Published : 21 Apr 2019 09:19 AM
Last Updated : 21 Apr 2019 09:19 AM

ராதிகா வெளியேறியது ஏன்?- சடசடக்கும் சந்திரகுமாரி விவகாரம்!

உ.சந்தானலெட்சுமி

ராதிகா என்ற அசாத்திய ஆளுமை, பெரிய திரையை மாத்திரமல்ல... சின்னத்திரையையும் தனக்குள்ளே ஈர்த்து வைத்திருக்கிறது. முந்தானையை இழுத்து மூக்கைச் சிந்தும் பெண்களையே அதிகம் காட்டும் சீரியல்கள் வந்துகொண்டிருந்த காலகட்டத்தில், நிமிர்ந்த நன்னடையுடன் எல்லா நிர்வாகத்தில் பெண்களாலும் சாதிக்க முடியும் என்பதைத் தனது  ‘சித்தி’ சீரியல் மூலம் நிரூபித்துக் காட்டியவர் நடிகவேளின் மகள்.

சித்தியில் சாரதாவாக சீரியல் ரசிகர்களைப் புதிய கோணத்தில் ஈர்த்தவர், கிட்டத்தட்ட  இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அண்ணாமலையாய், அரசியாய், வாணி ராணியாய் தொடர்ந்து சின்னத் திரையில் ஜொலித்தார். அடுத்த அவதாரமான தனது ‘சந்திரகுமாரி’யில்  சரித்திர நாயகியாக அரிதாரம் பூசிய ராதிகா, யாரும் எதிர்பாராத வகையில் அந்த சீரியல் நாயகியாக நடிப்பதிலிருந்து விலகி இருக்கிறார்.

தொலைக்காட்சியில் ‘ப்ரைம் டைம்’ என்பது இரவு ஒன்பது மணியிலிருந்து பத்து மணி. இதில் ஒன்பதரை மணி என்பது சன் டிவியில் ராதிகா சீரியலுக்கான நேரம் என்பது கடந்த பல வருடங்களாக சின்னத்திரை ரசிகர்களுக்குள் பதிந்து கிடக்கும் விஷயம். முன்பெல்லாம் இந்த நேரத்தில் வீட்டுப் பெண்களை டிவியை விட்டு நகர்த்துவது அவ்வளவு எளிதான காரியமில்லை.

இப்படித் தனது அசாத்திய உழைப்பால் சீரியல் ரசிகர்களைக் கட்டிப்போட்டு வைத்திருக்கும் ராதிகா, தனது அடுத்த சீரியலாக சந்திரகுமாரியைப் பிரகடனம் செய்தபோது அது சினிமா அளவுக்குப் பேசப்பட்டது. இது சின்னத்திரை சரித்திரத்தில் ராதிகாவுக்கு இன்னொரு மைல் கல்லாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அத்தனை எதிர்பார்ப்புகளும் இப்போது பொய்த்துவிட்டன.

ராதிகாவின் சந்திரகுமாரி கேரக்டர் சின்னத்திரை ரசிகர்களின் கண்முன்னே பாகுபலி ராஜமாதா ரம்யாகிருஷ்ணனை ஞாபகப்படுத்தியது. கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த இந்த சீரியலின் முதல் மாற்றமாக நேரம் மாற்றப்பட்டது. ஆம்! முதல் முறையாக சின்னத்திரை வரலாற்றில், ராதிகாவின் சீரியல் மாலை ஆறரை மணிக்கு மாற்றப்பட்டது. அந்த அதிர்விலிருந்து அவரது ரசிகர்கள் மீள்வதற்குள், தொடரிலிருந்து தான் விலகுவதாகவும், தனக்கு பதிலாக நடிகை விஜி சந்திரசேகர் நடிப்பார் எனவும் ராதிகாவே தன் ட்விட்டர் பக்கத்தில் அடுத்த அதிர்ச்சியைக் கொட்டினார்.

பெரும்பாலும், சீரியல்களில் ‘இவருக்கு பதில் இவர்’ என்ற ஆள் மாற்றம் கான்செஃப்ட் இயல்பானதுதான். ஆனால், ராதிகாவுக்குப் பதில் வேறொருவர் என்பது அவரது இருபது ஆண்டுகால சீரியல் பயணத்தில் இதுவே முதல்முறை. சன் டிவியில் ஒளிபரப்பான ‘அழகி’ சீரியல் மூலம் தனக்கென ரசிக பட்டாளத்தைத் தக்கவைத்துக்கொண்டவர் நடிகை விஜி சந்திரசேகர். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சந்திரகுமாரியில் ராதிகாவின் இடத்தில் நடிக்கிறார்.

