Published : 18 Mar 2019 06:34 PM
Last Updated : 18 Mar 2019 06:34 PM

சிவகார்த்திகேயனின் அடுத்த படத் தலைப்பு ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’

சிவகார்த்திகேயனின் இரண்டாவது தயாரிப்புக்கு ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

‘சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, படங்களைத் தயாரித்து வருகிறார் சிவகார்த்திகேயன். முதல் படமாக அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவான ‘கனா’ படத்தை தயாரித்தார். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதனைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக முன்னணியில் இருக்கும் ரியோ நாயகனாக நடிக்கும் படத்தை தயாரித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இதனை ‘ஸ்மைல் சேட்டை’ யூ டியூப் சேனல்  கார்த்திக் இயக்கியுள்ளார்.

நாயகியாக ஷெரில் நடிக்க, நாஞ்சில் சம்பத், ராதாரவி, ஆர்ஜே விக்னேஷ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அத்துடன், யூ டியூப்பில் பிரபலமானவர்களை ஒன்றிணைத்து, இந்தப் படத்துக்காக ஒரு பாடலையும் படமாக்கியுள்ளனர். 

படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒளிப்பதிவாளராக யு.கே.செந்தில்குமார், எடிட்டராக ஒலிஃபர் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

இந்நிலையில், இந்தப் படத்துக்கு ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ எனத் தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு. எம்ஜிஆர் நடிப்பில் வெளியான ‘என் அண்ணன்’ படத்தில் இடம்பெற்றுள்ள பாடலின் முதல் வரி இது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x