Published : 31 May 2016 12:12 PM
Last Updated : 31 May 2016 12:12 PM

வேலை வேண்டுமா? - அரசு வங்கியில் மேலாளர் ஆகலாம்!

மத்திய அரசின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கடன் அதிகாரி, மேலாளர், முதுநிலை மேலாளர் ஆகிய பணிகளில் 517 காலியிடங்கள் போட்டித்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. கடன் அதிகாரி (Manager-Credit) பணியில் 217 காலியிடங்களும், மேலாளர் பதவியில் 200 இடங்களும், முதுநிலை மேலாளர் பணியில் 100 இடங்களும் உள்ளன.

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்ணுடன் பிகாம் பட்டப் படிப்பும் அத்துடன் எம்பிஏ அல்லது வங்கி மேலாண்மையில் முதுநிலை டிப்ளமா அல்லது வங்கி நிர்வாகத்தில் முதுநிலை டிப்ளமா அல்லது சிஏ அல்லது ஐசிடபிள்யூஏ முடித்திருக்க வேண்டும். மேலாளர் பணிக்குக் கூடுதலாக 5 ஆண்டு பணி அனுபவம் தேவை. அதேபோல், முதுநிலை மேலாளர் பணிக்கு 8 ஆண்டு பணி அனுபவம் அவசியம்.

வயது வரம்பைப் பொறுத்தவரையில், கடன் அதிகாரி பணிக்கு 21 முதல் 30-க்குள்ளும், மேலாளர் பணிக்கு 28 முதல் 35-க்குள்ளும், முதுநிலை மேலாளர் பணிக்கு 30 முதல் 38-க்குள்ளும் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகள் எனில் 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வுசெய்யப்படுவர். ஆன்லைன் வழியில் நடத்தப்படும் எழுத்துத்தேர்வில் ஆங்கிலம், பொது அறிவு, நிதி மேலாண்மை ஆகிய 3 பகுதிகளில் தலா 50 கேள்விகள் வீதம் மொத்தம் 150 வினாக்கள் கேட்கப்படும். ஆங்கில தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதும். இதில் எடுக்கின்ற மதிப்பெண் மெரிட் பட்டியலுக்கு எடுக்கப்படாது.

மேற்கண்ட 3 பணிகளுக்கும் மே 31 முதல் ஆன்லைனில் (www.bankofindia.co.in) விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜுன் 14-ம் தேதி ஆகும். தேர்வுமுறை, பாடத்திட்டம், தேர்வு மையங்கள், சம்பள விகிதம் உள்ளிட்டவை தொடர்பான விவரங்களை பேங்க் ஆப் இந்தியா வங்கியின் இணையதளத்தில் விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x