Published : 10 Dec 2018 03:01 PM
Last Updated : 10 Dec 2018 03:01 PM
ரஜினி - ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் படத்துக்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
‘2.0’ படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிப்பில் ‘பேட்ட’ படம் ரிலீஸாக இருக்கிறது. வருகிற பொங்கல் விடுமுறையில் ரிலீஸாகும் இந்தப் படத்தை, கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, அனிருத் இசையமைத்துள்ளார். இதுதான் அனிருத் இசையமைத்துள்ள முதல் ரஜினி படம்.
சிம்ரன், த்ரிஷா இருவரும் ரஜினி ஜோடியாக நடித்துள்ள இந்தப் படத்தில், விஜய் சேதுபதி, நவாஸுதீன் சித்திக், சசிகுமார், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், ராம்தாஸ், ராமச்சந்திரன் எனப் பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘பேட்ட’ படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி ஹிட்டான நிலையில், நேற்று (டிசம்பர் 9) இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. ‘அடுத்த ஏ.ஆர்.ரஹ்மான் அனிருத்’ என தனுஷ் சொன்னதாக இந்த விழாவில் கூறினார் ரஜினிகாந்த்.
இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் தீம் மியூஸிக் நன்றாக வந்திருப்பதால், அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்துக்கும் அனிருத்தே இசையமைக்கப் போகிறார் என்கிறார்கள். இதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வரும் நிலையில், விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லைகா புரொடக்ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்து வெளியான ‘கத்தி’ படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதன் தயாரிப்பாளரும் லைகா என்பதால், அனிருத் இசையமைப்பது 99% உறுதி என்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT