Published : 12 Jul 2018 03:06 PM
Last Updated : 12 Jul 2018 03:06 PM

சென்னையில் கண்கொள்ளாக் காட்சி; ஒரே இடத்தில் திரண்ட அனைத்துக் கட்சியினர்: டாஸ்மாக் கடையை அகற்றப் போராட்டம்

சிந்தாதிரிப்பேட்டையில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் என அத்தனை கட்சிக் கொடிகளையும் ஏந்திய தொண்டர்கள், பொதுமக்கள் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை அகற்ற நடந்த போராட்டம் கடந்த சில ஆண்டுகளில் மிகப்பெரும் மக்கள் எழுச்சிப் போராட்டம் என்றால் மிகையாகாது. அரசுக்கு எதிராக பெண்கள் ஆவேசமாக களத்தில் குதித்து டாஸ்மாக் கடைகளை அடித்து நொறுக்கி தங்கள் ஆவேசத்தை காட்டியதால் பல இடங்களில் டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டன.

பள்ளிகள், கோயில்கள், கிளினிக்குகள் கூட குறைவாக இருக்கும், டாஸ்மாக் கடைகள் இல்லாத இடமே இல்லை எனும் அளவில் தெருதோறும் பெட்டிக்கடைகள் போல் டாஸ்பாக் கடைகளை நிறுவியது அரசு. ஒரு தலைமுறையே மதுவால் சீரழிவதைக் கண்ட பெண்கள் விழித்துக்கொண்டனர்.

தங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றப் போராட்டத்தில் குதித்தனர். மதுவுக்கு எதிராக அரசியல் கட்சிகள் போராட்டத்தில் குதித்தன. பாமக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் மூடப்பட்ட மதுக்கடைகளுக்கு இணையாக மக்கள் வசிக்கும் பகுதிகளில் மதுக்கடைகளை நிறுவ டாஸ்மாக் நிர்வாகம் முயன்றது. இதை பொதுமக்கள் ஆங்காங்கே எதிர்ப்பு தெரிவித்து முறியடித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சாமி நாயக்கன் தெருவில் புதியதாக டாஸ்மாக் கடை திறக்க உள்ளதாக தகவல் வந்ததை அடுத்து அங்குள்ள பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் அனைத்துக் கட்சியினர் அந்தக் கடையின் முன்பு இன்று காலை ஒன்று கூடினர். கடை முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் ஒன்றாக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டாஸ்மாக் கடையை அகற்றவேண்டும் என பொதுமக்களுடன் சேர்ந்து வியாபாரிகள் மற்றும் அனைத்துக் கட்சியினரும் சாமி நாயக்கன் தெருமுனையில் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தற்போது டாஸ்மாக் கடை திறக்கும் இடம் முக்கியமான ஜங்‌ஷன் ஆகும். ஆட்டோ தொழிலை நம்பி ஏராளமான டிங்கர் ஷெட்கள், மெக்கானிக் ஷெட்கள், குடியிருப்புகள் உள்ளன. அருகில் கோயில் உள்ளது. பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள இப்பகுதியில் டாஸ்மாக் கடையைத் திறப்பதன் மூலம் ஆட்டோ தொழிலாளர்கள், அதை நம்பி உள்ள மெக்கானிக்குகள், டிங்கர்கள் மற்ற தொழிலில் ஈடுபடுவோர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

எதிர் எதிர் துருவங்கள் ஒன்றிணைந்து ஒரே இடத்தில் போராடும் கண்கொள்ளாக் காட்சியைப் பொதுமக்கள் விசித்திரமாகப் பார்த்துச் சென்றனர். முடிவில் கடை திறப்பதைக் கைவிடுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x