Published : 10 Jun 2017 12:07 PM
Last Updated : 10 Jun 2017 12:07 PM
இன்றைக்கு மாடித் தோட்டம் வைத்திருப்பவர்கள், வீட்டுத் தோட்டம் வைத்திருப்பவர்கள் காய்கறி, பழங்கள் போன்றவற்றை இயற்கை முறையிலேயே உற்பத்தி செய்வது அதிகரித்து வருக்கிறது. இந்தப் பயிர்களுக்கு ஊட்டம் அளிக்க மண்புழு உரம் அல்லது மண்புழு எரு பயன்படும். இந்த உரத்தை செலவில்லாமல் வீட்டிலேயே தயாரிக்க முடியும்.
மண்புழு உரம் தயாரிக்க முதலில் தோட்டக் கழிவுகள், சமையலறைக் கழிவுகள், வீட்டில் உள்ள மற்ற மக்கக்கூடிய கழிவை மக்குவதற்கு விடவும்.
இவை நன்றாக மக்குவதற்கு 45, 60 நாட்கள் ஆகும். அதுவரை ஒரு கலனில், தொட்டியில், குழியில் போட்டு வைக்கவும்.
கழிவு நன்றாக மக்கிய பிறகு, அதாவது 45-60 நாட்களுக்குப் பிறகு அவற்றில் மண்புழுக்களை விடவும்.
அதிலிருந்து 60 நாட்களில் கறுப்பு நிறம் கொண்ட மண்வாசனை நிறைந்த மண்புழு எரு தயாராகி விடும். உரம் தயாராகிவிட்டது என்பதற்கு அதன் வாசனை மாற்றம் முக்கியமானது.
மண்புழு குளியல் நீர்
மண்புழு உரத்தைப் போலவே, மண்புழு குளியல் நீரும் பயிர்களுக்கு ஊட்டம் தரும். மண்புழு உரம் உள்ள தொட்டியில் தண்ணீரைச் சொட்ட விடுவதன் மூலம் மண்புழு குளியல் நீரைத் தயாரிக்க முடியும். சொட்டும் நீர் கீழே இறங்கும்போது, மண்புழுவின் உடலில் சுரக்கும் திரவத்தையும், எருவில் உள்ள சத்துகளையும் கழுவிக்கொண்டு கீழே வந்து சேரும். இந்த மண்புழு குளியல் நீரை அன்றாடம் சேகரித்துப் பயன்படுத்த வேண்டும்.
மண்புழு குளியல் நீரை அப்படியே பயன்படுத்தக் கூடாது. ஒரு லிட்டர் மண்புழு குளியல் நீர் கிடைத்தால், அத்துடன் 10 லிட்டர் நல்ல தண்ணீர் சேர்த்து நீர்க்கச் செய்து, அதை பயிர்களுக்குத் தெளிக்க வேண்டும்.
நன்றி: பினாங்கு பயனீட்டாளர் சங்கக் கையேடு
- நேயா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT