Last Updated : 14 Jan, 2017 11:08 AM

 

Published : 14 Jan 2017 11:08 AM
Last Updated : 14 Jan 2017 11:08 AM

ஒரு பறவை போலே மிதக்கிறேனே...

சிறு வயதில் ஓர் அழகான கனவு எனக்கு அடிக்கடி வந்து கொண்டிருக்கும். அந்தக் கனவில் நான் பறந்து கொண்டிருப்பேன். பறந்தேன் என்று சொல்வதைவிட, மிதந்தேன் என்பதே சரி. எனக்கு மிகவும் பிடித்தமான கனவு அது. தரையில் இருந்து எந்தவித உதவியும் இல்லாமல், என்னால் அப்படியே மேலே எழுந்து மிதக்க முடியும். இறக்கைகள் எதுவும் இருக்காது, ஆனாலும் உயரே படிப்படியாக மேலே செல்லவும், தேவைப்படும்போது கீழே வரவும் முடியும். எல்லாக் கனவுகளைப் போலவும் எதுவும் தெளிவாக இருக்காது, விழித்தவுடன் கற்பனையில் கண்டதில் பாதி மட்டுமே நினைவில் தங்கியிருக்கும்.

ஒரு வேளை சூப்பர்மேன், பேட்மேன் போன்ற காமிக்ஸ் புத்தகங்களை அப்போது படித்துக்கொண்டிருந்ததால் வந்த விளைவோ என்னவோ. இப்போதெல்லாம் அது போன்ற கனவுகள் வருவதில்லை. அப்படியே வந்தாலும் கிளம்பிப்போகும் ரயில் அல்லது பேருந்தைப் பிடிக்க அவற்றின் பின்னால் ஓடுவது போன்ற கனவுகளே துரத்துகின்றன. ஆனால் என்ன முயற்சி செய்தாலும் அவற்றைப் பிடிக்கவோ, வேகமாக ஓடவோ முடியாது. எதிர்க்காற்றில் சைக்கிள் மிதித்துக்கொண்டு செல்வதுபோல மிகுந்த சிரமமாக இருக்கும்.

ஊரைத் தவறவிட்ட கனவு

இரண்டு மாதங்களுக்கு முன்பு அப்படி ஒரு கனவு. ஒரு ரயில் நிலையத்தில் வண்டி நிற்கிறது. நான் இறங்கி வெளியே பறவைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறேன். ரயில் கிளம்பிவிடுகிறது. ஓடிப் பிடிக்க முயற்சிக்கிறேன், முடியவில்லை. வெளியே வந்து ஒரு காரில் விட்ட ரயிலை அடுத்த நிலையத்தில் பிடித்துவிடப் பயணிக்கிறேன். அப்போது கைபேசி ஒலித்தது. கனவு கலைந்து திடுக்கிட்டு விழித்து வெளியே பார்த்தால் நான் இறங்க வேண்டிய திருநெல்வேலியையும் தாண்டி, நாசரெத் எனும் இடத்தில் ரயில் நின்றுகொண்டிருந்தது. பிறகு பஸ் பிடித்துத் திருநெல்வேலி போய்ச் சேர்ந்தேன்.

வெகு சில கனவுகள் மனதில் நீக்கமறப் பதிந்திருக்கின்றன. பல ஆண்டுகளுக்கு முன்பு நீலகிரி மலைத்தொடரில் உள்ள அவலாஞ்சி எனும் இடத்துக்குப் பணி நிமித்தமாகச் சென்றிருந்தேன். சென்றடைந்த நாள் இரவே ஒரு விராலடிப்பானை (Osprey) காண்பது போன்றதொரு கனவு வந்தது. மறுநாள் காலையில் நண்பர்களிடம் அதைப் பகிர்ந்துகொண்டேன். அதே நாளில் மேல் பவானி அணை வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, விராலடிப்பானை நாங்கள் கண்டோம். இந்தப் பறவையைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையோடு அங்கே போகவில்லை. என்றாலும், எதிர்பாராதவிதமாகக் கனவில் கண்ட பறவையை நேரில் பார்த்து மட்டற்ற மகிழ்ச்சியைத் தந்தது.

அண்மைக் காலங்களில் கனவுகளே அதிகம் வருவதில்லை. அதுவும் காற்றில் மிதப்பதைப் போன்ற கனவுகள் எட்டிக்கூடப் பார்ப்பதில்லை. அந்த ஏக்கம் மனதில் தேங்கிக் கிடக்கிறது. மரக்கவிகையின் மேல் கருங்கழுகு (Black Eagle) சலனமில்லாமல் தவழ்ந்து செல்வதைப் பார்க்கும் போதெல்லாம், சிறு வயதில் மிதப்பது போல் நான் கண்ட கனவு மனதைத் தட்டும்.

இப்போதெல்லாம் தூங்கும்போது காணும் கனவுகளைவிட, விழித்துக்கொண்டே காணும் கனவுகள்தான் அதிகம். அவற்றில் பல பறவைகளைப் பற்றியவை. என்றாலும், அவை வெறும் பகல் கனவுகள் அல்ல! காலத்துக்கும் வயதுக்கும் ஏற்பக் கனவுகளும் நிலைமாறிக்கொண்டும், அதிகரித்துக் கொண்டும் இருக்கின்றன. இந்தக் கனவுகள் யாவற்றையும் மெய்ப்பட வைக்க, பல குறிக்கோள்கள் என் முன்னே குவிந்து கிடக்கின்றன. இவற்றில் எனக்கானவை சில, பறவைகளுக்கானவை பல.

எல்லோரும் பங்கேற்போம்

நான் பறவைகளைப் பார்த்துப் பழகியது 1996 முதல். கானுலாக்களின் போதும், களப்பணியின் போதும் பறவைகளைப் பார்த்து அடையாளம் கண்டு பட்டியலிட்டு, அதையெல்லாம் ஒரு குறிப்பேட்டில் எழுதி வைத்து வருகிறேன். இதனால்தான் இந்த இடத்தில், இந்தத் தேதியில், இத்தனை வகையான பறவைகளை நான் பார்த்திருக்கிறேன் என்பதை என்னால் பிற்பாடு அறிந்துகொள்ள முடிகிறது. நான் மட்டுமல்ல, பொறுப்பான இயற்கை ஆர்வலர்கள் அனைவரும் இதைத்தான் செய்துகொண்டிருப்பார்கள்.

அண்மை காலமாக 2013-ல் இருந்து 'eBird' எனும் இணையத் தளத்தில் நான் பார்க்கும் பறவைகளையும், அவற்றின் எண்ணிக்கையையும், அவற்றின் குணாதிசயங்களையும், எங்கே, எந்த நேரத்தில் பார்க்கப்பட்டது என்பது போன்ற விவரங்களையும் பதிவு செய்துகொண்டிருக்கிறேன். நான் சமர்ப்பிக்கும் விவரங்களை யார் வேண்டுமானாலும், அந்த இணையத் தளம் வழியாக அறிந்துகொள்ள முடியும். இதனால் பறவைகள் பாதுகாப்புக்கு உதவமுடியுமா என்று கேட்டால், முடியும். பறவை ஆர்வலர்கள் அனைவரும் இது

போன்ற ஒரே இணையதளத்தில் தங்களது தரவுகளைப் பதிவுசெய்வதன் மூலம் பறவைகளின் பரவல், எந்தக் காலத்தில், எந்த இடத்தில் அவை உள்ளன, அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கிறதா அல்லது குறைகிறதா என்பதை எல்லாம் அறிந்துகொள்ள முடியும்.

