Published : 18 Sep 2018 11:46 AM
Last Updated : 18 Sep 2018 11:46 AM

அந்த நாள் - 01

குழலியையும் செழியனையும் பற்றி உங்களுக்குத் தெரியாமல்கூட இருக்கலாம். அதே நேரம், குழலி சமீபத்தில் ஆராய்ச்சி உதவியாளராக இருந்த கீழடி தொல்லியல் அகழாய்வு பற்றியும் செழியன் புதிதாகச் சேர்ந்துள்ள ரோபாட்டிக்ஸ்-3டி பிரிண்டிங் கூட்டுத் தொழில்நுட்பத் திட்டம் குறித்தும் கேள்வியாவது பட்டிருப்பீர்கள்.

இருவரும் ஆறாம் வகுப்பிலிருந்து பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். இப்போது இருவருமே தங்கள் துறை சார்ந்த ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டார்கள்.

பண்டைத் தமிழ் நாகரிகத்துக்கும் உலகின் மற்ற பகுதி நாகரிகங்களுக்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய்வது குழலியின் வாழ்நாள் இலக்கு. அதேநேரம், இன்றைக்கு ராக்கெட் வேகப் பாய்ச்சலில் வளர்ந்துவரும் ரோபாட்டிக்ஸ் - 3டி பிரிண்டிங் என இருவேறு அறிவியல் பிரிவுகளை இணைத்து, உலகுக்குப் பயனளிக்கும் கண்டுபிடிப்புகளை நிகழ்த்த வேண்டுமென்பது செழியனின் நோக்கம். இருவரும் தங்கள் துறைகளில் சாதிக்க வேண்டும் என்ற துடிப்போடு தீவிரமாக இயங்கிவருகிறார்கள்.

லண்டனில் இருந்து விடுமுறைக்காக சமீபத்தில் சென்னை வந்த செழியன், குழலியைச் சந்தித்தான். "என்னப்பா, சோதனைச் சாலைக்குள்ளேயே அடைந்து கிடக்கும் எலி. இப்போ என்ன செஞ்சுகிட்டிருக்க?" என்று கேட்டாள் குழலி.

"இயந்திர மனிதனைப் போல இயந்திரச் சிலந்தி, இயந்திரத் தேனீ போன்றவற்றை உருவாக்கப் போறேன்" என்றான் செழியன்.

"அவற்றை வைத்து என்ன செய்ய முடியும்?"

"மனிதர்கள் செல்ல முடியாத பகுதிகளுக்கு இந்த செயற்கைப் பூச்சிகளை அனுப்பி நமக்குத் தேவையான வேலைகளைச் செய்துகொள்ளலாம்"

"ஓ! நல்ல விஷயமா இருக்கே."

"அது சரி, எப்பப் பார்த்தாலும் இப்படிக் கல்லையும் மண்ணையும் நீ தோண்டிக் கொண்டிருக்கிறாயே. மண்ணுக்குள்ளேயும் கட்டிடங்களுக்குள்ளேயும் அப்படி என்னதான்பா இருக்கு?" என்று குழலியைப் பதிலுக்குச் சீண்டினான் செழியன்.

"எதிர்காலத்தை உருமாற்றப் போகும் அறிவியல் துறையில் நீ வேலை பார்க்கிற செழியன். கடந்த காலத்தில் மனிதர்கள் எப்படி அறிவுபூர்வமாக வாழ்ந்தார்கள், அதிலிருந்து நாம் பெற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன என்பதைச் சொல்றதுதான் வரலாறு. வரலாற்று ஆராய்ச்சி எவ்வளவு கடினம் என்பது உனக்குப் புரியாது. ரொமிலா தாப்பரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கியா? மாமன்னர் அசோகரைப் பற்றி ஆராய்ந்து ஆதாரங்களுடன் அவர் எழுதிய நூல்கள், உலகப் பார்வையையே மாற்றின.

