Published : 04 Mar 2019 01:46 PM
Last Updated : 04 Mar 2019 01:46 PM
‘இளையராஜா 75’ நிகழ்ச்சியில் நடிகை ரோகிணியிடம் இளையராஜா கடுமையாக நடந்துகொண்டது சமூக வலைதளங்களில் விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.
இளையராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு ‘இளையராஜா 75’ என்ற நிகழ்ச்சியை நடத்தியது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம். கடந்த பிப்ரவரி 2 மற்றும் 3-ம் தேதிகளில், நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.வில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி, சன் டிவியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒளிபரப்பானது. அதில், நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய நடிகை ரோகிணியிடம் இளையராஜா கடுமையாக நடந்துகொண்டதைப் பார்த்து பலர் அதிர்ச்சி அடைந்தனர். அந்தப் பகுதியை சிலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, இளையராஜா செய்தது தவறு என்று தெரிவித்தனர்.
மேடையில், இளையராஜா, இயக்குநர் ஷங்கர் மற்றும் நடிகர் விக்ரம் ஆகியோர் இருக்கின்றனர். அப்போது நடிகை ரோகிணி, ''இயக்குநர் ஷங்கரிடம்) நீங்களும், ராஜா சாரும் இந்த மேடையில் இருக்கீங்க. உங்க ரெண்டு பேரோட காம்பினேஷனையும் பார்க்கணும்னு நிறைய பேருக்கு ஆவல் இருந்திருக்கும்'' என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே குறுக்கிட்ட இளையராஜா, “இப்படியெல்லாம் கேட்கக்கூடாதுமா... இப்படி கேட்கக்கூடாது. நீ சான்ஸ் கேட்குறியா எனக்கு?” என்று கேட்கிறார்.
“இல்ல... இல்ல... அப்படி இல்ல சார்...” என்கிறார் ரோகிணி.
“ஐ டோன்ட் லைக் திஸ். இப்ப ஏன் அந்த மேட்டர எடுக்குற நீ? அவருக்கு கம்ஃபர்ட்டபிளா இருக்குற ஆட்களை வச்சுக்கிட்டு அவரு வேலை பார்த்துக்கிட்டு இருக்காரு. அவரைப்போய் ஏன் டிஸ்டர்ப் பண்ற” என இளையராஜா சொல்கிறார்.
இளையராஜா இப்படி நடந்து கொண்டது குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT