Last Updated : 01 Jun, 2019 01:08 PM

 

Published : 01 Jun 2019 01:08 PM
Last Updated : 01 Jun 2019 01:08 PM

முடிவுக்கு வந்தது எஸ்.பி.பி. உடனான பிரச்சினை: மனம் திறந்த இளையராஜா

எஸ்.பி.பி. உடனான பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டதாக, இளையராஜா அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ராயல்டி பிரச்சினை தொடர்பாக இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும் எஸ்.பி.பி.க்கும் இடையே பிரச்சினை வெடித்தது. இது, இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதற்குப் பிறகு நடந்த இளையராஜாவின் எந்தவொரு இசை நிகழ்ச்சியிலும் எஸ்.பி.பி. கலந்து கொள்ளவில்லை. ஆனால், தான் கலந்துகொண்ட நிகழ்ச்சிகள் அனைத்திலுமே இளையராஜாவைப் பற்றி உயர்வாகப் பேசிவந்தார் எஸ்.பி.பி.

நாளை (ஜூன் 2), இசையமைப்பாளர்கள் யூனியன் சார்பில் இளையராஜாவின் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில், எஸ்.பி.பி, யேசுதாஸ், பாம்பே ஜெயஸ்ரீ, மனோ உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர். ராயல்டி பிரச்சினைக்குப் பிறகு இளையராஜா - எஸ்.பி.பி. இருவரும் ஒரே மேடையில் தோன்றும் நிகழ்வாக இது அமையவுள்ளது. ஆகையால், இசை ரசிகர்கள் பலரும் இந்த நிகழ்ச்சியை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

இந்நிகழ்ச்சிக்காக 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்குப் பேட்டியளித்துள்ளார் இளையராஜா. அதில், எஸ்.பி.பி. உடனான பிரச்சினை முடிவுக்கு வந்ததால் இசை ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் என்ற கேள்விக்கு, “எனக்கும் எஸ்.பி.பி.க்குமான பிரச்சினை வேறு. எங்களுக்குள்ளான தவறான புரிதல், ராயல்டிக்கான தொகை தரப்படாததால் ஏற்பட்டது.

இப்போது அவர் ராயல்டி தருகிறார். பிரச்சினை இல்லை. எனது பாடல்களுக்கான உரிமை என்னிடம் உள்ளது என நான் நினைக்கிறேன். இயக்குநருக்கோ, தயாரிப்பாளருக்கோ அந்த உரிமை இல்லை. ஏனென்றால். நான் தான் பாடலை உருவாக்குகிறேன். அவர்களல்ல” என்று தெரிவித்துள்ளார் இளையராஜா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x