Published : 04 Nov 2017 11:24 AM
Last Updated : 04 Nov 2017 11:24 AM

கடலம்மா பேசுறங் கண்ணு 26: பேராழம்… பாதாளம்!

ரு சுற்றுலாப் பயணியாக நீங்கள் கடலைப் பார்த்தால் உங்கள் கவனத்தில் படுபவை உணர்பவை நீலம், பிரம்மாண்டப் பரப்பு, தொடுவானம், அலைகள், உப்புக் காற்று… இவைதான். ஆனால் ஒரு கடல் பயணியாக, மாலுமியாக, தொல்லியல், பருவநிலை ஆய்வாளராகக் கடலைப் பார்ப்பவர்களுக்கு அற்புதமான விஷயங்களைக் கடல் தருகிறது.

ஒரு மீனவராக நீங்கள் கடலைப் பார்க்க முடிந்தால், வேறு மாதிரியான அனுபவங்கள் வசப்படும். உதாரணமாக, கரையில் நின்று பார்ப்பவர்களுக்குத் தெரிகிற நீர்ப்பரப்பு பெருங்கடலல்ல. வளைகுடா, குடா, நீரிணை, கடல் என்றெல்லாம் அழைக்கப்படும் இப்பரப்பு, பெருங்கடலின் வெறும் விளிம்புதான். இன்னொரு விதத்தில் சொல்லப்போனால் கண்டத்தட்டுக் கடல் (continental shelf). இதன் கரைதொடும் பகுதியை கரைக்கடல் என்று அழைக்கலாம்.

கண்டத்தட்டின் மீன் வளம்

கரைக்கடலின் கடல் எல்லை, நிலவிளிம்பிலிருந்து 50 மீட்டர் ஆழம் வரையிலான பகுதி. இதிலிருந்து 200 மீட்டர் ஆழம் வரையிலான பகுதியோடு கண்டத்தட்டு முடிந்துவிடுகிறது. தமிழ்நாடு, ஆந்திரா பகுதிகளில் இதன் தொலைவு 5 கிமீ., குஜராத்தில் 100 கிமீ!

கண்டத்தட்டிலிருந்து கடலடித்தரை சாய்வுத் தன்மை அடைகிறது. கண்டச்சரிவு (continental slope) என்னும் இப்பகுதி கடல் பேராழப் பகுதி (abyss) வரை நீள்கிறது. கண்டத்தட்டு, பேராழம் என்னும் இரண்டு பெரும்பகுதிகள் இணைப்பான், இந்த கண்டச்சரிவு. கடலிலிருந்து நாம் பெறும் மீன்வளத்தின் ஆதாரமான உயிர்ச்சத்துகளும் கலத்தலும் சூரிய வெளிச்சமும் இந்த 200 மீட்டர் ஆழத்துக்கு உட்பட்ட பகுதியில்தான் கிடைக்கின்றன. கடல்மீன் அறுவடையில் 90 சதவீதம், கடல்பரப்பின் 10 சதவீதப் பகுதியிலிருந்து பெறப்படுவதாகும். இந்த 10 சதவீதப் பரப்பு, கண்டத்தட்டு பகுதிதான்.

காரிருளும் பேரழுத்தமும்

பெருங்கடல்களின் கூறுகளைப் பேராழப் பகுதிகளில் உணரலாம். உலகின் மொத்தப் பரப்பில் பாதி பேராழக் கடல். ஒட்டுமொத்தப் பெருங்கடற்பரப்பில் ஏழில் ஐந்து பங்குப் பரப்பு! கடலில் 200 மீட்டர் ஆழத்துக்குக் கீழே வெளிச்சம் பாய்வதில்லை. பேராழங்களின் முக்கியமான பண்புகள் காரிருளும் பேரழுத்தமும்.

பேராழம் முழுக்க கடலடித்தரை சீராக இருப்பதில்லை. சரிவும், சாய்பரப்பும், குழிகளும்… தவிர, கடற்பாதாளங்களும் (trenches) உள்ளன. உலகின் 17 கடற்பாதாளங்களில் 14 பசிபிக் பெருங்கடலிலும் இரண்டு அட்லாண்டிக்கிலும் ஒன்றே ஒன்று இந்தியப் பெருங்கடலிலும் உள்ளன.

உலகின் பெரும் பாதாளமான மரியானா கடற்பாதாளம் (பசிபிக்) 11,035 மீட்டர் ஆழம் (11 கி.மீ.) கொண்டது. இமய மலையைப் பிடுங்கி மரியானா பாதாளத்தில் போட்டால் அது கடல் மட்டத்துக்கு 2000 மீட்டருக்குக் கீழே அமிழ்ந்துவிடும்! உலகின் ஆழம் குறைந்த சந்தா பாதாளம் (இந்தியப் பெருங்கடல்) 7.25 கி.மீ. ஆழம் உள்ளது.

(அடுத்த வாரம்: பெருங்கடல்…

ஒரு முப்பரிமாண ஊடகம்!)

கட்டுரையாளர், பேராசிரியர்

மற்றும் கடல் சூழலியல்

– வள அரசியல் ஆய்வாளர்

தொடர்புக்கு: vareeth59@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x