Published : 16 May 2019 01:51 PM
Last Updated : 16 May 2019 01:51 PM

சிம்புவின் ‘மாநாடு’ ஷூட்டிங் தள்ளிவைப்பு

சிம்பு நடிக்கவுள்ள ‘மாநாடு’ படத்தின் ஷூட்டிங், அடுத்த மாதத்துக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. சுந்தர்.சி இயக்கிய இந்தப் படத்தில், கேத்ரின் தெரேசா மற்றும் மேகா ஆகாஷ் என இருவரும் ஹீரோயின்களாக நடித்தனர். கடந்த பிப்ரவரி மாதம் இந்தப் படம் ரிலீஸானது.

இதைத் தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ படத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ப்ரவீன் கே.எல். எடிட்டராகப் பணிபுரியவுள்ளார்.

‘மாநாடு’ படத்துக்காக வெளிநாட்டில் தங்கி தன்னுடைய உடல் எடையைக் குறைத்துள்ளார் சிம்பு. மேலும், தற்காப்புக் கலைகளையும் கற்றுள்ளார். இதில், சிம்பு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கிறார்.

இந்தப் படத்தின் ஷூட்டிங், இந்த மாதம் (மே) தொடங்கும் என கூறப்பட்டது. ஆனால், படப்பிடிப்பு நடைபெறும் இடங்கள் இன்னும் இறுதியாகவில்லை என்பதால், அடுத்த மாதம் (ஜூன்) 21-ம் தேதி தொடங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, ‘முஃப்தி’ என்ற கன்னடப் படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார் சிம்பு. இவருடன் சேர்ந்து கெளதம் கார்த்திக்கும் இந்தப் படத்தில் நடிக்கிறார். கன்னடத்தில் ‘முஃப்தி’ படத்தை இயக்கிய நரதனே தமிழிலும் இயக்க, ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது.

இதற்கிடையில், ஹன்சிகா நடிக்கும் ‘மஹா’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் சிம்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x