Published : 22 Aug 2015 11:30 AM
Last Updated : 22 Aug 2015 11:30 AM

திருச்சியில் ஆக. 29-ல் இயற்கை வேளாண் திருவிழா

வளம் குன்றாத விவசாயத்துக்கு, இயற்கை வேளாண்மையே தீர்வு என்ற கருத்து உலகம் முழுவதும் பரவலாகக் கவனம் பெற ஆரம்பித்திருக்கிறது. இந்தச் சூழலில் தேசிய அளவிலும் தமிழகத்திலும் பாரம்பரியமான இயற்கை வேளாண் முறைகளைப் பரவச் செய்வது, ஒரு மக்கள் இயக்கமாக நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் ‘தி இந்து' தமிழ் நாளிதழின் ‘நிலமும் வளமும்’ மற்றும் ‘கிரியேட் - நமது நெல்லைக் காப்போம்’ இயக்கம் இணைந்து இயற்கை வேளாண்மைத் திருவிழாவை திருச்சியில் ஆகஸ்ட் 29-ம் தேதி (சனிக்கிழமை) நடத்தத் திட்டமிட்டிருக்கின்றன.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள மதி இந்திராகாந்தி மகளிர் கல்லூரியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கே.ராமசாமி உட்பட பலர் இந்தத் திருவிழாவில் உரையாற்ற உள்ளனர்.

அனுபவப் பகிர்வு

கால் கிலோ விதை நெல்லை மட்டுமே பயன்படுத்தி ஒரு ஏக்கரில் 4 ஆயிரம் கிலோவரை மகசூல் எடுத்துவரும் நெல் விவசாயி; வைர நகை வியாபாரம் செய்யும் பரம்பரையில் பிறந்து, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை நடத்தி விட்டு, இப்போது ஒருங்கிணைந்த இயற்கை வேளாண் பண்ணை மற்றும் நாட்டுப் பசு வளர்ப்பு மூலம் பெரும் லாபம் ஈட்டி வரும் தொழில் அதிபர்; பன்னாட்டு பெருந்தொழில் நிறுவனங்களில் பணியாற்றிவரும் தகவல் தொழில்நுட்பப் பொறியாளர்கள் பலரை விவசாயிகளாக மாற்றியதோடு மட்டுமல்லாமல், இயற்கை வேளாண் விளைபொருள்களுக்கு வெற்றிகரமான சந்தையை உருவாக்கியுள்ள மென்பொருள் பொறியாளர் எனப் பல வெற்றியாளர்கள் இந்தத் திருவிழாவில் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள இருக்கின்றனர்.

இயற்கை வேளாண்மை மூலம் நமது சூழலியல் பாதுகாக்கப்படும் விதம் குறித்தும், மக்களுக்கு நஞ்சில்லா உணவு கிடைப்பது பற்றியும், விவசாயிகளுக்கு லாபகரமான தொழிலாக வேளாண் தொழிலை மாற்றுவது தொடர்பாகவும் மேலும் பலர் உரையாற்றுகின்றனர்.

இந்தத் திருவிழாவில் அனைத்துப் பகுதி விவசாயிகளும் பங்கேற்கலாம். அனுமதி இலவசம், அதேநேரம் முன்பதிவு அவசியம்.

மேலும் விவரங்களுக்கு:

வி.தேவதாசன் (74013 29435), நெல் ஜெயராமன் (94433 20954)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x