Published : 02 Feb 2019 08:26 PM
Last Updated : 02 Feb 2019 08:26 PM

சிக்கலின்றி வெளியாகுமா மன்னவன் வந்தானடி?

செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள 'மன்னவன் வந்தானடி' படத்தின் வெளியீட்டில் சிக்கல் மேலும் அதிகரித்துள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம், அதிதி போகன்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் 'மன்னவன் வந்தானடி'. சுஷான்ந் பிரசாத், சித்தார்த் ராவ், செல்வராகவன், கீதாஞ்சலி செல்வராகவன் ஆகியோர் இணைந்து தயாரித்தனர். 80% வரை படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பைனான்ஸ் சிக்கலில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இப்படத்தைத் தொடர்ந்தே 'என்.ஜி.கே' படத்தை இயக்கி முடித்துள்ளார் செல்வராகவன். ’மன்னவன் வந்தானடி’ படத்தின் மொத்த உரிமையையும் வேறொரு தயாரிப்பு நிறுவனத்துக்கு விற்க, படத்தின் தயாரிப்பாளர்கள் முயற்சித்ததாகத் தெரிகிறது. ஆனால் படத்தின் நெகட்டிவ் உரிமை, டிஜிட்டல் உரிமை உள்ளிட்ட மொத்த உரிமையையும் ரேடியன்ஸ் மீடியா நிறுவனத்திடம் இருப்பதாக அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதனால் படத்தின் உரிமையை விற்க தயாரிப்பாளர்களுக்கு உரிமை இல்லை. இதைக் குறிப்பிட்டு தொடரப்பட்ட வழக்கில் 'மன்னவன் வந்தானடி' உரிமையை விற்க நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து வருண் மணியனுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளது.

எனவே, படத்தின் தயாரிப்பாளர்கள் வாங்கிய கடனை அடைத்த பிறகே 'மன்னவன் வந்தானடி' பட உரிமையை விற்க முடியும். அவ்வாறு விற்றால் மட்டுமே படத்தின் இதர படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்டப் பணிகளைத் தொடங்க முடியும். இதன் மூலம் 'மன்னவன் வந்தானடி' படத்துக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அனைத்து சிக்கல்களையும் கடந்து படம் வெளியாக சில காலமாகும் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x