Published : 15 Nov 2013 12:00 AM
Last Updated : 15 Nov 2013 12:00 AM
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு கற்றல் கையேடு வழங்கும் பணியை மேயர் சைதை துரைசாமி வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
மாநகராட்சி பள்ளிகளான சென்னை பள்ளிகளில் பயிலும் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்காக சிறப்பு கற்றல் கையேடுகளை மாநகராட்சி கல்வித் துறை தயாரித்துள்ளது.
இந்த கையேட்டில் மாதிரி வினா, விடைகள், பொதுத் தேர்வை எப்படி எழுதுவது, அதிக மதிப்பெண்கள் எடுக்க எளிமையான வழிகள் போன்ற வழிகாட்டும் அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இவை தயாரிக்கப்பட்டுள்ளன.
முதல்கட்டமாக பிளஸ் 2 மாணவர்களுக்கு கையேடு வழங்கும் பணியை ரிப்பன் மாளிகையில் மேயர் சைதை துரைசாமி வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ந.பாலகங்கா எம்.பி., துணை மேயர் பெஞ்சமின், மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மொத்தம் 6 ஆயிரத்து 106 பேருக்கு இந்த கையேடு வழங்கப்பட உள்ளது.
இதைத் தொடர்ந்து 10-ம் வகுப்பு மாணவர்கள் 8 ஆயிரத்து 491 பேருக்கு விரைவில் சிறப்பு கையேடுகள் வழங்கப்பட உள்ளது. இந்தத் தகவலை மாநகராட்சி செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT