Published : 25 Mar 2019 05:36 PM
Last Updated : 25 Mar 2019 05:36 PM
நயன்தாரா குறித்து சர்ச்சையாகப் பேசிய ராதாரவியைக் கண்டிக்க வேண்டியவர்கள் கண்டிப்பார்கள் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
‘கொலையுதிர் காலம்’ பத்திரிகையாளர் சந்திப்பில், நயன்தாரா குறித்து ராதாரவி பேசிய பேச்சு மிகவும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ்த் திரையுலகினர் பலரும் தங்களுடைய கடும் கண்டனங்களைப் பதிவுசெய்து வருகின்றனர்.
ராதாரவியின் பேச்சு பெரும் சர்ச்சையானதைத் தொடர்ந்து, திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். மேலும், திமுக தலைவர் ஸ்டாலினும் ராதாரவியின் பேச்சுக்குத் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்த நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசனிடம், நயன்தாரா - ராதாரவி விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
“நயன்தாரா எங்கள் கலையுலகத்தைச் சேர்ந்தவர். அவரை மரியாதையோடு நடத்த வேண்டிய முதற்கடமை எங்களுக்கு இருக்கிறது. ஒரு சாதாரண ஆண் மகனுக்கே அந்தக் கடமை இருக்கும் நிலையில், இவர் ஒரு கலைஞராக இருந்துகொண்டு இப்படிப் பேசியது வருத்தத்துக்கு உரியது. கண்டிக்க வேண்டியவர்கள் கண்டிப்பார்கள் என நான் நினைக்கிறேன்” என்றார்.
‘அவரை திமுகவில் இருந்து நீக்கியுள்ளார்களே..?’ என்று ஒரு நிருபர் கேட்டார். அதற்குப் பதிலளித்த கமல்ஹாசன், “பாராட்டுகள் திமுக.விற்கு” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT