Last Updated : 30 May, 2019 11:33 AM

 

Published : 30 May 2019 11:33 AM
Last Updated : 30 May 2019 11:33 AM

வடிவேலு சாரால் மட்டுமே இந்த அளவுக்கு ட்ரெண்ட்: #Pray_for_Neasamani ஹேஷ்டேக்கை உருவாக்கியவர் நெகிழ்ச்சி

வடிவேலு சாரால் மட்டுமே இந்த அளவுக்கு ட்ரெண்டாகியுள்ளது என்று #Pray_for_Neasamani ஹேஷ்டேக்கை உருவாக்கிய விக்னேஷ் பிரபாகர் நெகிழ்ந்துள்ளார்.

நேற்றிரவு (மே 29) #Pray_for_Neasamani, #PrayforNesamani என்ற ஹேஷ்டேக்குகள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட்டாகி வருகின்றன. ஏன் இந்த ஹேஷ்டேக்? என்று பலரும் ஆராயத் தொடங்க, அதன் பின்னணி என்ன என்பது தெரியவந்துள்ளது.

'Civil Engineering Learners' என்ற ஃபேஸ்புக் பக்கம், சுத்தியல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, 'இதற்கு உங்கள் நாட்டில் என்ன பெயர்?' எனப் பதிவிட்டது. மே 27-ம் தேதி இப்பதிவு வெளியானதும், பலரும் கருத்து தெரிவிக்கத் தொடங்கினர். அதில், விக்னேஷ் பிரபாகர் என்பவர், "இதற்குப் பெயர் சுத்தியல். எதன்மீது இதைக்கொண்டு அடித்தாலும் ‘டங் டங்’ என்று சத்தம் வரும். ஜமீன் வீட்டில் பெயின்டிங் ஒப்பந்தக்காரர் நேசமணி தலைமீது, அவரது சொந்தக்காரர் சுத்தியலைப் போட்டுவிட்டார். இதனால் நேசமணி தலை உடைந்துவிட்டது. பாவம்" என்று கருத்திட்டார்.

உடனே, "அவர் எப்படியிருக்கிறார்?" என மற்றொருவர் கேட்க, "அவர் இப்போது நலம். அவருடைய அணியினர் உடனடியாக அவர்மீது தண்ணீரை ஊற்றி முதலுதவி கொடுத்துவிட்டனர்" என்று பதிலளித்தார். இதனைத் தொடர்ந்து அவருக்காகப் பிரார்த்திப்போம் என்று ஃபேஸ்புக் பக்கத்தின் கருத்துப் பக்கத்தில் உருவாக்கப்பட்டதுதான் #Pray_for_Neasamani என்ற ஹேஷ்டேக்.

துபாயில் இருக்கும் விக்னேஷ் பிரபாகரின் பதிலால் மட்டுமே, இந்த ஹேஷ்டேக் உருவாகி ட்ரெண்டாகத் தொடங்கியது. தனது கருத்தால் உருவான இந்த ஹேஷ்டேக் இப்போது வைரலாகி வருவதால், அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. தொடரும் வாழ்த்தால் திக்குமுக்காடிப்போன விக்னேஷ் பிரபாகர், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ பதிவில் விக்னேஷ் பிரபாகர், “அனைவருக்கும் வணக்கம். துபாயிலிருந்து விக்னேஷ் பிரபாகர் பேசுறேன். ஒரே ஒரு கமென்ட்டால் இந்தியளவில் ட்ரெண்டான 'நேசமணி' விக்னேஷ் பிரபாகர். நான் என் கமென்ட்டால் இந்த மாதிரி எல்லாம் ட்ரெண்டாகும் என நினைத்துப் பார்க்கவில்லை.

விளையாட்டாகப் போட்ட கமென்ட் அது. அதைப் போடும்போது 10, 15 பேர் லைக் பண்ணுவார்கள் என நினைத்தேன். இந்தளவுக்கு ட்ரெண்டாகும் என நினைத்துப் பார்க்கவில்லை. இந்த கமென்ட்டை நண்பர்கள் குரூப்பில் ஷேர் செய்த தீபனுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். நேசமணி என்றால் யாரென்றே தெரியாது என்று கமென்ட் செய்துள்ளவர் என் பள்ளி நண்பர்தான்.

அவனுக்கு, நேசமணி யார் என்று தெரியும். ஆனால், கமென்ட்டில் தெரியாத மாதிரி கேட்டான். நானும் அவனுக்கு விளக்கமளித்தேன். மற்றபடி திட்டமிட்டு எதையும் செய்யவில்லை. ப்ளான் பண்ணியிருந்தால் இந்தளவுக்கு ட்ரெண்டாகியிருக்குமா என்று சொல்ல முடியாது. எதார்த்தமாகப் பண்ணியது இப்படி நடந்துவிட்டது. சத்தியமாக இந்த மாதிரியாகும் என நினைத்துப் பார்க்கவில்லை.

என் ஃபேஸ்புக்கில், என்னை டேக் செய்து நிறைய போஸ்ட் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். என் மொபைலே ஹேங்காகிவிட்டது. ரொம்ப நன்றி. டிவியில் எல்லாம் செய்தியாகப் போட்டார்கள் எனக் கேள்விப்பட்டேன். இங்கு டிவி இல்லை. எனக்கு மொபைல், ஃபேஸ்புக்தான் பொழுதுபோக்கு. ஊரிலிருந்து ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பினர்.

வாழ்க்கையில் திருப்பம் ஏற்பட்டு இருப்பதாகக் கருதுகிறேன். வடிவேலு சாருக்கு நன்றி. நம் வாழ்க்கையில் எந்தவொரு நிலைமைக்கும், வடிவேலு சாருடைய காட்சி ஒன்று இருக்கும். வெளிநாட்டு ஃபேஸ்புக் பக்கம், அதில் நம் ஆட்கள் நிறைய பேர் இருக்க மாட்டார்கள் என நினைத்தேன். அதில் பலரும் ‘டங் டங்’ என்ற சத்தம் கொண்ட கமென்ட்டைத்தான் விரும்புவார்கள் என நினைத்தேன். நேசமணியை நினைக்கவில்லை. வடிவேலு சாரால் மட்டுமே இந்த அளவுக்கு ட்ரெண்டாகியுள்ளது.

எதற்கு இப்படியொரு ட்ரெண்டிங், நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் உள்ளன என்று சொல்வார்கள். போராட வேண்டிய விஷயத்தை விட்டுவிட்டு, இதுக்கு ஏன்? என்று சிலர் மனவருத்தப்படலாம். உங்களுக்காக மறுபடியும் சொல்றேன். இந்தளவுக்கு ட்ரெண்டாகும் என நினைக்கவில்லை. இணையத்தின் வலிமையை ஒருநாளில் தெரிந்து கொண்டேன். ஒரு கமென்ட்டால் தமிழ்நாட்டு இளைஞர்களின் வலிமையைக் காண்பித்துவிட்டீர்கள். நன்றி!” என்று தெரிவித்துள்ளார் விக்னேஷ் பிரபாகர்.

விக்னேஷ் பிரபாகர் வெளியிட்ட வீடியோ:

விக்னேஷ் 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x