Last Updated : 06 Jan, 2018 11:27 AM

 

Published : 06 Jan 2018 11:27 AM
Last Updated : 06 Jan 2018 11:27 AM

முதல் நண்பன் 16: அங்கீகாரம் பெறுமா நாட்டு நாய்கள்?

இன்றளவும் தமிழகத்து நாய் இனங்களுக்கான சந்தையில் மவுசு குறையாத நாட்டு நாய் இனம், ராஜபாளைய நாய்கள்தான். ராஜபாளையத்தைச் சார்ந்து இயங்கும் 50-க்கும் மேற்பட்ட நாய்ப் பண்ணைகளே அதற்குச் சாட்சி!

இன்று சிங்கப்பூர், ஆஸ்திரேலியாவில்கூட புலம்பெயர்ந்த தமிழர்கள் ராஜபாளைய நாய்களை வளர்க்கின்றனர். அவ்வளவு இருந்தும் இவற்றிற்கான உலக அளவிலான அங்கீகாரம் கிடைத்துள்ளதா என்றால், இல்லை என்பதே பதில்.

தேசிய அங்கீகாரம்

அப்படியான அங்கீகாரம் பெற்ற இனம் இந்தியாவில் ‘கேரவன் ஹவுண்ட்’ மட்டும்தான். இவ்வாறான அங்கீகாரத்தை யார் வழங்குவது? இந்திய அளவில் ‘கென்னல் கிளப் ஆஃப் இந்தியா’ வழங்குகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பே இந்த அமைப்பு ராஜபாளைய நாய்களை அங்கீகரித்து விட்டது. சரி, உலக அளவிலான அங்கீகாரம்?

‘வேர்ல்ட் கனைன் ஆர்கனைசேஷன்’ என்ற அமைப்புதான் உலக அளவிலான அங்கீகாரத்தை வழங்குகிறது. நாய்களின் நலனுக்காகப் பணியாற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அமைப்புகள் இதில் உறுப்பினராக உள்ளன. அதில் இந்தியாவின் கென்னல் கிளப்பும் ஒன்று! அதுபோல், இந்திய கென்னல் கிளப்பில், இந்தியாவைச் சேர்ந்த பல அமைப்புகள் உறுப்பினராக உள்ளன. அதில், ‘மதுரை கென்னல் கிளப்’பும் ஒன்று.

அங்கீகாரத்தில் சிக்கல்

மதுரை கென்னல் கிளப்பின் செயலர் எஸ்.ராமநாதனிடம் பேசிய போது ராஜபாளைய நாய்களுக்கு உலக அளவிலான அங்கீகாரத்தைப் பெறுவதில் உள்ள சிக்கல் புரியத் தொடங்கியது.

அவர் கூறும்போது “ உலக அளவில் எல்லா வகை நாய்களுக்குமான கண்காட்சி நடக்கும் போது, ஒரே இனத்தைச் சேர்ந்த 100 நாய்கள் அதில் கலந்து கொண்டால், அந்த இனம் அதிக அளவில் கவனம் பெறுகிறது. அது அங்கீகரிக்கவும்படுகிறது.

இந்தியாவில், அவ்வாறு நடத்தப்படும் கண்காட்சியில் ஒரே இனத்தைச் சேர்ந்த 100 நாய்கள் கலந்துகொள்ள முடியுமா என்றால், அதுதான் இல்லை. காரணம், இந்திய கென்னல் கிளப்பின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட இனங்களில் எவை ‘மைக்ரோசிப்’ பொருத்தப்பட்டுள்ளனவோ, அந்த நாய்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.

அவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட ஒரே இனம் ராஜபாளைய இனம் மட்டும்தான். ஆனால், அந்த இனத்தில் மைக்ரோசிப் பொருத்தப்பட்ட 100 நாய்கள், என்பது மிகவும் பெரிய இலக்கு. அது சாத்தியமாகும்போது, ராஜபாளைய நாய் இனத்துக்கு உலக அங்கீகாரம் கிடைக்கும்” என்றார்.

* உலக அளவில் அங்கீகாரம் பெற்ற இனம் இந்தியாவில் ‘கேரவன் ஹவுண்ட்’ மட்டும்தான்

* ‘வேர்ல்ட் கனைன் ஆர்கனைசேஷன்’ என்ற அமைப்புதான் நாய் இனங்களுக்கான உலக அங்கீகாரத்தை வழங்குகிறது

* ராஜபாளைய நாய் இனங்களுக்கு ‘கென்னல் கிளப் ஆஃப் இந்தியா’ அமைப்பு தேசிய அங்கீகாரத்தை வழங்கியுள்ளது

(அடுத்த வாரம்: அங்கீகாரத்தின் பயன்!)

கட்டுரையாளர், நாட்டு நாய்கள் ஆராய்ச்சியாளர்

தொடர்புக்கு: sivarichheart@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x