Last Updated : 11 Nov, 2017 11:13 AM

 

Published : 11 Nov 2017 11:13 AM
Last Updated : 11 Nov 2017 11:13 AM

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 57: தமிழர்களின் பருவநிலை அறிவு

 

ருவநிலை பற்றியும் தட்பவெப்பம் பற்றியும் வானிலை அறிவை பண்டை தமிழ் மக்கள் மிகச் சிறப்பாகப் பெற்றிருந்தனர். குறிப்பாக ‘கேப்ரிகான்’ எனப்படும் ஆட்டுத்தலையும் மீன் வாலையும் கொண்ட கற்பனை உருவம் பண்டை தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படும் சுறா மீன். இதற்கு ‘கோட்டு மீன்’ என்றே பெயர்.

‘கொடுந்தாள் முதலையொடு கோட்டுமீன் வழங்கும்

இருங்கழி இட்டுச் சுரம் நீந்தி’

என்று அகநானூறு குறிப்பிடுகிறது. அதாவது நன்னீரும் கடலும் சேர்கிற கழிமுகப் பகுதியில்கூட இந்தச் சுறாமீன் காணப்பட்டுள்ளது. அந்தச் சுறாவின் அடையாளத்தைக் கொண்ட விண்மீன் கூட்டத்துக்கு ‘சுறவ ஓரை’ என்று பெயர்.

‘எரிசடை எழில் வேழந்தலையெனக் கீழிறிந்து...’ என்ற பரிபாடல் வரி இந்த ஓரைகளைப் பற்றிக் குறிப்பிடுகிறது. மேலை வானியல் மரபில் ஒரு ஓரைக்கு செம்மறியையும், மற்றொரு ஓரைக்கு வெள்ளாட்டையும் (சுறாவுக்குப் பதிலாக) அடையாளப்படுத்தியுள்ளனர்.

ஒரு வேளை அவர்களது பகுதியில் கொம்பன் சுறா எனப்படும் விலங்கு இல்லாமல் இருந்திருக்கலாம். மற்ற தேசங்களிலிருந்து பெற்ற வானியல் அறிவைக் கொண்டு அவர்கள் அந்த வடிவத்தைப் பெற முயன்றிருக்கலாம். ஏனெனில் கிரேக்க வானியல் என்பது பாபிலோனிய, அதாவது சுமேரிய நாகரிக மக்களிடமிருந்து சென்றதாகக் குறிப்பிடுவர். அப்படியானால்அது தென்னகத்தில் இருந்து சென்றிருக்கக்கூடும்.

திணைக்கேற்ற வேளாண்மை

இது ஒருபுறம் இருக்க, மிகப் பழைய நூலான தொல்காப்பியம் பருவங்களையும் தட்பவெப்பத்தையும் அடிப்படையாகக்கொண்டு ‘திணை’ என்ற ஒரு சூழலியல் பகுப்பு முறையை முன்வைக்கிறது. நிலங்களை இந்த அடிப்படையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்று பிரித்து வழங்குகிறது. பாலை என்பதற்குத் தனித்த நிலப்பரப்பு இல்லை. தொல்காப்பியம் பாலைக்கு நிலத்தைக் குறிக்கவில்லை.

‘மாயோன் மேய காடுறை யுலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

வருணன் மேய பெருமணல் உலகமும்

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்

சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே’ என்று வழங்குகிறது.

முல்லையும் குறிஞ்சியும் வறட்சிக்கு இலக்காகும்போது, அது பாலையாக மாறும்.

'முல்லையுங் குறிஞ்சியும்

முறைமையின் திரிந்து

நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்துப்

பாலை யென்பதோர் படிவங் கொள்ளும்’ என்று சிலப்பதிகாரம் விளக்குகிறது.

இந்த நிலப் பகுப்பின் அடிப்படையில்தான் நாம் வேளாண்மையைக் கைகொள்ள வேண்டும். அப்படிச் செய்யும்போது செலவு குறையும், சிக்கலும் குறையும். முல்லை நிலத்தில் சம்பா நெல் பயிரிடுவேன் என்று அடம் பிடிக்கக் கூடாது. அடுத்து, திணைக்கேற்ற வேளாண்மை பற்றிப் பார்ப்போம்.

கட்டுரையாளர்,சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்

தொடர்புக்கு: pamayanmadal@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x