Last Updated : 10 Jun, 2014 10:00 AM

 

Published : 10 Jun 2014 10:00 AM
Last Updated : 10 Jun 2014 10:00 AM

கால்பந்து விளையாடும் விலங்கு!

இந்த மாதம் 12-ம் தேதியிலிருந்து ஜூலை 13-ம் தேதிவரை பிரேசிலில் நடைபெறவிருக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி கால்பந்து ரசிகர்களைப் போலவே சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையேயும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆம், பெரும்பாலும் தென்னமெரிக்காவில் மட்டுமே காணப்படும் ஆர்மடில்லோ (Armadillo) என்ற அழிவின் விளிம்பில் இருக்கும் அரிய வகை விலங்கினத்தைக் கால்பந்து உலகக் கோப்பையின் சின்னமாகத் தேர்வு செய்திருக்கிறார்கள். அதற்கு செல்லப் பெயரும் சூட்டியிருக் கிறார்கள், ஃபுலெகோ (Fuleco).

உலகக் கோப்பை போன்ற பெரு நிகழ்வுகளில் பெருமளவு ஆற்றல் செலவிடப்படுவதால், சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது. ஆனால், இதுபோன்ற நிகழ்வுகள் தவிர்க்க முடியாதவையாக ஆகிவிட்டதால் அதன் ஒரு பகுதியாகச் சுற்றுச்சூழல் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுவதை வரவேற்கலாம்.

அலுங்கும் ஆர்மடில்லோவும்

ஆர்மடில்லோ என்னும் இந்த உயிரினம் ஒரு வகையில் நம்மூர் அலுங்குக்குத் (Pangolin) தூரத்துச் சொந்தம். அலுங்கை எறும்புத்தின்னி என்றும் சிலர் அழைக் கிறார்கள். ஆனால், அலுங்கும் எறும்புத் தின்னியும் சொந்தக்காரர்களே தவிர இரண்டும் ஒன்றல்ல. மேலும், இந்தியாவில் எறும்புத்தின்னி கிடையாது.

தனக்கு ஏதாவது ஆபத்து நேரும் என்று தோன்றினால், அலுங்கு ஒரு பந்தைப் போல சுருண்டுகொள்ளும். ஆபத்து இல்லாத இந்த விலங்கை நம்மூர்க்காரர்கள் கடப்பாரையால்கூட அடிப்பார்கள். கடப்பாரையெ எகிறும் அளவுக்கு வலுவாக இருக்கும் அலுங்கு.

இதுபோன்ற ஒரு தற்காப்பு முறை ஆர்மடில்லோவுக்கும் இருக்கிறது. கவசம் போன்ற மேற்பரப்பைக் கொண்ட ஆர்மடில்லோ, ஆபத்து ஏதாவது நேர்வது தெரிந்தால் தனது உறுப்புகளை சுருட்டிக்கொண்டு ஒரு பந்துபோல் ஆகிவிடும், கிட்டத்தட்ட கால்பந்தைப் போல.

எல்லா ஆர்மடில்லோக்களாலும் இதைப் பூரணமாகச் செய்ய முடியாது. முப்பட்டை ஆர்மடில்லோக்களால் மட்டுமே அப்படி பந்துபோல் தனது உறுப்புகளைக் கச்சிதமாகச் சுருட்டிக்கொள்ள முடியும். மற்ற வகை ஆர்மடில்லோக்களால் ஓரளவு சுருட்டிக்கொள்ள முடியும்.

ஆர்மடில்லோக்கள் அப்படிச் சுருண்டுகொள்ளும்போது, இரைகொல்லி விலங்குகளுக்குக் குழப்பம் ஏற்பட்டு அருகில் நெருங்காமல் அவை திரும்பச் சென்றுவிடும். தற்போது இருக்கும் பாலூட்டிகளில் உடல் கவசம் கொண்ட ஒரே விலங்கினம் ஆர்மடில்லோ மட்டும்தான்.

அழிவின் விளிம்பில்

ஆர்மடில்லோவுக்கு மெக்ஸிகோ நாட்டில் இருந்த அஸ்டெக் இன மக்கள் வைத்த பெயர் 'ஆயோட்டோச்சிட்லி'. அதாவது ‘ஆமை-முயல்'. ஆர்மடில்லோ தோற்றத்துடன் இது பொருந்துகிறதல்லவா.

சில வகை ஆர்மடில்லோக்கள் அழிவுக்குள்ளாகி இருக்கின்றன. அவற்றைக் காப்பதில் சம்பந்தப்பட்ட நாடுகளும் சூழலியலாளர்களும் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். அவர்களுக்கு இந்த உலகக் கோப்பையில் பெரும் ஊக்கம் கிடைக்கும் என்று நம்பலாம்.

கடைசியாக ஒரு விஷயம்: நம்மூர் அலுங்கும் அழிவின் விளிம்பில் இருக்கும் ஓர் இனம்தான். ஆனால், உள்ளூர் கபடிப் போட்டிகளிலிருந்து ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள்வரை, இது போன்ற உயிரினங்களைக் கண்டுகொள்வதில்லை. அரசுகளும் பிற அமைப்புகளும் புலிகள்,

சிட்டுக்குருவிகள் மேல் காட்டும் அக்கறையை அலுங்கு மேல் காட்டுவதில்லை. இயற்கையைப் பொறுத்தவரை அலுங்கும் புலியும் சமம்தான் என்பதை யாரும் உணர்வதில்லை என்பது துரதிர்ஷ்டமே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x