Last Updated : 07 Apr, 2019 12:12 PM

 

Published : 07 Apr 2019 12:12 PM
Last Updated : 07 Apr 2019 12:12 PM

ஏப்.8 முதல் சூர்யா - சுதா கொங்காரா படப்பிடிப்பு தொடக்கம்: படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவிப்பு

ஏப்.8 முதல் சூர்யா - சுதா கொங்காரா படப்பிடிப்பு சென்னையில் தொடங்கவுள்ளது. இப்படத்தில் பணிபுரியவுள்ளவர்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

செல்வராகவன் இயக்கத்தில் 'என்.ஜி.கே', கே.வி.ஆனந்த் இயக்கத்தில் 'காப்பான்' ஆகிய படங்களை முடித்துள்ளார். சூர்யா. இவ்விரண்டு படங்களின் இறுதிக்கட்டப் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் முதலாவதாக மே 31-ம் தேதி 'என்.ஜி.கே' வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சுதா கொங்காரா படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் சூர்யா. இதன் படப்பிடிப்புக்காக ஆயத்தமாகி வந்தார். மேலும் சூர்யா, ராஜசேகரன், சுதா கொங்காரா ஆகியோர் அஜ்மீர் தர்காவுக்குச் சென்று புதிய படத்துக்காக வழிபட்டனர்.

இன்று (ஏப்ரல் 7) காலை சூர்யா - சுதா கொங்காரா படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து படக்குழுவினரும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர். நாயகியாக அபர்ணா பாலமுரளி, இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவாளராக நிக்கேத் பொம்மிரெட்டி, கலை இயக்குநராக ஜாக்கி, படத்தொகுப்பாளராக சதீஷ் சூர்யா, ஆடை வடிவமைப்பாளராக பூர்ணிமா ராமசாமி ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

இதன் தொடர் படப்பிடிப்பு நாளை (ஏப்ரல் 8) சென்னையில் தொடங்கும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்துக்கான பாடல்கள் அனைத்தையும் ஜி.வி.பிரகாஷ் முடித்துக் கொடுத்துவிட்டார்.

இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கியவர் ஜி.ஆர்.கோபிநாத். அவருடைய வாழ்க்கையை மையப்படுத்தியே இப்படத்தை உருவாக்கவுள்ளார் சுதா கொங்காரா.

ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்திய புத்தகத்தின் உரிமை குனித் மோங்காவிடம் உள்ளது. அதனால் தான் அவர் இப்படத்தில் தயாரிப்பாளராக இணைந்துள்ளார். குனித் மோங்கா தயாரிப்பில் உருவான 'Period: End of Sentence' ஆவணப் படம் ஆஸ்கர் விருதை வென்றது குறிப்பிடத்தக்கது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x