ஏன் இந்த மாற்றம்? விஜி சந்திரசேகரிடமே கேட்டோம். “இந்த மாற்றத்தை வியப்புன்னு சொல்றதைவிட பெரிய பொறுப்புன்னுதான் சொல்லணும். ஏன்னா, ராதிகா அக்காவோட கேரக்டரை நான் பண்ணப்போறேங்கிறது பெரிய சேலஞ்ச். பொதுவா, சீரியல் இடையில் ஆர்ட்டிஸ்டை மாத்துறதுல எனக்கு எப்பவுமே உடன்பாடு இருந்ததில்லை. அதனாலதான், இடையில் எனக்கு எத்தனையோ ரோல் வந்தப்பகூட நான் அதை மறுத்திட்டேன்.

ஆரம்பத்திலிருந்தே ஒரு கேரக்டரை நடித்தால்தான் அது உணர்வுபூர்வமா இருக்கும்னு நினைக்கிறவ நான். பட், சந்திரகுமாரி விஷயத்தில் என்னால அப்படி யோசிக்க முடியலை.  ‘இந்த கேரக்டரை நீ பண்ணினா நல்லா இருக்கும்’னு ராதிகா அக்காவே என்கிட்ட கேட்டப்ப என்னால தட்டவும் முடியலை.

எந்தவொரு வேலையை எடுத்தாலும் ரொம்ப ஹார்டு வொர்க் பண்றவங்க அவங்க. இவ்வளவு நாள் டெலிவிஷன்ல சாதிச்சிருக்காங்க. அவங்களோட முடிவுகளில் எனக்கு எப்பவுமே நம்பிக்கையும் மரியாதையும் இருக்கும். அவங்க நினைச்சிருந்தா, ஏதோவொரு கிளைமாக்ஸ் போட்டு சீரியலை முடிச்சிருக்கலாம்.

ஆனா, மத்த வொர்க்கர்ஸ் பாதிக்கப்படக்கூடாதுனு சீரியலை கண்டினியூ பண்றாங்க. ராதிகா அக்காவுக்கு இப்போதைக்கு ரெஸ்ட் வேணும். அதனால பிரேக் எடுத்திருக்காங்க. இந்த சீரியல்ல அவங்களோட ரோலை ரீப்ளேஸ் பண்றதுல எனக்கு ரொம்பவே பயம்தான். ஆனாலும் வியூவர்ஸ் ஏத்துப்பாங்கன்னு நம்பிக்கை இருந்தது. ரீசன்டாகூட சிலோன்ல இருந்து ஒரு சிலர் போன் பண்ணி பாராட்டினாங்க’’ என்று சொன்னார்.

ராதிகாவின் சீரியல்கள் தொடர்ந்து வெற்றிமுகம் காண்கிறது என்றால், அவருக்கான ரசிகர் பட்டாளத்தில் முதன்மையாக இருக்கும் மகளிர் கூட்டம்தான் அதற்குக் காரணம். அவர்கள் எல்லாம் அத்தனை சீக்கிரம் இந்த ஆள் மாற்றத்தை ஏற்றுக்கொண்டு விட்டார்களா?

சீரியல் ரசிகைகள் சிலரிடம் பேசினோம். “முதலில் எங்களால நேரத்தை மாத்தினதையே ஏத்துக்க முடியல. என்னதான் வேலையிருந்தாலும் கரெக்டா ஒன்பதரை மணிக்கு டிவி முன்னாடி டாண்னு ஆஜராகிவிடுவோம். திடீர்னு, சீரியலை ஆறரை மணிக்கு மாத்தினவங்க, இப்ப ஆளையே மாத்திட்டாங்க. இத்தனை வருஷமா, வாணின்னா அது ராதிகாதான்னு மனசுல பதிஞ்சது. அப்படித்தான் சந்திரகுமாரியிலயும் இருந்தது.

இருந்தாலும், இப்ப நடிக்கிற விஜி சந்திரசேகரையும் எங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். அதனால தொடர்ந்து பாக்குறோம். ராதிகா மேடம் சீக்கிரமே சீரியலுக்குத் திரும்புவாங்கன்னு எதிர்பார்க்கிறோம்” என்று சொல்லிவைத்தாற்போல அனைவரும் ஒரே கருத்தையே பதிவுசெய்தார்கள்.

இதனிடையே, டிஆர்பி ரேட்டிங் குறைந்ததால்தான் ராதிகா, சந்திரகுமாரியிலிருந்து வெளியேறியதாகவும் வேறு சில தமிழ் சேனல்கள் ராதிகாவை தங்கள் சேனலுக்குள் கொண்டுவர முயல்வதாகவும் சின்னத்திரை வட்டாரத்தில் தகவல்கள் தடதடக்கின்றன. ஆனால் இதை மறுக்கும் ராதிகாவின் ராடான் நிறுவனத்துடன் தொடபுடையவர்கள், “மேடத்துக்கு சற்று ஓய்வு தேவைப்படுகிறது. அதற்காகவே இந்த கேப். இரண்டு மாதங்கள் கழித்து மீண்டும் அவர் நிச்சயம் புதிதாக இன்னொரு சீரியல் மூலமாக சின்னத்திரை ரசிகர்களை மகிழ்விக்க வருவார்” என்கிறார்கள்.

ராதிகாவின் வருகைக்காக சின்னத்திரை ரசிகர்கள் வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கிறார்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x