Published : 08 Jul 2019 08:54 PM
Last Updated : 08 Jul 2019 08:54 PM

பெண்கள் முன்னேற்றத்துக்கான கருத்தைச் சொல்லும் படமல்ல ‘ஆடை’: இயக்குநர் ரத்னகுமார்

கண்டிப்பாகப் பெண்கள் முன்னேற்றத்துக்கான கருத்தைச் சொல்லும் படமல்ல ‘ஆடை’ எனத் தெரிவித்துள்ளார் இயக்குநர் ரத்னகுமார்.

ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால், விவேக் பிரசன்னா, ஸ்ரீரஞ்சனி, ரம்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆடை’. தணிக்கையில் ‘ஏ’ சான்றிதழ் பெற்றுள்ள இந்தப் படம், ஜுலை 19-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில், படக்குழுவினர் சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

அதில் பேசிய ரத்னகுமார், “ ‘பர்த்டே டிரஸ்’ என்று சும்மா ஒரு பெயர் வைத்து ஆரம்பித்து, பின்னர் தமிழில்தான் பெயர் வைக்கவேண்டும் என்று ‘ஆடை’ என மாற்றினேன்.

‘மேயாத மான்’ படத்தில் நிறைய பிரச்சினைகள் இருந்தன. அந்தப் படத்தை 5 தடவை பார்த்தேன் என்று சொன்னவர்களும் இருக்கிறார்கள். 5 நிமிடங்கள் கூட பார்க்க முடியவில்லை என்று சொன்னவர்களும் இருக்கிறார்கள். அந்த நிலைமை இந்தப் படத்துக்கு வராது என்று நினைக்கிறேன்.

அனைத்துத் தரப்பினருக்கும் பிடித்த படமாக இது இருக்கும். இது ‘ஏ’ சான்றிதழ் பெற்ற படம். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். குடும்பத்துடன் பார்க்கக் கூடாது என்று அர்த்தம் இல்லை.

அமலா பால் இந்த ஸ்கிரிப்ட்டைப் படித்து ஆர்வமாகி, உடனே நேரில் வந்து கதை சொல்லச் சொன்னார். 2 மணி நேரம் கதை சொன்னேன். ஷூட்டிங் முடிந்தபிறகு ஒருநாள் அமலா பால், ‘நீங்கள் கதை சொன்னபோது ஆள் ஒரு மாதிரி இருக்கிறாரே... உண்மையில் இது இவர் கதைதானா என்று விசாரிக்க வேண்டும்’ என்று தன்னுடைய மேனேஜரிடம் கூறியதாக என்னிடம் கூறிச் சிரித்தார்.

நிர்வாணமாக நடிப்பதுதான் துணிச்சலா என்பது போன்ற சில கமெண்டுகளைப் பார்த்தேன். நான் அதை அப்படிப் பார்க்கவில்லை. அமலா பால் இதற்கு முன்பு 10 வயது சிறுமிக்கு அம்மாவாக நடித்திருக்கிறார். 2 குழந்தைகளுக்கு அம்மாவாகவும் ஒரு படத்தில் நடித்திருக்கிறார். கதை பிடித்திருந்தால் அதற்காக மொட்டை அடிக்கக்கூடத் தயாராக இருப்பார். அவருக்குப் பிடித்திருந்தால் உயிரையும் கொடுப்பார். பிடிக்கவில்லையென்றால் உயிரை எடுப்பார்.

இந்த ஸ்கிரிப்ட் அவருக்குப் பிடித்துவிட்டது. சில போர்ஷன் ஷூட் செய்யும்போது அழுதுகொண்டே வந்தேன் என்றெல்லாம் கூறினார். ஒரு பெரிய நடிகை என்னிடம், ‘இந்தப் படத்தின் டீஸரில் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதையெல்லாம் தாண்டி, இப்படி நடிக்க ஒரு நடிகை இயக்குநரை முதலில் நம்பவேண்டும். அதற்கு உங்களுக்கு வாழ்த்துகள்’ என்று கூறினார்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை என் குடும்ப வாட்ஸ்அப் குரூப்பில் போட்டேன். 10 நாள் கழித்துதான் ரிப்ளை வந்தது. ‘ஆடை’, கண்டிப்பாகப் பெண்கள் முன்னேற்றத்துக்கான கருத்தைச் சொல்லும் படமல்ல” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x