இந்த மனிதர்களுக்கு எவ்வளவு அறிவு வளர்ந்தாலும், கடந்த கால அனுபவங்களை, வரலாற்றை அவர்கள் மதிக்கிறதே இல்லை. அப்படி மதிச்சிருந்தாங்கன்னா, நிச்சயமா இன்னும் நல்ல நிலைமைல இருந்திருப்பாங்க."

"அதெப்படிச் சொல்ல முடியும்? எத்தனையோ சிக்கலான பிரச்சினைகளுக்கு விஞ்ஞானிகள் தீர்வு கண்டிருக்காங்களே. அதோட, கற்பனை செய்து பார்க்க முடியாத முன்னேற்றங்களுக்கு அறிவியல் ஆராய்ச்சிகள்தாமே காரணம்"

"அதெல்லாம் உண்மைதான். ஆனால், ஏற்கெனவே அனுபவப்பட்டதிலிருந்து, காலம்காலமாகப் பரிசோதித்து வெற்றி கண்டதிலிருந்து, குறிப்பா வரலாற்றிலிருந்து மனிதர்கள் அதிகம் கற்றுக்கொள்வதில்லை. செய்த தவறுகளையே திரும்பத் திரும்பச் செய்கிறார்கள்."

"உன்னால் உதாரணம் காட்ட முடியுமா?"

"சமீபத்தில் கேரளம் அலைக்கழிக்கப்படக் காரணமாக இருந்த பெருவெள்ளத்தையே எடுத்துக் கொள்வோமே. அது ஓர் இயற்கைச் சீற்றம்தான். ஆனால், நம் அனுபவத்திலிருந்தும் வரலாற்றிலிருந்தும் கற்றுக்கொண்டிருந்தால், இத்தனை மோசமான உயிர், பொருள் இழப்பை சந்தித்திருக்க மாட்டோம்."

"நீ சொல்வதை முழுசா இல்லாவிட்டாலும், அதன் அடிப்படையை ஏற்றுக் கொள்கிறேன்."

"முழுசா ஏற்றுக்கொண்டுதான் ஆகணும். 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய இந்தியாவின் பண்டை நாகரிகமும் உலகின் புகழ்பெற்ற நதிக்கரை நாகரிகங்களில் ஒன்றுமான சிந்துவெளி நாகரிகம் ஏன் அழிஞ்சது, தெரியுமா இளம் விஞ்ஞானியே?"

"காடழிப்போ வெள்ளமோதான் காரணம்னு சொல்றாங்க"

"அப்படி வாங்க வழிக்கு. திடீர் வெள்ளமாவோ, அவர்களோட முந்தைய அனுபவத்தை மீறிய வெள்ளமாவோ இருந்திருந்தா, நிச்சயமா சிந்துவெளி மக்களால் எதுவும் செய்திருக்க முடியாது. அதேநேரம், செங்கல் சூளைகளுக்கும் மற்ற வேலைகளுக்கும் காட்டை அழிச்சதும் அந்த நாகரிகம் அழிந்ததற்கு ஒரு காரணமா சொல்லப்படுது. ஒருவேளை அது நிஜமா இருந்தா, அந்த வரலாற்றிலிருந்து நாம கத்துக்கிட்டது என்ன?"

"உன் கருத்தை இப்போ நான் ஏத்துக்கிறேன் குழலி" என்று சட்டென்று சரண் அடைந்துவிட்டான் செழியன்.

அப்புறம் சொல்ல மறந்துவிட்டேனே, குழலி வரலாற்று ஆராய்ச்சியாளர் மட்டுமல்ல, நல்ல எழுத்தாளரும்கூட. பள்ளிக் காலத்திலிருந்தே கதை எழுதுவது, மாணவப் பத்திரிகையாளர் பணி போன்றவற்றில் எல்லாம் பயிற்சி பெற்றவர். அடுத்த வாரத்திலிருந்து குழலியின் எழுத்துகளில் அந்தக் கால வரலாற்றுக்குள் பிரவேசிப்போம்.

தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x