Last Updated : 26 Mar, 2019 02:56 PM

 

Published : 26 Mar 2019 02:56 PM
Last Updated : 26 Mar 2019 02:56 PM

அக்னி தேவி பிரச்சினை: பாபி சிம்ஹா ஒத்துழைக்க மறுப்பு - நடவடிக்கை எடுக்க தயாரிப்பாளர்கள் சங்கம் ஆலோசனை

'அக்னி தேவி' பிரச்சினை தொடர்பாக பாபி சிம்ஹா ஒத்துழைக்க மறுப்பு தெரிவித்துவிட்டதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க தயாரிப்பாளர்கள் சங்கம் ஆலோசனை நடத்தவுள்ளது.

ஜே.பி.ஆர் மற்றும் ஷாம் சூர்யா இருவரும் இயக்கி, பாபி சிம்ஹா, மதுபாலா, ரம்யா நம்பீசன், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அக்னி தேவி'. இப்படத்தின் வெளியீட்டுக்கு முன்பாக, "இதில் நான் ஏமாற்றப்பட்டுள்ளேன். நான் டப்பிங் பண்ணவில்லை" என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் பாபி சிம்ஹா. மேலும், படக்குழுவினர் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார்.

பட வெளியீட்டுக்குப் பிறகு, தயாரிப்பாளர் தரப்பிலிருந்து எப்படியெல்லாம் பாபி சிம்ஹா தங்களை டார்ச்சர் செய்தார் என்றும் குற்றம்சாட்டி வருகிறார்கள். இப்பிரச்சினை தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தில் நேற்று (மார்ச் 25) மாலை அவசரக் கூட்டம் நடைபெற்றது.

இதில், பாபி சிம்ஹா மற்றும் 'அக்னி தேவி' படக்குழுவினர் கலந்து கொண்டனர். இரண்டு தரப்புக்குமே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விசாரித்தபோது, "படத்தின் மீது பாபி சிம்ஹா போட்டுள்ள மொத்த வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். மேலும், படத்தில் ஏற்பட்டுள்ள நஷ்டத்துக்கு பாபி சிம்ஹா ஏதேனும் ஒரு வகையில் நஷ்டஈடு வழங்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்கள். இதில் எதுக்குமே ஒத்துழைக்க இயலாது என்று கூறிவிட்டு பாபி சிம்ஹா வெளியேறியிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் பேசிய விஷயங்கள் குறித்து தயாரிப்பாளர் ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:

பாபி சிம்ஹாவுக்கு, அவரை டப்பிங் பேச வைக்கவில்லை என்பதுதான் பிரச்சினை. ஆனால், தயாரிப்பாளருக்கோ 10 கோடி வரை நஷ்டம். இயக்குநரே கஷ்டப்பட்டு படத்தைத் தயாரித்திருக்கிறார். பாபி சிம்ஹாவுடன் ஏற்பட்ட பிரச்சினை, வட்டி கட்ட முடியவில்லை போன்ற சிக்கல்களால் படத்தை வெளியிட்டுவிட்டார். எங்களிடம், நடிகர் சங்கம் ஆகியோரிடம் வந்து தயாரிப்பாளர் கேட்டார். ஆனால், யார் என்ன சொன்னாலும் பாபி சிம்ஹா அவருடைய விஷயத்தில் இருந்து  பின்வாங்கவே இல்லை.

ஒரு இயக்குநரை தலைமறைவாக வைக்கும் அளவுக்கு அவர் என்ன தப்பு பண்ணிவிட்டார்? எஃப். ஐ.ஆர் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?. சினிமா ஒன்றும் க்ரைம் அல்ல. எதுவாக இருந்தாலும் அழைத்துப் பேசியிருக்க வேண்டும்.  இப்படத்தால் வந்த நஷ்டத்துக்கு ஏதாவது பண்ண வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். அதையும் முடியாது என்று சொல்லியிருக்கிறார்.

எதுக்குமே ஒத்துழைக்கவில்லை என்றால், அவரை வைத்துப் படம் தயாரிக்க அனைவருமே யோசிப்பார்கள். அடுத்த வாரத்தில் ஒரு மீட்டிங் நடைபெறவுள்ளது. அதில் அனைத்து தயாரிப்பாளர்களையும் வரவைத்து, அவர் மீது பெரிய நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

இவ்வாறு தயாரிப்பாளர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x