இந்தத் தரவுகள் அனைத்தையும் பறவை ஆராய்ச்சியாளர்கள் மட்டுமே சேகரிப்பதற்குப் பல காலம் ஆகலாம். ஆனால், பொதுமக்கள் அனைவரும் இது போன்ற மக்கள் அறிவியல் (Citizen science) திட்டங்களில் இடைவிடாமல் பங்குகொண்டால், குறைந்த காலத்தில் பல வகையான பறவைகளின் நிலையை ஓரளவுக்காவது அறிந்துகொள்ள முடியும். அவற்றின் நிலையை அறிந்துகொள்ளும்போது, அவை வாழும் இடங்களின் நிலைமையையும் அறிய முடியும். அதன்மூலம் அவற்றின் வாழிடங்களைப் பாதுகாக்க வாய்ப்பு உண்டு. நாம் ஒவ்வொருவரும் பறவைகளைப் பார்ப்பதை ஒரு பொழுதுபோக்காக ஆரம்பித்துப் படிப்படியாக இது போன்ற மக்கள் அறிவியல் திட்டங்களில் பங்களிப்பதன் மூலம், நாம் பார்த்து ரசிக்கும் பறவைகளைப் பாதுகாப்பதில் மறைமுகமாகப் பங்களிக்கிறோம். சரி, மீண்டும் எனது கனவுகளுக்கு வருவோம்.

என்னுடைய குறிக்கோள்கள்

பாறுக் கழுகுகள் (பிணந்தின்னிக் கழுகுகள்) எண்ணிக்கையில் வெகுவாகக் குறைந்து அற்றுப் போகும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டன. ஆகவே, இந்தியாவில் தென்படும் ஒன்பது வகை பாறு கழுகுகளையும் பார்த்துவிட வேண்டும் எனச் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு கனவு இருந்தது. அந்தக் கனவு 2014-ல் மெய்ப்பட்டது. இந்தியாவின் பல மூலைகளுக்குச் சென்று அவற்றைக் கண்டடைந்தேன். அப்போதுதான் தினமும் பறவைகளைப் பார்க்கும் கனவு மனதில் உதித்தது.

பறவைகளைப் பல ஆண்டுகளாகப் பார்த்து வந்தாலும், 12 மார்ச் 2014 முதல் இன்றுவரை ஒவ்வொரு நாளும் நான் எந்த ஊரில் இருந்தாலும் 15 நிமிடங்களுக்குப் பறவைகளைப் பார்த்துப் பட்டியலிட்டு 'eBird' தளத்தில் பதிவேற்றிக்கொண்டிருக்கிறேன்.

நான் உயிருள்ளவரை இதைத் தொடர வேண்டும் என்பதே எனது முதல் கனவு.

இந்தியாவில் நான் பல இடங்களுக்குப் பறவைகளைப் பார்க்கச் சென்றதை eBird தளத்தில் உள்ள வரைபடத்தில் கண்டபோது, இதுவரை இந்தியாவில் மொத்தமுள்ள 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 24-ல் நான் பறவைகளைப் பார்த்துப் பதிவு செய்திருப்பது தெரிந்தது. எனது அடுத்த முயற்சி எஞ்சியுள்ள எல்லா மாநிலங்களுக்கும் சென்று, அங்குள்ள பறவைகளையும் ஒரு முறையாவது பட்டியலிடுவதுதான்.

அப்படியே தமிழ்நாட்டில் எனது பறவை நோக்கும் நிலையின் வரைபடத்தைப் பார்த்தபோது, இதுவரை நான் போகாத மாவட்டங்களையும் காணமுடிந்தது. எனது இந்த ஆண்டு இலக்கு தமிழ்நாட்டில் உள்ள எல்லா மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து, பறவைகளைப் பார்த்துப் பட்டியலிட வேண்டும் என்பதுதான்.

இது போலப் பட்டியலிடுவதற்கு இன்னும் சில கனவுகள் உள்ளன. என்றாலும் அவை யாவும் எனது தனிப்பட்ட ஆர்வங்கள். இந்தக் கனவுகள் சிறிய அளவிலாவது, பறவைகளின் நிலையை அறிய உதவும். எனினும் பறவைகளின் பாதுகாப்புக்கு இது போன்ற ஒரு சிலரின் தனிப்பட்ட பங்களிப்பு மட்டுமே போதாது.

