Published : 05 Jan 2019 11:54 AM
Last Updated : 05 Jan 2019 11:54 AM

விடைபெறும் 2018: உடல்நல நூல்கள்

மருத்துவம், உடல்நலப் பேணல் தொடர்பாக 2018-ல் வெளியான முக்கியமான நூல்கள்...

 

உடல் பருமன் ஆபத்தானது என்ற விழிப்புணர்வு அதிகரித்துள்ள அதே நேரம், அதிலிருந்து விடுபடுவதற்கு ஆபத்து நிறைந்த வழிகளை நாடும் போக்கும் அதிகரித்துள்ளது. தொப்பையைக் குறைப்பது, உடல் பருமனால் விளையும் நோய்கள்குறித்த விழிப்புணர்வைப் பெறுவது, அதற்கான சிகிச்சைகளுக்கு ஒத்துழைப்பு அளிப்பது, எடையைக் குறைப்பதற்கான சுயமுயற்சிகள் ஆகியவற்றை உரையாடலைப் போன்ற சுவாரஸ்யமான பாணியில் விளக்கும் நூல். அலோபதி மருத்துவத்தில் 30 ஆண்டு அனுபவம் பெற்ற டாக்டர் கு.கணேசன் ‘கல்கி’, வார இதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது.

ஒல்லி பெல்லி | டாக்டர் கு.கணேசன் | கிழக்கு பதிப்பகம் | தொடர்புக்கு 044-4200 9603

 

அகில இந்திய வானொலியில் மருத்துவர் சி.அசோக் ஆற்றிய மருத்துவ உரைகளின் தொகுப்பே இந்த நூல். நோய்களுக்கான மருத்துவத்தைத் தாண்டி முழு உடல்நலம் பற்றிய புரிதலை ஏற்படுத்தவும் நல்ல உணவு, நல்ல உள்ளம் ஆகியவற்றைப் புரியவைக்கும் நோக்கத்துடனும் மருத்து வத்தைப் பாமரர்களுக்குப் புரியும் வகையில் எளிதாக்கிக் கொடுக்கும் முயற்சியாகவும் இந்த உரைகள் அமைந்துள்ளன.

நாளும் நலம் நாடி | மருத்துவர் சி.அசோக் | மணிமேகலை பிரசுரம் | தொடர்புக்கு 044-24342926, 24346082

நீட் நுழைவுத் தேர்வின் மூலம் தமிழ்வழிக் கல்வி பயின்ற மாணவர்கள் மருத்துவக் கனவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கும் சூழலில், தமிழிலேயே படித்து மருத்துவர் ஆக முடியும் என்ற நம்பிக்கையை அறிவியல் அணுகுமுறையுடன் முன்வைக்கும் நூல். சிறப்புநிலை அறுவை சிகிச்சைப் பேராசிரியரான டாக்டர் சு.நரேந்திரன் எழுதியிருக்கும் இந்நூல் மருத்துவத்தில் கலைச் சொல்லாக்க நெறிமுறைகள், மருத்துவப் பாடநூல் உருவாக்கம் ஆகியவற்றுக்கான தனிக் கட்டுரைகளை உள்ளடக்கியது.

தமிழால் மருத்துவக் கல்வி முடியும் | டாக்டர் சு.நரேந்திரன் | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் | தொடர்புக்கு 044-2625 1968, 2625 8410, 4860 1884

 

சர்க்கரை நோய் குறித்த மாயைகளைக் களைந்து சாமானிய மக்கள் சர்க்கரை நோயை எப்படிக் கையாள வேண்டும் என்று விளக்குவதோடு ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப் பாட்டில் வைத்திருப்பதற்கான ஆரோக்கியமான நடவடிக்கைகளையும் பரிந்துரைக்கிறது இந்த நூல்.

சாமானியனும் சர்க்கரை நோயும் | டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன் | உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம் | கோயமுத்தூர் | தொடர்புக்கு 9443291655

 

மருத்துவமும் கல்வியும் வணிகமயமாகி வருவது நம் சமகாலத்தின் மாபெரும் அவலங்களாகத் தொடர்கின்றது. இந்நிலையில் இந்திய மக்களவையில் தாக்கலாகியிருக்கும் மருத்துவ ஆணைய மசோதா (NMC Bill, 2017), மருத்துவக் கல்வியையும் மருத்துவத்தையும் ஒட்டுமொத்தமாக சந்தையிடம் ஒப்படைக்கும் முயற்சி என்று எச்சரிக்கும் நூல். தமிழகத்தைச் சேர்ந்த முக்கியமான மருத்துவர்கள், கல்விச் செயற்பாட்டாளர்களின் கட்டுரைகள் இந்த நூலில் உள்ளன.

