Last Updated : 10 Dec, 2016 09:58 AM

 

Published : 10 Dec 2016 09:58 AM
Last Updated : 10 Dec 2016 09:58 AM

மாடித் தோட்டம்: செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை

மாடித் தோட்டம் அமைப்பதற்கான எளிய வழிமுறைகளை விளக்குகிறார், சென்னையில் மாடித் தோட்டம் என்னும் கருத்தைப் பரவலாக்கிய ‘முன்னத்தி ஏரா’ன பம்மலைச் சேர்ந்த இந்திரகுமார்:

# மாடித் தோட்டம் போடுகிறேன் பேர்வழி என்று வீட்டை சேதப்படுத்தும் வேலையைச் செய்துவிடக் கூடாது. தோட்டம் போடும்போது, வீடு சேதமடையாமல் கவனமாகச் செய்ய வேண்டும்.

# ஒரு பங்கு தோட்ட மண், ஒரு பங்கு கரும்புச் சக்கை, ஒரு பங்கு காய்ந்த சாணத்தை எடு்த்துக்கொள்ள வேண்டும். இந்தக் கலவையில் நீர் ஊற்றி வர வேண்டும். இதில் இரண்டு மண்புழுக்களையும் விட வேண்டும். புழுக்கள் மண்ணை நன்கு உழுதுவிடும்.

# தகுந்த இடைவெளியில் விதைகளை இட வேண்டும். அப்போதுதான் செடி நன்கு வளரும்.

# 15 நாட்களுக்கு ஒருமுறை இயற்கை உரம் இட வேண்டும்.

# மீன் அமினோ அமிலத்தைப் பயன்படுத்தும்போது விளைச்சல் சிறப்பாக இருக்கும்.

# ரோஜா செடிக்கு சிறந்த டானிக் காய்ந்த முட்டை ஓடு, இறால் தோல், மீன் முள் போன்றவை.

# பூச்சி தாக்காமல் இருப்பதற்கு சம அளவு இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு எடுத்து, விழுதாக அரைத்துக்கொண்டு, ஒரு டம்ளர் நீரில் கரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். அடுத்த நாள் அந்தக் கரைசலோடு ஐந்து மடங்கு தண்ணீர் சேர்த்து வடிகட்டி, செடிகளுக்குத் தெளிக்க வேண்டும். இது மிகச் சிறந்த பாதுகாப்பு முறை. செடிகளைப் பூச்சிகள் தாக்கவே தாக்காது.

# அலங்காரச் செடிகளைத் தவிர்த்து அத்தியாவசியமான காய்கறி, கீரை, மூலிகை, மலர்ச் செடிகளை வளர்க்க வேண்டும்.

# கத்திரி, வெண்டை, தக்காளி, பீர்க்கங்காய், புதினா, மணத்தக்காளி, ஓமவல்லி, ரோஜா, சம்பங்கி, மல்லிகை போன்ற செடிகளை மாடித் தோட்டத்தில் பயிரிடலாம்.

# துளசி, சோற்றுக் கற்றாழை போன்றவற்றை மாடித் தோட்டத்தில் அவசியம் வளர்க்க வேண்டும். மாதவிடாய்க் கோளாறுகளை விரட்டும் அருமருந்து சோற்றுக் கற்றாழை.

# கீரைகளை பெரும்பாலும் மாடித் தோட்டத்தில் வளர்த்துச் சாப்பிடுங்கள். வெளியில் விற்கப்படும் கீரைகளில் அதிக பூச்சி மருந்து தெளிக்கப்படுகிறது.

# சத்து நிறைந்த கறிவேப்பிலை, புதினா, கொத்துமல்லி போன்றவற்றை வீட்டிலேயே வளர்க்கலாம்.

# வெந்தயக் கீரையை விதைத்த 7-வது நாளில் எடுத்துச் சமைத்துச் சாப்பிட்டால், பல்வேறு விதமான நோய்களை அது தீர்க்கும்.

# மாடித் தோட்டத்தில் (முருங்கையைத் தவிர) வேறு மரங்களை வளர்க்க வேண்டாம். காற்றின் வேகத்தில் மரங்கள் சாயும் ஆபத்து உண்டு, கட்டிடத்துக்கும் நல்லதல்ல.

# காய்கறிக் கழிவைக் குப்பையாகக் கருதாதீர்கள். அவற்றைச் சேகரித்து, அதன்மூலம் கிடைக்கும் உரத்தை செடிகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்குப் பயன்படுத்தலாம். தோட்டத்தின் இலைதழைகளையும் வீட்டில் சேரும் மக்கக்கூடிய குப்பைகளையும் சேகரித்து, அவற்றின் மூலம் இயற்கை உரத்தை நாமே தயாரிக்கலாம்.




இந்திரகுமார்

நான் இங்கிலீஷ் எலெக்ட்ரிகல் நிறுவனத்தில் வேலை பார்த்துவந்தேன். வேலைக்குச் சென்றுவருவதற்கு வசதியாக 1986-ல் இந்தப் பகுதியில் வீட்டைக் கட்டினேன். அப்போது இந்தப் பகுதியில் 40 வீடுகள்தான் இருந்தன. மற்றொரு பக்கம் பம்மல், பல்லாவரம், குரோம்பேட்டை பகுதிகளில் தோல் தொழிற்சாலைகள் பெருகின. இதன் விளைவாக 1998-களில் நிலத்தடி நீர் கசக்க ஆரம்பித்துவிட்டது. அப்போதே இதற்கான தீர்வாக மழைநீர் சேகரிப்பை எங்கள் பகுதியில் செயல்படுத்தத் தொடங்கினோம்.

அதன் பிறகுதான் அரசு இந்தத் திட்டத்தை கையிலெடுத்து பரவலாக்கியது. தொடர்ந்து நான் அனுபவப்பூர்வமாகக் கற்றுக்கொண்டதை பலருக்கு கற்றுக் கொடுக்க ஆரம்பித்தேன். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களில் தொடங்கி, பக்கத்து ஊர்களில், மற்ற மாநிலங்களில் இருந்தும்கூட மாடித் தோட்டம் போடுவதற்கான ஆலோசனைகளை என்னிடம் கேட்டுப் பெற ஆரம்பித்தார்கள். 2004-ல் நான் பார்த்துக்கொண்டிருந்த வேலையிலிருந்து விலகி, முழு நேரமாக மாடித் தோட்டம் போடுவதற்கான ஆலோசனைகளை வழங்க ஆரம்பித்தேன்.

பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இருந்தெல்லாம் மாணவர்களும் பேராசிரியர்களும் கற்றுக்கொண்டு சென்றிருக்கிறார்கள். இந்த வீடே தோட்டக் கலையை கற்றுத் தரும் கோயில். நான் பூசாரி. தட்சிணை பற்றி நான் யோசிப்பதில்லை. என்னுடைய ஒரே வேண்டுகோள், வருவதை முன்கூட்டியே தெரிவித்துவிட்டு வாருங்கள். குறித்த நேரத்துக்கு வந்துவிடுங்கள் என்பது மட்டும்தான்.

மாடித் தோட்ட ஆர்வலரானது எப்படி?

இந்திரகுமார் தொடர்புக்கு: 9941007057

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x