Published : 23 May 2015 02:26 PM
Last Updated : 23 May 2015 02:26 PM

திருத்துறைப்பூண்டி நெல் திருவிழா

பாரம்பரிய நெல் வகைகளைத் தேடிக் கண்டறிந்து, அவற்றைப் பரவலாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது ‘நமது நெல்லைக் காப்போம்’ இயக்கம். ‘கிரியேட்’ அமைப்பின் ஓர் அங்கமாகச் செயல்பட்டுவரும் இந்த இயக்கத்தின் முயற்சியால் கடந்த பத்தாண்டுகளில் 150-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகள் பரவலாக்கப்பட்டுள்ளன.

கடந்த 2006-ம் ஆண்டு முதல் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ஆதிரெங்கம் கிராமத்தில் முதல் நெல் திருவிழா நடைபெற்றது. இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தொடங்கி வைத்த அந்த விழாவில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

ஒவ்வோர் ஆண்டும் மே மாத இறுதியில் ஆதிரெங்கம் கிராமத்தில் நெல் திருவிழா நடைபெற்றுவருகிறது. இந்த ஆண்டு மே 30, 31 ஆகிய இரண்டு நாட்கள் 9-வது நெல் திருவிழா நடைபெறுகிறது. 5 ஆயிரம் விவசாயிகள் பங்கேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

"இந்த ஆண்டு தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் நெல் திருவிழாவில் பங்கேற்கின்றனர். தமிழக அரசின் வேளாண்மைத் துறை மூலம் மட்டுமே 1,600 விவசாயிகள் பங்கேற்கின்றனர்.

திருவிழாவில் பங்கேற்கும் ஒவ்வொரு விவசாயிக்கும் தலா 2 கிலோ விதை நெல் வழங்குவதற்காக 153 பாரம்பரிய நெல் ரக விதைகளைச் சேகரித்துள்ளோம். இவை வறட்சி, வெள்ளம், பூச்சி தாக்குதலைத் தாங்கி வளரக்கூடியவை" என்கிறார் நெல் திருவிழா ஒருங்கிணைப்பாளர் ‘நெல்’ ஜெயராமன்.

- வி. தேவதாசன்

திருவிழா தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு: 94433 20954

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x