மறுக்கப்படும் மருத்துவம் | தொகுப்பு: பு,பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு | பாரதி புத்தகாலயம் | தொடர்புக்கு 044-2433 2424, 2433 2924, 2435 6935

தஞ்சையைச் சேர்ந்த மருத்துவரும் கவிஞருமான ச.மருது துரை கடந்த இருபதாண்டுகளில் எழுதி வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு. அறிவியல் தொழில்நுட்பத் தளங்களில் மிகப்பெரிய வளர்ச்சியை மருத்துவம் அடைந்திருந்தாலும் அது சமுதாயத் தளத்தில் பிரதிபலிக்காதது ஏன், சாமானியனுக்கும் நலவாழ்வு என்ற தத்துவத்தைத் தொலைத்துவிட்டு நகர்ப்புற நட்சத்திர மருத்துவமனைகளை முதன்மைப்படுத்தியது எது என்ற கேள்விகளை எழுப்பி அதற்கான காரணங்களை விளக்குவதோடு தீர்வுகளையும் முன் வைத்திருக்கிறார் மருதுதுரை.

வெட்டப்படும் கட்டை விரல் | ச.மருது துரை | அகரம் வெளியீடு | தொடர்புக்கு 04362 239289

 

உணவுப் பழக்கத்திலிருந்து உறங்கும் முறைவரை கர்ப்பிணிப் பெண்கள் கடைப்பிடிக்க வேண் டிய நியமங்கள், கர்ப்பிணிகளுக்கு ஏற்படக்கூடிய முதுகுவலி உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள், குழந்தை பிறப்பின்போது கவனத்தில்கொள்ள வேண்டிய விஷயங்கள், தாய்ப்பாலின் முக்கியத்துவம். குழந்தை வளர்ப்பின் பல்வேறு நிலைகள், தாய்-சேய் நலத்துக்கான மருத்துவக் குறிப்புகள், குழந்தையின் மனநலத்தைப் பேணுவதற்கான ஆலோசனைகள் ஆகியவற்றை விரிவாக விளக்கும் நூல் இது. குழந்தை வளர்ப்பில் தந்தையர்களுக்கான பங்கை உணர்த்தி அதை நிறைவேற்றுவதற்கான ஆலோசனைகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

குழந்தை வளர்ப்பு என்னும் அரிய கலை | டி.வெங்கட்ராவ் பாலு, சூர்யகுமாரி | நர்மதா பதிப்பகம் | தொடர்புக்கு 98402 26661, 98409 32566, 99400 45044

 

health-hindujpg100 

‘இந்து தமிழ்’  வெளியீடுகள்

உயிர் வளர்த்தேனே l போப்பு

’நலம் வாழ’ இணைப்பிதழில் உணவை மையப்படுத்தி ஓராண்டு வெளியான கட்டுரைகளின் தொகுப்பு. எழுத்தாளர் போப்பு, உணவு தொடர்பான தன் பரந்த அறிவைப் பயன்படுத்தி நம் மரபுவழி வந்த நல்ல உணவைச் சமைக்கவும் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைப் பின்பற்றவும் கற்றுத் தருகிறார். அதோடு பருவத்துக்கு ஏற்ற உணவு வகைகளை அறிமுகப்படுத்தி அவற்றின் செய்முறைகள், பயன்களை விளக்கும் கட்டுரைகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

 

சந்தேகம் சரியா? l டாக்டர் கு.கணேசன்

’இந்த இடத்தில் வீங்கியதுபோல் இருக்கிறதே, புற்றுநோயாக இருக்குமோ’, ‘திடீரென்று இளைத்துவிட்டோமே, சுகர் வந்திருக்குமோ?’ என்பதுபோல் நம் உடல்நலம் சார்ந்து சந்தேகங்கள் நமக்குத் தோன்றும் அல்லது சுற்றியிருப்பவர்கள் கிளப்பிவிடுவார்கள். இந்தச் சந்தேகங்களையும் அச்சங்களையும் ஏளனம் செய்யாமல் நட்பார்ந்த முறையில் விளக்கி அவை குறித்த தெளிவை ஏற்படுத்துகிறார் டாக்டர் கு.கணேசன். இந்து தமிழ் ‘நலம் வாழ’ இணைப்பிதழில் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.

 

மரபு மருத்துவம் l டாக்டர் வி.விக்ரம் குமார்

உணவு முறையில் பெருமளவு அந்நியப் பழக்கவழக்கங்களை இறக்குமதி செய்துவிட்ட நமக்குப் பாரம்பரிய உணவுப் பழக்கத்தையும் மரபுவழி மருத்துவ சிகிச்சைகளையும் அறிமுகப் படுத்தும் 40 கட்டுரைகள் அடங்கிய நூல் இது. டாக்டர் விக்ரம் குமார் இந்து தமிழ் ’நலம் வாழ’ இணைப்பிதழில் எழுதிய கட்டுரைகளின் நூல் வடிவம் இது. ஆவி பிடித்தல், எண்ணெய் தேய்த்துக் குளித்தல், வாழை இலையில் உணவருந்துதல் உள்ளிட்ட நம் பாரம்பரிய பழக்கவழக்கங்களால் விளையும் நன்மைகளை விளக்கும் கட்டுரைகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

(இந்து தமிழ் நூல்களை வாங்கத் தொடர்புகொள்ள வேண்டிய தொலைப்பேசி எண் - 74012 96562)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x