Published : 12 Jul 2018 09:14 PM
Last Updated : 12 Jul 2018 09:14 PM

பெற்ற தாயை மனைவியுடன் சேர்ந்து கொன்று புதைத்த மகன்: இரண்டு மாதம் கழித்து சிக்கினார்

பெற்ற தாயைக் கொன்று தனது தோட்டத்திலேயே புதைத்து, கிராம மக்களை ஏமாற்றி வந்த மகன் 2 மாதத்திற்குப் பின் சிக்கினார்.

மயிலாடுதுறை அருகே உள்ள வாளவராயன்குப்பம் கிராமத்தில் வசித்தவர் உய்யம்மாள் (72). இவரது மகன் கலியமூர்த்தி (55).  இவருக்கு பூசம் (48) என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர்.

உய்யம்மாள் யாருமில்லாததால் மகன் கலியமூர்த்தி பராமரிப்பில் இருந்துள்ளார். கலியமூர்த்தியின் மனைவி பூசத்துக்கும், உய்யம்மாளுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்.

அடிக்கடி மாமியார் மருமகள் சண்டை வரும். இதில் மனைவி பக்கம் பேசுகிறார் என்று கலியமூர்த்தியிடம் உய்யம்மாள் சண்டை பிடிப்பாராம். இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக உய்யம்மாள் எங்கே போனார் என்ன ஆனார் என்று தெரியவில்லை.

திடீரென ஒருநாள் இரவில் காணாமல் போனார். அக்கம் பக்கத்தவர் கேட்டபோது அம்மா வெளியூருக்கு போயிருக்காங்க என்று கலியமூர்த்தி சொல்லி சமாளித்து வந்தார். வெளியூர் செல்பவர் நம்மிடம் சொல்லாமல் எப்படிச் சென்றுவிட்டார் என ஊரார் சிலர் சந்தேகத்துடன் இருந்துள்ளனர்.

இதுபற்றி அப்பகுதி மக்கள் ’உய்யம்மாள் என்ன ஆனார் என்பது சந்தேகமாக இருக்கிறது, நீங்கள் விசாரித்துச் சொல்லுங்கள்’ என்று ஊர் தலைவர் சுப்பையன் என்பவரிடம் கூறியுள்ளனர். இதையடுத்து ஊர் தலைவர், கலியபெருமாளைச் சந்தித்து அவரது தாயார் எங்கே என்று கேட்டுள்ளார். ’அம்மா வெளியூர் போயிருக்காங்க’ என்று கலியபெருமாள் கூற, ’எந்த ஊர்?’ என்று கேட்டுள்ளார்.

’திடீரென்று ஏன் வெளியூர் போக வேண்டும்’ என்று சுப்பையன் கேட்டுள்ளார். அதற்கு கலியபெருமாள் ஒரு காரணத்தைக் கூற, ‘அங்கு யார் இருக்கிறார்கள்?’ என்று தலைவர் கேட்க, ‘உறவினர் இருக்கிறார்’ என்று கலியமூர்த்தி கூறியுள்ளார். ’அப்படியானால் அவருக்கு போன் போடு நான் பேசணும்’ என்று தலைவர் கூறியுள்ளார்.

இதனால் கலியமூர்த்தி மிரண்டுபோய், ‘அய்யா உண்மையைச் சொல்லி விடுகிறேன் என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று கூறியுள்ளார். ’என்ன நடந்தது சொல்’ என்று கேட்டவுடன் கலியமூர்த்தி சொன்ன கதையைக் கேட்டு ஊர் தலைவர் அதிர்ந்து போனார்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தனது மனைவிக்கும், தாய் உய்யம்மாளுக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது, அப்போது கோபத்தில் கலியமூர்த்தி தனது தாயைப் பிடித்துக் கீழே தள்ளியுள்ளார்.

இதில் கீழே விழுந்த உய்யம்மாள் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். திடீரென தாயார் உயிரிழந்ததைக் கண்டு பயந்துபோன கலியமூர்த்தி மனைவியுடன் சேர்ந்து கொலையை மறைக்கத் திட்டம் தீட்டியுள்ளார். உடனடியாக தனது ஆடு ஒன்றை அடித்துக் கொன்றுள்ளனர். ஆடு செத்துப்போச்சு என்று கூறி வீட்டின் தோட்டத்தில் புதைக்க குழி தோண்டியுள்ளனர்.

ஆட்டைப் புதைக்க குழி தோண்டி அதில் தனது தாயாரையும் சேர்த்துவைத்துப் புதைத்துள்ளார். பின்னர் வழக்கம்போல் தனது பணியைப் பார்க்கத் தொடங்கியுள்ளார். கணவன், மனைவி இருவரும் அழுத்தமாக எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருந்துள்ளனர்.

’அடப்பாவி அம்மாவை கொன்று உன் வீட்டு தோட்டத்திலேயே புதைத்துவிட்டு 2 மாத காலம் சாதாரணமா இருந்திருக்கியே’ என்று அதிர்ச்சியுடன் கூறிய தலைவர் இது குறித்து அவ்வூர் காவல் நிலையத்தில் தகவல் கொடுக்க கலியமூர்த்தியும், அவரது மனைவியும் தற்போது போலீஸ் பிடியில் உள்ளனர்.

கலியமூர்த்தியின் செயலைப் பார்த்து வாளவராயன்குப்பம் கிராமமே அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளது. உய்யம்மாள் உடல் புதைக்கப்பட்ட இடத்தைத் தோண்டி அங்கேயே பிரேதப் பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x