்சையிலா ஆகியவை முக்கியமானவை. பூஞ்சைக் கிருமிகள் என்று எடுத்துக்கொண்டால், மியூகார்மைகோசிஸ், சைகோமை கோசிஸ், பைத்தியோசிஸ் ஆகியவை முக்கியமானவை.

உலக சுகாதார அமைப்பு என்ன சொல்கிறது?

எய்ட்ஸ் கிருமிகள், மஞ்சள் காமாலை பி வைரஸ், மஞ்சள் காமாலை சி வைரஸ், சிஃபிலிஸ் ஆகிய நோய்களைக் கண்டறியும் பரிசோதனைகளை உலக சுகாதார அமைப்பு செய்யச் சொல்கிறது. நமது நாட்டில் மலேரியா பாதிப்பு தொடர்ந்து இருப்பதால், அதற்கான பரிசோதனையையும் சேர்த்து 5 பரிசோதனைகளைச் செய்கிறோம்.

ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில், மேற்கூறிய பரிசோதனைகளுடன் டிரிபனோசோமா குரோசி ஒட்டுண்ணி, லேயிஷ்மேனியா ஒட்டுண்ணி ஆகிய பரிசோதனை களையும் செய்கிறார்கள். ஏனென்றால், அங்கு இவ்வகைப் பாதிப்புகள் உள்ளன. மனித லிம்ஃபோட்ரோபிக் வைரஸ் பரிசோதனையை, சில மேலை நாடுகளில் பிற முக்கியப் பரிசோ தனைகளுடன் செய்கிறார்கள்.

பரிசோதனைக்கான காரணங்கள்

மேலே குறிப்பிடப்பட்ட பரிசோதனைகள் மிகவும் முக்கிய மானவை, ஏனென்றால் இந்தத் தொற்று நோய்கள் உடலைப் பெரிதும் பாதித்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை. பிற கிருமிகளின் பாதிப்பு அபூர்வ மாகவே ஏற்படும். அத்துடன் அவற்றைக் குணப்படுத்தி, காப்பாற்றவும் முடியும். ஒருவேளை பரிசோதனையில் தவறு இருந்து தானம் பெற்ற ரத்தத்தில் கிருமிகள் பரவிவிட்டால், அதைச் சரிசெய்வதற்குக் கூடப் பல உயரிய தொழில்நுட்பங்களும் வேதிப்பொருட்களும் வளர்ந்த நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன.

ஆகவே, தொற்றுள்ள தானம் பெற்ற ரத்தத்தை வேறு நோயாளிக்குச் செலுத்துவதற்கு முன்பாகப் பரிசோதனை செய்தால்கூட அந்த ரத்தத்தைக் கிருமி நீக்கம் செய்ய முடியும் அல்லது அந்த ரத்தத்தைச் செலுத்தாமல் தவிர்க்க முடியும். அந்த ரத்தத்தை அழித்துவிட முடியும்.

முகாம் நடத்தும்போது கவனம்

பொதுவாக, மிகப் பெரிய ரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சி களை நடத்தும்போது, ஒரே நேரத்தில் ஏராளமானோர் ரத்ததானம் செய்யும் நிலையில், அனைவருக்கும் பரிசோதனைகளை வேகமாகக் குறிப்பிட்ட நேரத்தில் செய்ய வேண்டியிருப்பதால் சில நேரம் தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளது. (தொற்று உள்ள ரத்தத்தைப் பெறுவது நிகழலாம்).

இத்தனை பேரிடமிருந்து ரத்த தானம் பெறப்பட்டது என்று கின்னஸ் சாதனைகள் கூட நடந்தேறியிருக்கும். ஆனால், அவசர கதியில் செயல்படுவதால் சாதனைகளைத் தாண்டி, இது போன்ற சோதனைகளையும் குடும்பங்களின் வேதனைகளையும் ஏற்க வேண்டியிருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ரத்ததான முகாம் நடத்துபவர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கை யுடனும் கவனமாகவும் இருக்க வேண்டும்.

தவறு

சாத்தூர் சம்பவத்தைப் பொறுத்தவரை தானம் செய்ய வந்தவர் ரத்தத்தை முறையாகப் பரிசோதித்து நிராகரிக்காமல் போனதுதான் மாபெரும் தவறு. இனியும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும். அரசாங்க மருத்துவமனைகளும் தனியார் மருத்துவமனைகளும் கவனத்துடன் இருந்திருந்தால், இது போன்ற சம்பவத்தைத் தவிர்த்திருக்கலாம்.

தானத்தைத் தரமாக்குவோம்

ரத்ததானம் வழங்க வரும்போது கொடையாளி தன்னைக் குறித்த அனைத்து விவரங்களையும் தெரிவிக்க வேண்டும். குறிப்பாக, காய்ச்சல் ஏற்பட்டது, அது எப்போது ஏற்பட்டது, எந்தத் தொற்றால் ஏற்பட்டது, அதற்காக வழங்கப்பட்ட சிகிச்சைகள், உடலில் உள்ள பிற நோய்கள் அதற்காகச் செய்யப்பட்டுவரும் சிகிச்சைகள் என அனைத்து விவரங்களையும் தெரிவிக்க வேண்டும்.

blood-2jpg

கொடையாளியின் உடலைக் குறித்து முழுவதுமாக அறிந்துகொள்ளும் விதமாக ரத்த வங்கிகள் விண்ணப்பங்களைத் தயாரிக்க வேண்டும்.

அவரைக் குறித்த அனைத்து விவரங்களையும் பதிவுசெய்து பத்திரப்படுத்த வேண்டும். கொடையாளியின் தொற்றும் நோய், தொற்றா நோய் ஆகியவை குறித்து அறிந்து ஆரோக்கியமானவரின் ரத்தத்தைச் சேகரிப்பதுடன் அது என்ன வகை ரத்தம் (ABO/RH TYPING) என்பதைக் கண்டறிந்து பதிவுசெய்வதும், அது கெடாமல் வங்கியில் முறையாகப் பாதுகாக்கப்படுவதும் வேண்டும்.

தானம்தான் என்றாலும் தானத்தை அளிப்பவரும் அதைப் பெறுபவரும் அதன் தரத்தைப் பரிசோதிப்பதன்மூலம் முகம் தெரியாத யாரோ ஒருவரது வாழ்வை நீட்டிக்கலாம்,

- டாக்டர் சு.முத்துச்செல்லக்குமார்
தொடர்புக்கு: muthuchellakumar@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x