பறவைகளுக்கான குறிக்கோள்கள்

பறவைகளையும் அவற்றின் வாழிடங்களையும் பாதுகாப்பதற்கு, முதலில் அவை எங்கெங்கே பரவியுள்ளன என்பதைப் பற்றிய அடிப்படை தகவல் அவசியம். ஒரு சிலரால் எல்லா இடங்களுக்கும் சென்று பார்த்தறிவது இயலாத காரியம். ஆகவே பறவைக் கணக்கெடுப்புகளின் மூலம் பறவை ஆராய்ச்சியில் ஈடுபடவும் பறவைப் பாதுகாப்பில் பங்குகொள்ளவும் பொதுமக்களும் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

பறவைகளைச் சரியாக அடையாளம் காணுதல், அவற்றை அறிவியல் முறைப்படி கணக்கெடுத்தல், பறவைகளின் வாழிடங்களின் தன்மையை அறிதல், ஆவணப்படுத்துதல் முதலிய அடிப்படை முறைகளை, தொடக்கநிலைப் பறவை ஆர்வலர்களுக்கு எளிய மொழியில் எழுதியும், காணொளிப் பதிவுகள் மூலமும், களத்திலும் பயிற்சி அளிக்க வேண்டும்.

பூவுலகின் இயற்கைச் சமநிலையைப் பராமரிப்பதில், நமக்கு உதவுவதில் பறவைகளின் பங்களிப்பு பற்றி மக்கள் அனைவருக்கும் எடுத்துச் சொல்லவேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் புறவுலகில் நாட்டம் ஏற்படப் பறவை நோக்குதலை அறிமுகம் செய்ய வேண்டும். அதை வெறும் பொழுதுபோக்காக வைத்துக்கொள்ளாமல் புறவுலகின் மேல் கரிசனம் கொள்ளவும், அதன்மூலம் இயற்கை பாதுகாப்புக்குப் பங்களிக்கவும் கற்றுத்தர வேண்டும்.

பலரது கனவு

தமிழில் பறவைகள் குறித்த துறைசார் நூல்கள் மேன்மேலும் வெளிவர வேண்டும். தமிழகத்தின் பல பகுதிகளில் தென்படும் பறவைகளின் பெயர்களைக் கண்டறிந்து ஆவணப்படுத்தி, சரியான முறையில் பெயரிடவும் வேண்டும்.

பறவை நோக்குதல் என்பது பெரும்பாலும் ஆண்கள் ஈடுபடும் ஒரு செயலாகவே இருந்துவருகிறது. இதில் பெண்கள் பெருமளவில் கலந்துகொண்டு பங்களிப்பதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும். பறவைக் கவிஞர்கள், ஓவியர்கள் எனப் பன்முகத்தன்மை கொண்ட பறவை ஆர்வலர்களை உருவாக்கவும் ஊக்குவிக்கவும் வேண்டும்.

இது எனது கனவு மட்டுமல்ல, என்னைப் போல் எண்ணற்ற பறவை ஆர்வலர்கள் எண்ணற்ற கனவுகளைச் சுமந்துகொண்டுள்ளனர். ஆகவே, தமிழகம் முழுவதும் உள்ள பறவை ஆர்வலர்களை ஒன்றிணைத்துப் பறவைகளின், அவற்றின் வாழிடங்களின் பாதுகாப்புக்காகப் பாடுபடவேண்டும்.

மொத்தத்தில் பறவைக் கனவுகளை விதைத்து, நேர்மையான, பொறுப்பான, செயல்திறம் மிக்க பறவை ஆர்வலர்களையும், பறவைகளுக்காகப் போராடுபவர்களையும், பறவைகளைப் பற்றி கனவு காண்போரையும் கொண்ட சமூகத்தை உருவாக்க வேண்டும். அப்போது அந்தச் சமூகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் பறவையைப் போலக் காற்றில் ஆனந்தமாகப் பறந்து செல்வது போன்ற கனவு தினமும் வரும்.

கட்டுரையாளர், காட்டுயிர் ஆராய்ச்சியாளர்
தொடர்புக்வகு: jegan@ncf-india.org

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x