Last Updated : 24 Feb, 2018 11:06 AM

 

Published : 24 Feb 2018 11:06 AM
Last Updated : 24 Feb 2018 11:06 AM

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 71: மண்ணுக்கு உயிர் உண்டு

 

தா

ளாண்மைப் பண்ணை முறையில் மண் என்பது ஒரு உயிர்க்கண்டம். மண்ணுக்கு உயிர் உண்டு. மற்ற உயிர்களைப் போல மண்ணானது உண்கிறது, வளர்கிறது, தன்னைப் பெருக்கிக்கொள்கிறது. ஆனால், அது மண்ணால் நிகழ்வதில்லை. அந்த மண்ணில் உள்ள நுண்ணுயிர்களாலும் பிற பெரு உயிர்களாலும் நடக்கிறது.

கெட்டியாக இருந்த பாறையானது இயற்பியல், வேதியியல், உயிரியல் மாற்றங்களால் சிதைவுற்றுத் துகள்களாக மாறுகின்றன. அதை மணல் என்று கூறுகிறோம். அந்த மணலானது மேலும் சிதைவுற்று சிறியதாகி உயிர்மப் பொருட்களுடன் இணைந்து மண்ணாக மாறுகிறது.

மண்ணை உருவாக்குவதில் காற்று, மழை, வெயில் போன்ற காரணிகளும், செடியினங்கள், உயிரினங்களும் பங்காற்றுகின்றன. வெப்பம், குளிர் போன்ற காலநிலைக் காரணிகள் பாறையைச் சிதைக்கின்றன. இதற்கு நீண்ட காலம் ஆகிறது.

சரளை நிலம்

இந்த நிலம் அதிகமாக நீர் ஊடுருவும் திறன் கொண்டது. அதாவது இதில் பரப்பளவு நீரோட்டம் மிகக் குறைவாக இருக்கும். இவ்வகை நிலத்தில் மணல், சரளைக் கற்கள் போன்றவை அதிகம் காணப்படும். இந்த நிலத்தில் ஒரு மணி நேரத்தில் 25 மில்லி மீட்டருக்கும் அதிகமாக நீர் உள்ளிறங்கும் தன்மை கொண்டது என்று ஆய்வாளர்கள் நிறுவியுள்ளனர்.

மணல் நிலம்

முதலில் கூறிய அளவைவிடச் சற்றுக் குறைவாகவே நீர் இதனுள் இறங்கும். ஆனால், மழை நீரானது சற்று மெல்ல இறங்கும். கனமழை பெய்தால் மட்டுமே இவ்வகை நிலத்தில் நீரோட்டம் ஏற்படும். பாசனம் அடிக்கடி செய்ய வேண்டும். தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் இவ்வகை நிலம் அதிகமாக உள்ளது. வண்டல் மண் சில பகுதிகளில் காணப்படுகிறது. ஆற்றுப் படுகைகள் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. மணிக்கு 12.5 முதல் 25 மில்லி மீட்டர் அளவில் நீர் நிலத்தினுள் இறங்கும் வகையில் இவ்வகை நிலம் அமைந்துள்ளது.

செம்புரை நிலம் - மித நிலம்

இந்த நிலத்தில் மேற்பரப்பு நீரோட்டம் அதிகமாக இருக்கும். மெல்ல மெல்லவே நிலத்தினுள் நீர் இறங்கும். மணல் குறைவாக இருக்கும். செம்மண், மணலற்ற வண்டல் மண் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. இந்த நிலத்தில் நீரானது மணிக்கு 2.5 முதல் 12.5 மி.மீ. என்ற அளவில் இருக்கும். இந்த நிலத்தில் நல்ல வடிகால் வசதி இருக்கும்.

களிமண் நிலம்

களி, ஈழக்களி மண் நிலம் இவ்வகையைச் சேர்ந்தது. இதில் மேற்பரப்பு நீரோட்டம் மிக அதிகமாக இருக்கும். தண்ணீர் தேங்குவதும் அதிகம் இருக்கும். நிலத்தடியில் கடும்பாறைகள் இருக்கும். இந்நிலத்தில் மட்குப் பொருட்கள் மிகக் குறைவாக இருக்கும். தொடர்ந்து மண் அரிமானம் நடந்திருக்கும் பகுதிகள் இவ்வாறு இருக்கின்றன. இந்த நிலத்தில் நீர் உள்ளிறங்கும் அளவு மணிக்கு 2.5 மி.மீ.க்கும் குறைவாக இருக்கும்.

மேற்கண்ட நில அமைப்புகளை நிலம் என்று பொதுவாகக் கூறினாலும், மண்ணைக் குறிப்பாக வரையறுத்துக் கூற முடியும். பாறையானது நீண்ட காலமாகக் காற்று, வெப்பம், நுண்ணுயிரிச் செயல்பாடுகள் போன்ற பல்வேறு காரணிகளால் நொறுக்கப்பட்டு பொடியாக்கப்பட்டு மணலாக மாறுகிறது. இந்த மணலில் மட்கு சேர்ந்து மண் உருவாகிறது.

(அடுத்த வாரம்: நிலச் சரிவும் சாகுபடியும்)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x