Published : 27 Nov 2018 10:12 AM
Last Updated : 27 Nov 2018 10:12 AM

அந்த நாள் 11: அது என்ன அல்லங்காடி?

சிலப்பதிகாரத்துக்கும் மதுரைக்கும் இடையிலான தொடர்பைப் பிரித்துப் பார்க்கவே முடியாது. சோழ நாட்டைச் சேர்ந்த கோவலனும் கண்ணகியும் தங்கள் நகையை விற்க மதுரைக்கு வந்ததில் இருந்தே, மதுரையில் தொழில் சிறந்து இருந்ததும், பொற்கொல்லர்கள்-பொன் விற்பனை செய்பவர்கள் இருந்ததையும் தெரிந்துகொள்ள முடியுது.

அன்றைய மதுரையில் அரண்மனை, கோயில்கள், சந்தைகள், கட்டிடங்கள், திட்டமிட்ட தெருக்கள் அமைக்கப்பட்டிருந்துச்சு. அது மட்டுமில்லாம தெருக்கள் அகலமாக இருந்துச்சுன்னு நக்கீரர் எழுதிய ‘திருமுருகாற்றுப்படை’ பாடல் மூலமாத் தெரிந்துகொள்ள முடியுது. ‘திருவிளையாடல்’ படத்தில் வருவாரே, அதே நக்கீரர் எழுதிய பாடல்தான்.

நிறைந்திருந்த தொழில்கள்

மதுரை அடிப்படைல ஒரு வணிக நகரம். முத்து, ரத்தினக் கற்கள், நறுமணப் பொருட்களின் மையமாக மதுரை திகழ்ந்துச்சு. உழவு, நெசவு, தச்சு, இரும்பு, சிற்பம், ஓவியம் போன்ற பல்வேறு தொழில்கள் அங்க இருந்திருக்கு. படைவீரர்கள், வணிகர்கள், உழவர்கள் என ஒவ்வொரு தொழில் செஞ்சவங்களும் தனித்தனி தெருல வாழ்ந்திருக்காங்க. நிறையத் தொழில்கள் நடைபெற்றதால் திறை எனப்படும் கப்பமும் அரசுக்கு அதிகமாக் கிடைச்சிருக்கு.

இப்போ முக்கியமான ஒரு பகுதிய நாம பார்க்கப் போறோம், செழியன். அன்றைய மதுரைல ரெண்டு வகை அங்காடிகள் இருந்திருக்கு. அவை நாளங்காடியும் அல்லங்காடியும். பெயரைப் பார்த்து ஏதோ புதுசா இருக்கேன்னு நினைச்சுக்காத. பகல் சந்தை, இரவு சந்தையைத்தான் அப்படிச் சொல்லியிருக்காங்க. இப்ப ஒவ்வொரு கடைக்கும் பெயர்ப் பலகை இருக்கு.

ஆனா, அன்றைக்கு இந்தக் கடைகள்ல என்ன பொருள் விற்கிறாங்கங்கிறதை எப்படிச் சொல்லயிருப்பாங்க? அதோ ஒவ்வொரு கடையின் முன்னாலயும் அதற்குரிய கொடியக் கட்டி குறிப்பால உணர்த்தியிருக்காங்க பாரேன். இந்தச் சந்தைகள் எப்பவும் பரபரப்பாக இயங்கின என்று பத்துப்பாட்டின் மிக நீளமான பாடலான ‘மதுரைக்காஞ்சி’ சொல்லுது.

பெண்கள் செய்த விற்பனை

இன்றைக்கும் கடைத் தெரு, அங்காடித் தெரு போன்ற சொற்கள் நம்மிடையே புழங்குது. அதோட, அன்றைக்கு அல்லங்காடி இருந்த மதுரைக்கு, இன்றைக்கும் 'தூங்கா நகர்'னு பெயர் இருக்கிறதை மறந்துட முடியாதே.

அங்காடிகள்தான்னு இல்ல, அந்தக் காலத்துப் பெண்கள் பூக்களையும் வேறு பல பொருட்களையும் வீடுகளுக்கே எடுத்துட்டுப் போய் வித்திருக்காங்க. நகரங்கள்ல காய்கறி விக்கிறது, கிராமங்களில் மோர் விக்கிறதைப் போன்று சமீபகாலம்வரை இந்தப் பழக்கத்தின் தொடர்ச்சியைப் பார்க்க முடியுது.

கடல் வளமே ஆதாரம்

அன்றைய பாண்டிய அரசு கடல் வளத்தைச் சார்ந்தே இயங்கிச்சு. அதிலும் பாண்டிய நாட்டின் அடையாளமாக இருந்த முத்துக்கள், கொற்கை துறைமுகத்தில் முத்துக்குளித்தல் மூலம் கிடைத்தவை. அதோட மீனே பாண்டிய மன்னர்களின் சின்னமாவும் கொடியாவும் இருந்திருக்கு.

அதன் முக்கிய ஏற்றுமதிப் பொருளா முத்து இருந்துச்சு. மதுரையிலிருந்து கிரேக்கம், ரோமுக்கு முத்து ஏற்றுமதி நடந்திருக்கு. ரோம நாணயங்கள் மதுரையில் கிடைச்சதே, இதுக்கு ஆதாரம்.

அதோட வணிகம் செய்றதுக்கு, அரசுத் தூதர்கள், பிரபலப் பயணிகள்னு பலர் மதுரைக்கு வந்து போயிருக்காங்க. கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனேசியா, சீனா நாட்டுப் பயணிகளும் இவர்கள்ல உண்டு.

இன்னைக்கும் மதுரைய ஒரு பெரிய கிராமம்னு சொல்றது உண்டு. அது அப்படி நம்பப்படுறதுக்கு முக்கியக் காரணம், மரபு சார்ந்த அம்சங்களை அது தொலைக்காமல் இருக்கிறதும் இன்னைக்கும் ஒரு வணிக நகரமா அது தொடர்றதும்தான்.
 

யாருக்கு உதவும்?

போட்டித் தேர்வுகளுக்கான வரலாற்றுப் பகுதி, 6-ம் வகுப்பு வரலாற்றுப் பாடம்


தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x