Last Updated : 25 May, 2019 07:43 PM

 

Published : 25 May 2019 07:43 PM
Last Updated : 25 May 2019 07:43 PM

சிம்புதேவனின் கசட தபற ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கசட தபற' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படம் தாமதமானதால், இயக்குநர் வெங்கட்பிரபுவின் பிளாக் டிக்கெட் கம்பெனி மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து வரும் படத்தை இயக்கி வருகிறார் சிம்புதேவன்.

புதுமையாக ஒரே கதையில் 6 பகுதிகள் கொண்டதாக உருவாக்கி இயக்கியுள்ளார் சிம்புதேவன். 'கசட தபற' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் இப்படத்தில் யாரெல்லாம் நடித்துள்ளார்கள் என்பது உறுதியாகியுள்ளது.

இயக்குநர் வெங்கட்பிரபு, பிரேம்ஜி, சாந்தனு, சந்தீப் கிஷன், ஹரிஷ் கல்யாண், ரெஜினா, விஜயலட்சுமி மற்றும் ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், கதையின் 6 பகுதிகளுக்கும் தனித்தனி படக்குழுவினரோடு பணிபுரிந்துள்ளார். அதாவது, ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனி ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் மற்றும் எடிட்டர் எனப் பணிபுரிந்துள்ளார் சிம்புதேவன்.

ஒரே படத்தில் யுவன், சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், பிரேம்ஜி, ஷான் ரோல்டன் மற்றும் சாம் சி.எஸ் என 6 இசையமைப்பாளர்கள், பாலசுப்பிரமணியம், விஜய் மில்டன், எம்.எஸ்.பிரபு, சக்தி சரவணன், எஸ்.ஆர்.கதிர் மற்றும் ஆர்.டி.ராஜசேகர் என 6 ஒளிப்பதிவாளர்கள், ராஜா முஹமது, ஆண்டனி, காசி விஸ்வநாதன், விவேக் ஹர்சன், ரூபன் மற்றும் ப்ரவீன் கே.எல் என 6 எடிட்டர்கள் பணிபுரிந்துள்ளனர்.

ஒரே படத்தில் மிகப்பெரிய தொழில்நுட்ப கலைஞர்கள் குழு பணிபுரிந்திருப்பது புதிய விஷயமாகும். இறுதிகட்டப் பணிகள் முடிந்து ஜூனில் படத்தை வெளியிடலாம் என்ற ஆலோசனையில் இருக்கிறது படக்குழு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x